அணுஆயுத சோதனை நிறுத்தம் : வடகொரியா அதிபர் அறிவிப்புக்கு டிரம்ப் வரவேற்பு!!( உலக செய்தி)
வடகொரியாவில் இனி அணு ஆயுதங்கள் தயாரிக்கப்படாது என அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் திடீரென அறிவித்துள்ளார். சர்வதேச நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா ஏவுகணை சோதனைகளையும், அணுகுண்டு சோதனைகளையும் தொடர்ந்து நடத்தி வருந்தது. அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்பும், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் முதன்முறையாக வரும் மே மாதம் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் அணு ஆயுத சோதனை மற்றும் தொலைதூரம் சென்று தாக்கும் ஏவுகணை சோதனையை நிறுத்துவதாக வடகொரியா அறிவித்துள்ளார். ஏப்ரல் 21 முதல் அணு ஆயுத சோதனை முற்றிலும் நிறுத்தப்படும் என அறிவித்துள்ள அதிபர் கிம் ஜாங் உன், அணு ஆயுத சோதனை தளத்தை மூடவும் உத்தரவிட்டுள்ளார்.
வடகொரியாவின் அணுஆயுத சோதனைகள் நிறுத்தப்படும் என்ற அறிவிப்புக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் உட்பட பல்வேறு நாட்டு தலைவர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு வடகொரியாவுக்கு மட்டுமல்லாது, உலக வளர்ச்சிக்கும் இது உதவும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். சமீபத்தில் தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு தனது நாட்டு அணியை அனுப்பிய வடகொரியா, தென்கொரியா அரசு பிரதிநிதிகளுடன் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது. வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன், தென் கொரிய அதிபர் மூன் ஜே ஆகியோர் விரைவில் சந்தித்து பேச உள்ள நிலையில் கிம் ஜாங் உன்னின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
Average Rating