அதிபர் டிரம்ப் அறிவிப்பு சிரியாவில் இருந்து விரைவில் அமெரிக்க ராணுவம் வாபஸ்!!(உலக செய்தி)
‘‘சிரியாவில் இருந்து மிக விரைவில் அமெரிக்க ராணுவம் வாபஸ் பெறப்படும்’’ என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளை அழிக்கும் அந்நாட்டின் முயற்சிக்கு அமெரிக்க ராணுவம் உதவி வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதிபர் டிரம்ப் பேசியதாவது: சிரியாவில் இருந்து ஐஎஸ் தீவிரவாதிகளை ஒழிக்க, அமெரிக்க ராணுவம் தனது அனைத்து வளங்களையும் பயன்படுத்தி வருகிறது. சிரியாவில் உள்ள ஐஎஸ் தீவிரவாதிகளை மரணத்தின் கதவை நாம் தட்ட வைத்துள்ளோம். இதையடுத்து, நம்முடைய ராணுவம் வெகு விரைவிலேயே சிரியாவில் இருந்து வெளியேற உள்ளது. மற்றவர்கள் அந்த பொறுப்பை எடுத்துக் கொள்ளட்டும். மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்க ராணுவம் முகாமிட்டு போரிட்டு வருகிறது. இதனால், நாம் ரூ.455 லட்சம் கோடியை வீணாக செலவழித்துள்ளோம்.
அங்கு நாம் ஒரு பள்ளியை கட்டுவோம். அவர்கள் அதை அழிப்பார்கள். நாம் மீண்டும் கட்டுவோம். அவர்கள் மீண்டும் அழிப்பார்கள். இப்படியேதான் நடந்து வருகிறது. நம்முடைய ஓஹியோவின் பள்ளியில் ஒரு ஜன்னலை அமைப்பதற்குகூட நம்மால் நிதியை திரட்ட முடியவில்லை. இதேபோல் பென்சில்வேனியா மற்றும் ஐயோவாவில் பள்ளியை அமைக்க நிதி கிடைப்பதில்லை. மத்திய கிழக்கில் ரூ.455 லட்சம் கோடியை செலவழித்துள்ளோம். அதற்கு நமக்கு என்ன கிடைத்துள்ளது? ஒன்றுமில்லை. எண்ெணய் கூட கிடைக்கவில்லை. மாறாக ஐஎஸ் தீவிரவாதிகளுக்குதான் அதிகமாக எண்ணெய் மூலம் வருமானம் கிடைக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
Average Rating