சீனாவின் செயலிழந்த விண்வெளி ஆய்வுக்கூடமான டியான்காங்-1 எரிந்து பசிபிக் கடலில் விழுந்தது!!
சீனாவின் செயலிழந்த விண்வெளி ஆய்வுக்கூடமான டியான்காங்-1 இன் பாகங்கள் பசிபிக் கடலில் எரிந்த நிலையில் விழுந்தன. கடந்த 2011ம் ஆண்டு செப்டம்பர் மாதம், 29ம் தேதி ‘டியான்காங்-1’ என்ற விண்வெளி நிலையத்தை லாங் மார்ச் 2 எப்/ஜி ராக்கெட் மூலம் சீனா விண்ணில் ஏவி, நிறுவியது. இதுதான் சீனாவின் முதல் விண்வெளி ஆய்வுக்கூடம் ஆகும். இந்த விண்வெளி மையம் தனது முக்கியப்பணிகளை 2013ம் ஆண்டு, ஜூன் மாதம் முடித்துக்கொண்டது. இதன் ஆயுட்காலம் வெறும் 2 ஆண்டுகள் தான்.
கடந்த 2013ம் ஆண்டு இந்த ஆய்வு மையத்தின் பணிகள் முடிந்துவிட்டன. இந்த நிலையில் ‘டியான்காங்-1’ தனது பணிகளை முடித்துக்கொண்டு செயலற்றுப்போய்விட்டது என சீனா, கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம் 21ம் தேதி அறிவித்தது. இதையடுத்து டியான்காங்-2 என்ற ஆய்வு மையத்தை சீனா கடந்த 2016ம் ஆண்டு விண்ணுக்கு அனுப்பியது. இது செயல்பாட்டில் உள்ளது. செயலிழந்த நிலையில் பூமியை சுற்றிக்கொண்டிருந்த டியான்காங்-1 ஆய்வு மையம் கொஞ்சம் கொஞ்சமாக இடம் பெயர்ந்து மீண்டும் பூமியில் விழும் நிலையில் இருந்து வந்தது.
இதன் எடை 8 டன் ஆகும். இந்த விண்வெளி நிலையத்தின் பாகங்கள், இன்று(திங்கட்கிழமை) பூமியில் வந்து விழும் என்று விஞ்ஞானிகள் கணித்து இருந்தனர். அதன்படி, விண்வெளி ஆய்வுக்கூடத்தின் பாகங்கள் பசிபிக் கடலில் விழுந்ததாக சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். புவியின் மேற்பரப்பில் விண்வெளி ஓடத்தின் பாகங்கள் நுழைந்ததும் காற்றின் உராய்வால் தீ பிடித்து எரிந்து பசிபிக் கடலில் விழுந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
Average Rating