டவுட் கார்னர் !!(மகளிர் பக்கம்)
எனக்கு 42 வயதாகிறது. இந்த வயதில் என்னால் தாய்மை அடைய இயலுமா? தாய்மை அடைந்தாலும் இயற்கையான முறையில் எந்தப் பிரச்னைகளும் இன்றி குழந்தையை பிரசவிக்க இயலுமா?
– எஸ்.தேவிகா, பெங்களூர்.
பதிலளிக்கிறார் மகப்பேறு மற்றும் மகளிர் நல சிறப்பு மருத்துவர் கௌரி மீனா…
“இந்த வயதில் இயற்கையாகக் கருத்தரிப்பதில் நிறைய பிரச்னைகள் இருக்கின்றன. மருத்துவ உதவி மூலம்தான் கர்ப்பம் தரிக்க இயலும். அது மட்டுமின்றி இந்த வயதில் ரத்த அழுத்தம், தைராய்டு பிரச்னைகள், நீரிழிவு, இதய நோய்கள் இருக்கலாம். கர்ப்பம் தரிக்கும்போது அப்பிரச்னைகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. சுகப்பிரசவத்துக்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்பதால் சிசேரியன் மூலம்தான் குழந்தையை பிரசவிக்க முடியும். குறைப்பிரசவம், எடை குறைந்த குழந்தை, இரட்டைக்குழந்தை, மரபணுக் கோளாறுள்ள குழந்தை பிறப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
நஞ்சுப்பை கர்ப்பப்பைக்கு அருகில் அமைந்தால் ரத்தப்போக்கு ஏற்படலாம். குழந்தை பிறப்பின்போது ஏற்படும் ரத்தப்போக்கின் அளவும் அதிகரிக்கலாம். இந்த வயதில் தாய்மை அடைய முடியாது என்றில்லை. தாராளமாக தன் சொந்த மரபணுவில் உருவான சிசுவை தன் கருப்பையிலேயே சுமந்து பிரசவிக்கலாம். ஆனால் வருமுன் காக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பிரச்னைகள் வந்தாலும் அதற்கான சிகிச்சைகள் இருக்கின்றன. மருத்துவ உதவியை நாடினால் இந்த வயதில் சர்வ நிச்சயமாக நீங்கள் தாயாக முடியும்”.
Average Rating