சீன ராணுவத்தில் 3 லட்சம் பேர் குறைப்பு : மொத்த எண்ணிக்கை 20 லட்சமானது!!(உலக செய்தி)
ராணுவத்தில் இருந்து 3 லட்சம் வீரர்களை நீக்கும் நடவடிக்கை திட்டமிட்டப்படி முடிந்து விட்டதாக சீனா அறிவித்துள்ளது. இதன்மூலம், சீன ராணுவத்தில் இப்போதுள்ள வீரர்களின் எண்ணிக்கை 20 லட்சமாக குறைந்தது. சீன ராணுவத்தை நவீனமயமாக்கும் திட்டங்களுக்கு அந்நாட்டு அதிபர் ஜின்பிங் அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார். உலகிலேயே இல்லாத வகையில் சீன ராணுவத்தில் மட்டும்தான் ஏவுகணை பிரிவுக்கு என தனிப்படை உருவாக்கப்பட்டுள்ளது. ‘மக்கள் விடுதலைப் படை’ என அழைக்கப்படும் சீன ராணுவம், உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான வீரர்களை கொண்டது. கடந்த 1980-ம் ஆண்டுகளில் சீன ராணுவத்தில் 45 லட்சம் வீரர்கள் இருந்தனர். பின்னர், 1985ல் இது முப்பது லட்சமாகவும், பின்னர் 23 லட்சமாகவும் குறைக்கப்பட்டது.
கடந்த 2015ல் நடந்த ராணுவ அணிவகுப்பில் பேசிய அதிபர் ஜின்பிங், வீரர்களின் எண்ணிக்கையில் மேலும் 3 லட்சம் குறைக்கப்படும் என அறிவித்தார்.
அப்போது முதல் வீரர்களை குறைக்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டது. இந்நிலையில், தலைநகர் பீஜிங்கில் சீன ராணுவ தகவல் தொடர்பாளர் ரென் குவாகியாங் நேற்று அளித்த பேட்டியில், ‘‘ராணுவத்தில் இருந்து 3 லட்சம் வீரர்களை குறைக்கும் நடவடிக்கை முடிந்து விட்டது. இது அதிபர் ஜின்பிங் எடுத்த மிகவும் முக்கிய அரசியல் முடிவாகும். தரைப்படை வீரர்களின் எண்ணிக்கை 10 லட்சமாக குறைக்கப்படும். உலகளவில் ஆதிக்கம் செலுத்தும் வகையில், சீன கடற்படைக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படும். ராணுவத்தை நவீனமயமாக்கும் நடவடிக்கைகள் தொடரும்’’ என்றார்.
Average Rating