புலிகளுக்கு நிதி சேகரித்த மற்றுமொரு சந்தேகநபர் அவுஸ்திரேலியாவில் கைது!
அமெரிக்காவில் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் துளசிதரன் சந்திரராஜா என்பவரை அவுஸ்திரேலிய பொலிஸார் கைது செய்துள்ளதாக அந்நாட்டின் தேசிய பத்திரிகையான ‘த ஒஸ்ட்ரேலியன்” தெரிவித்துள்ளது. இது குறித்து அப்பத்திரிகையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அமெரிக்க மத்திய விசாரணைப் பணியகத்தின் வேண்டுகோளுக்கிணங்க நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட 34 வயதுடைய இந்த சந்தேக நபர் அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள வியாபார கற்கை நிறுவனத்தின் பணிப்பாளராகக் கடமையாற்றி வந்துள்ளார். அமெரிக்காவில் புலிகளுக்கு நிதி சேகரிப்பில் ஈடுபட்டமை குறித்து தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வந்த விசாரணைகளையடுத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்குப் புலிகளின் பயங்கரவாதச் செயல்களுடன் தொடர்பு இருப்பதாகவும் புலிகளுக்கு நிதி சேகரிக்கும் பணியில் இவர் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் அவுஸ்திரேலிய சமஷ்டி சட்டமா அதிபர் ரொபர்ட் மெக்லேன்ட் தெரிவித்துள்ளார். இவரது வீடு, வர்த்தக நிலையம் மற்றும் இவரது காரியாலயம் என்பவற்றையும் அவுஸ்திரேலியப் பொலிஸார் சோதனையிட்டு;ளளனர். மெல்போர்ன் நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட்ட இவரை ஒரு மாத காலத்துக்கு விளக்க மறியலில் வைக்குமாறு சட்டமா அதிபர் உத்தரவிட்டுள்ளதாகவும் அப்பத்திரிகைச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Average Rating