ஹெல்த் காலண்டர் (மருத்துவம்)..!!

Read Time:17 Minute, 8 Second

சர்வதேச சிறுநீரக தினம் – மார்ச் 8

ஒவ்வோர் ஆண்டும் மார்ச் இரண்டாவது வியாழக்கிழமையன்று சர்வதேச சிறுநீரக தினம் (World Kidney Day) கடைபிடிக்கப்படுகிறது. சர்வதேச சிறுநீரக சங்கம் மற்றும் சர்வதேச சிறுநீரக அறக்கட்டளை கூட்டமைப்புகளின் கூட்டு முயற்சியால் இந்த ஆண்டு மார்ச் 8-ஆம் தேதி இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.
நமது ஒட்டுமொத்த உடல் நலனில் சிறுநீரகங்கள் ஆற்றும் முக்கியப் பங்கு பற்றியும், சிறுநீரக நோய்களின் பெருக்கம் மற்றும் தாக்கம் பற்றியும், உலக அளவில் இதனோடு தொடர்புடைய ஆரோக்கியப் பிரச்னைகளைக் குறைப்பது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த தினத்தின் முக்கிய நோக்கம்.

சிறுநீரக நோய்களின் அறிகுறிகள்

காய்ச்சல், சிறுநீர் கழிக்கும்போது வலி அல்லது எரிச்சல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீரில் ரத்தம், படுக்கையில் சிறுநீர் கழித்தல், கண், முகம், கால் மூட்டுகளைச் சுற்றி வீக்கம், ரத்தத்துடன் வயிற்றுப்போக்கு, களைப்பு, பசியின்மை, வயிற்றுவலி போன்றவை சிறுநீரக நோயின் அறிகுறிகள். பொதுவாக சிறுநீரக நோய் கடுமையானதாக அல்லது நீடித்ததாக இருக்கும். இந்நோய் திடீரென உருவாகவும் வாய்ப்புள்ளது. இந்நோய் குறுகிய நாட்கள்வரை இருந்து சிகிச்சையினால் குணமடையவோ அல்லது நீண்ட நாட்கள்வரை தொடர்ந்து இறுதியில் மிக மோசமான நிலைக்குச் செல்வதற்கும் வாய்ப்புள்ளது.

சிறுநீரக நோய் ஏற்படுவதற்கான சில காரணங்கள்

பிறவிக் குறைபாடுகள், காயம், சிறுநீர் அடைப்பு, தொற்று, மரபியல், மண்டலம் சார் நோய்கள் போன்றவை சிறுநீரக நோய் ஏற்படுவதற்கான சில காரணங்கள்.

சிறுநீரக நோய்களைத் தடுக்க என்ன செய்யலாம்?

சிறுநீரக நோய்க்கான காரணங்களைப் பொறுத்தே சிகிச்சை கொடுக்கப்படுகிறது. இதுபோன்ற நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதற்குரிய மருத்துவரின் ஆலோசனைப்படியே உணவு உட்கொள்ள வேண்டும். இது அவர்கள் உட்கொள்ளும் உணவிலுள்ள பொருட்கள் சிறுநீரக செயல்பாட்டைப் பாதிக்காமல் இருக்க உதவியாக இருக்கும். இந்நோய்க்கான அறிகுறிகள் தெரிந்தவுடன் ஆரம்ப நிலையிலேயே அதற்குரிய சிகிச்சைகளை எடுத்துக் கொள்வது நல்லது. இது சிறுநீரக செயலிழப்பைத் தடுக்க உதவியாக இருக்கும்.

No Smoking Day – மார்ச் 14

உலகெங்கிலும் உள்ள புகைப் பிடிப்பவர்கள் அந்த புகைப் பழக்கத்தை விட்டொழிக்க அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் மார்ச் இரண்டாவது புதன்கிழமை புகைப்பற்ற தினம் (No Smoking Day) கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு மார்ச் 14 அன்று இந்த சிறப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. ஆனால் நீங்கள் நினைத்தால் ஆண்டின் எந்த நாளிலும் உங்கள் புகைப் பழக்கத்தை விட்டொழிக்க முடியும். சிகரெட் மற்றும் பிற வடிவங்கள் மூலம் புகையிலையை உட்கொள்வதால் ஏற்படுகிற உடல்நலத் தீங்குகள் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதே இந்த தினத்தின் முக்கிய நோக்கம்.

புகையிலையைப் புகைப்பது அல்லது மென்று சுவைப்பது போன்ற எந்த வடிவத்தில் எடுத்துக் கொண்டாலும் அது உடல் நலனுக்கு உகந்ததல்ல. இதனால் ஏற்படும் உடல்நல பிரச்னைகள் நாம் அனைவரும் அறிந்ததே. தற்போது 12 முதல் 17 வயது வரையுள்ள ஆயிரக்கணக்கான இளம் பிள்ளைகள் புகைப்பிடிக்கும் பழக்கத்தை ஆரம்பிக்கின்றனர். இவர்களில் சிலர் இதை அறிந்து கொள்ளும் ஆர்வத்தினாலும், சிலர் தான் வளர்ந்து விட்டதாகத் தோற்றம் அளிக்க விரும்புவதினாலும் இந்தப் பழக்கத்தைத் தொடங்குகின்றனர்.

புகைப் பழக்கத்தால் ஏற்படும் உடல்நல பிரச்னைகள்

புகைப் பழக்கத்துக்கு ஆளானவர்களுக்கு இருமலோடு தொண்டை எரிச்சல் ஏற்படும். தொடர்ந்து வாய் துர்நாற்றம் மற்றும் உடைகளில் துர்நாற்றம் உண்டாகும். தோலில் படை, பல் நிறமாற்றம் போன்றவற்றிற்கு வழிகோலும். நாட்கள் செல்லச் செல்ல நுரையீரல் அழற்சி, நிமோனியா, பக்கவாதம், வாய்ப் புற்றுநோய் போன்ற தீவிரமான உடல்நலப் பிரச்னைகள் உண்டாகிறது. மரணத்தை ஏற்படுத்தும் காரணங்களில் பெரிய அளவில் தடுக்கப்பட வேண்டிய ஒன்று புகைப் பழக்கம். இதய நோய்கள் மற்றும் நுரையீரல் புற்றுநோய் போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களுக்கு இப்பழக்கம் ஒரு முக்கியக் காரணமாக இருக்கிறது.

புகைப் பழக்கத்தை விட்டொழிக்க என்ன செய்யலாம்?

புகையிலைப் பொருட்களில் நிக்கோட்டின் என்கிற வேதிப் பொருள் உள்ளது. பல ஆண்டுகளாக புகைப் பிடிப்பவர்கள் அதற்கு அடிமையாகி விடுவதற்கும், அவர்கள் அப்பழக்கத்திலிருந்து மீண்டு வருவதை கடுமையானதாக மாற்றுவதற்கும் இந்த வேதிப் பொருளே முக்கியக் காரணமாக உள்ளது. நீங்கள் எந்த வயதினராக இருந்தாலும் அல்லது எவ்வளவு நாட்கள் புகை பிடிப்பவராக இருந்தாலும் அப்பழக்கத்தை விட்டொழித்த உடனேயே உங்கள் ஆரோக்கிய பலன் தொடங்கிவிடுகிறது.

இப்பழக்கத்தை விட்டொழிக்க முதலில் நீங்கள் அந்த எண்ணத்தில் உறுதியாக இருக்க வேண்டும். தீர்மானம் எடுத்த பின் அடுத்தவர்கள் இச்சை உண்டாக்க அனுமதிக்கக் கூடாது. அதோடு சரியான அணுகுமுறையைப் பின்பற்றுவதோடு, பொறுமையும் மன உறுதியும் இருந்தால் கண்டிப்பாக உங்களால் இப்பழக்கத்தை விட்டொழிக்க முடியும். இது ஒரே நாளில் முடியாது என்றாலும் படிப்படியாக முன்னேற்றம் ஏற்படும். புகையிலையை விட்டுவிட விரும்புகிறீர்கள். ஆனால் எப்படி விடுவது என்ற குழப்பத்தில் இருக்கிறீர்களா?

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் இடைநிறுத்தத் திட்டத்தில் சேருங்கள். புகையிலையை புகைப்பது மற்றும் மெல்வது போன்ற பழக்கத்தை விட்டொழிக்க விரும்புபவர்கள் 011-22901701 என்ற எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால் கொடுத்து பதிவு செய்து கொள்ளலாம். மேலும் http://www.nhp.gov.in/quit-tobacco என்ற இணையதள முகவரியில் உங்களுடைய அலைபேசி எண் மற்றும் மின்அஞ்சல் முகவரியைப் பதிவு செய்து கொள்ளலாம்.

அதன் பின்னர் ஒரு இரு வழி குறுஞ்செய்தி செயல்முறை தொடங்கும். தேசிய தகவலியல் மையத்தால் ஒதுக்கப்பட்டுள்ள குறுங்குறியீட்டு எண் (5616115) மூலம், ‘இப்போதே விட்டொழிப்பீர்’ என்னும் வரவேற்புக் குறுஞ்செய்தி, பதிவு செய்துள்ள பயனாளிக்கு முதலில் வரும். இதைத் தொடர்ந்து மேலும் பல குறுஞ்செய்திகள் தொடர்ந்து வரும். அவற்றில் சில பதில் அளிக்கும்படியான வேண்டுகோளோடு வரும்.

இத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும், தொடர்ந்து புகையிலையின் தீய விளைவுகளைப் பற்றி பல்வேறு மக்களுக்கு எடுத்துச் செல்லவும் தனியாக [email protected] என்னும் மின் அஞ்சல் முகவரி உருவாக்கப்பட்டுள்ளது. புகைப் பழக்கத்தை விட்டொழிக்க முடிவு செய்தவர்கள் இத்திட்டத்தில் உங்களை இணைத்துக் கொள்ளுங்கள். கண்டிப்பாக மனம் இருந்தால் சரியான மார்க்கம் அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

சர்வதேச கண்ணழுத்த நோய் வாரம் மார்ச் 11 – 17

கண்ணழுத்த நோய் குறித்த விழிப்புணர்வை மக்களிடத்தில் அதிகரிக்கச் செய்வதோடு, பார்வை இழப்பு அதிகரிப்பைத் தடுப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டு இந்த ஆண்டு மார்ச் 11 முதல் 17 ஆம் நாள் வரை சர்வதேச கண்ணழுத்தநோய் வாரம் (World Glaucoma Week) அனுசரிக்கப்படுகிறது. கண்ணுக்குள் உள்ள திரவத்தின் அழுத்தம் அதிகரிப்பதால், கண் நரம்புகளில் ஏற்படும் பிரச்னைகளை கண்ணழுத்த நோய் என்கிறோம். கண்ணின் ஒரு பகுதியில் ஏற்படும் தடங்கலே இந்நோய்க்குக் காரணம்.

இந்தத் தடையின் காரணமாக கண்ணிலிருந்து திரவம் வெளியேற முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் உள்விழி அழுத்தம் அதிகரிக்கிறது. பலருக்குப் பல ஆண்டுகளாக கண்ணழுத்தம் இருந்து வந்தாலும் எந்தச் சிதைவும் ஏற்படுவதில்லை. ஆனால் ஒரு சிலருக்குக் குறைந்த கண் அழுத்தத்திலும் கண் சிதைவு உண்டாக வாய்ப்புள்ளது. இதற்கு உடனடியாக சரியான நேரத்தில் சிகிச்சை செய்யாவிட்டால் கண் நரம்புகளில் சேதம் ஏற்பட்டு நாளடைவில் பார்வையிழப்பு ஏற்படக்கூடும்.

கண்ணழுத்த நோயின் வகைகள் மற்றும் அறிகுறிகள்

1. நாள்பட்ட திறந்த-கோண கண்ணழுத்த நோய்

இது மிகவும் பரவலாக காணப்படுகிற ஓரு வகை. இது பாதிக்கப்பட்டவர்களிடம் மெதுவாக அதிகரிப்பதால் காணும்படியான எந்த அறிகுறியும் இருப்பதில்லை. இதில் முதலில் பக்கப்பார்வை பாதிக்கப்படுவதால், தங்கள் பார்வை பாதிக்கப்பட்டுள்ளதை அவர்களால் அறிய முடிவதில்லை. இதில் விழியின் புறவட்டத்திலிருந்து மையத்தை நோக்கி மெதுவாகப் பார்வையிழப்பு ஏற்படுகிறது. பொதுவாக பார்வை மாற்றம் வயதோடு தொடர்புடையது என்பதால் உங்கள் கண்களை முறையாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

2. முதன்மை மூடிய-கோண கண்ணழுத்த நோய்

இது மிக அபூர்வமான ஒரு வகை. இது பாதிக்கப்பட்டவர்களிடம் மெதுவாகவும் (நாட்பட்டது), விரைவாகவும் (கடுமையானது), திடீரெனவும் உண்டாகிறது. இதனால் வலியைத் தருகிற கண்ணழுத்தம் உண்டாகிறது. இந்த வகையின் அறிகுறிகள் வேகமாக உருவாகின்றன. கடுமையான வலி, கண் சிவந்துபோதல், தலைவலி, கண் பகுதியில் தோல் மென்மையாதல், ஒளியைச் சுற்றி வானவில் போன்ற வளையம் தென்படுதல், பார்வை மங்குதல், ஒரு கண்ணிலோ அல்லது இரண்டிலுமோ பார்வையிழப்பு வேகமாக அதிகரித்தல் போன்றவை இதன் அறிகுறிகளாகும்.

3. இரண்டாம்நிலை கண்ணழுத்த நோய்

இது கண்ணில் ஏற்படும் காயத்தாலும், விழி நடுபடல அழற்சியாலும் உண்டாகிறது. பொதுவாக கணணழுத்த நோயின் அறிகுறிகளும் பிற கண் நோய் அறிகுறிகளும் ஒன்று போலவே தோன்றும். உதாரணமாக விழி நடுபடல அழற்சியால் கண் மற்றும் தலை வலி உண்டாவதை சொல்லலாம்.

4. வளர்ச்சிநிலை அல்லது பிறவி கண்ணழுத்த நோய்

இந்த வகையும் மிக அரிதான ஒன்றே. ஆனால் இது ஆபத்தானது. இது பிறப்பிலேயே இருக்கும் அல்லது பிறந்து சிறிது காலத்தில் உருவாகும். இது விழியின் ஒரு அசாதாரண நிலையால் ஏற்படுகிறது. இளம் வயது காரணமாக இதன் அறிகுறிகளைக் கண்டறிவது கடினம். இருந்தபோதும் கண்ணழுத்தம் காரணமாக கண்கள் பெரிதாதல், ஒளிக்கூச்சம், கண்களில் நீர் வடிதல், கண் துடிப்பு, மாறுகண் போன்ற அறிகுறிகள் தென்படலாம்.

நோய்க் காரணிகள்

வயது: வயதானவர்களுக்கு கண்ணழுத்தநோய் ஏற்படும் அபாயம் அதிகம்.
மக்கள் இனம்: ஆப்பிரிக்கா அல்லது ஆப்பிரிக்க கரீபியன் இனத்தவர்களுக்கு நீடித்த திறந்த-கோண கண்ணழுத்தநோய் உண்டாகும் வாய்ப்புகளும், ஆசிய இனத்தவர்களுக்கு கடும் மூடிய-கோண கண்ணழுத்தநோய் உண்டாகும் வாய்ப்புகளும் உள்ளது.

மருத்துவ வரலாறு

நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கு கண்ணழுத்தநோய் உண்டாகும் வாய்ப்புகள் அதிகமுள்ளது. கண்ணில் மிகை அழுத்தம் இருப்பவர்களுக்கு நீடித்த திறந்த-கோண கண்ணழுத்தநோய் ஏற்படலாம்.

குடும்ப வரலாறு

பெற்றோர் மற்றும் உடன் பிறந்தவர்களுக்கு இந்நோய் இருந்தால், அந்த குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களுக்கும் இந்நோய் ஏற்படும் ஆபத்து உள்ளது. கண் பரிசோதனையும், சிகிச்சையும் உள்விழி அழுத்தத்தை அழுத்தமானியால் அளக்கலாம். கண்ணின் அளவு, வடிவம் போன்றவற்றை பரிசோதிக்க வேண்டும். முன்விழியறை கோணச் சோதனை மற்றும் விழிநரம்பு ஆய்வு மூலம் கண் சிதைவுகள் பரிசோதனை செய்யப்படுகிறது. கண் சொட்டு மருந்துகள் மூலம் உள்விழி அழுத்தத்தைக் குறைக்கலாம்.

இந்த கண் அழுத்தத்துக்குக் காரணமாக உள்ள கண் திரவம் உற்பத்தியாவதைக் குறைப்பதற்கும், அளவுக்கு அதிகமாக உள்ள அந்த கண் திரவத்தை வெளியேற்றுவதற்கும் உரிய சிகிச்சைகள் மருத்துவரால் பரிந்துரை செய்யப்படும். கண்ணழுத்த நோய் தீவிரமடைவதால் ஏற்படும் முக்கியப் பிரச்னை பார்வையிழப்பு. எனவே இதன் அறிகுறிகள் தென்படத் தொடங்கிய ஆரம்ப நிலையிலேயே கண் மருத்துவரின் ஆலோசனைப்படி உரிய பரிசோதனைகள் செய்து சிகிச்சைகளைப் பெறுவதன் மூலம் பார்வையிழப்பு பிரச்னையைத் தவிர்க்கலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வானவில் சந்தை(மகளிர் பக்கம்)..!
Next post இராணுவ வாகனம் மோதி இளைஞர் பலி!!