ஒரே நபருக்கு பல்வேறு பிரிவின் கீழ் எச்1பி விசா கேட்கும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் : அமெரிக்கா எச்சரிக்கை!!
‘‘ஒரே நபருக்கு பல்வேறு பிரிவின் கீழ் எச்1பி விசா கோரி தாக்கல் செய்யப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்’’ என அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவை (யுஎஸ்சிஐஎஸ்) துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் தங்கி பணியாற்ற எச்1பி விசா வழங்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் பணிபுரிய விரும்பும் இந்திய ஐடி ஊழியர்களுக்கு இந்த விசா மிகப்பெரிய வரப்பிரசாதமாக உள்ளது. அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகு எச்1பி விசா நடைமுறையில் பல்வேறு கெடுபிடிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்நிலையில், வரும் அக்டோபர் 1ம் தேதி தொடங்கும் 2019ம் நிதியாண்டுக்கான எச்1பி விசா விண்ணப்பங்கள் வரும் 2ம் தேதி முதல் பெறப்பட உள்ளன. இதில் ஏற்கப்படும் விண்ணப்பங்கள் தற்காலிக அடிப்படையில் தேர்வு செய்யப்படும். இது தொடர்பாக விசா விதிமுறைகள் குறித்து அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவை துறை நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ‘விசா கோரி விண்ணப்பிக்கும் நிறுவனங்கள் ஒரே ஊழியருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட மனுக்களை செய்தால் அவை நிராகரிக்கப்படும்’ என எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொதுவாக, நிறுவனங்கள் தங்களுக்கு தேவைப்படும் ஊழியர்களுக்கு, அவர் நிபுணத்துவம் பெற்ற ஒன்றுக்கும் மேற்பட்ட பிரிவில் மனுக்களை தாக்கல் செய்யும். அதன் மூலம், ஏதேனும் ஒரு பிரிவில் சம்பந்தப்பட்ட ஊழியருக்கு விசா கிடைத்து விடும். இந்த நடைமுறை இனி எடுபடாது. இதேபோல், எச்1பி விசா பெற்றவர்கள் தங்கள் கணவன் அல்லது மனைவியை அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லலாம். அவர்களுக்கு எச்4 விசா வழங்கப்படும். அதன் மூலம் அவர்கள் அங்கு பணியாற்றலாம். இந்த நடைமுறையிலும் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது. எச்4 விசா வைத்திருப்பவர்கள், பணியாற்றுவதற்கான அனுமதியை (இஏடி) பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த அனுமதி, எச்1பி விசா பெற்று கிரீன்கார்டுக்கு விண்ணப்பித்தவர்களின் கணவன், மனைவி மட்டுமே பெற முடியும். இல்லாவிட்டால், எச்4 விசா வைத்திருப்பவர்கள் சொந்த நாட்டுக்கு திரும்ப வேண்டி வரும். இந்த நடைமுறை அடுத்த ஆண்டில் சட்டமாக்கப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே, எச்4 விசா வைத்திருப்பவர்கள் எச்1பி விசா கோரி அதிகளவில் இம்முறை விண்ணப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் விசா கோரி விண்ணப்பிக்கலாம் என கூறப்படுகிறது. ஆண்டுதோறும் 85 ஆயிரம் இந்தியர்களுக்கு எச்1பி விசா வழங்கப்பட்டு வருகிறது.
Average Rating