புதிய விசா நடைமுறை அறிமுகம் இந்திய ஆராய்ச்சி மாணவர்கள் எளிதில் இங்கிலாந்து செல்லலாம்!!
இந்திய ஆராய்ச்சி மாணவர்கள், இங்கிலாந்தில் பணியாற்றவும், பயிற்சி மேற்கொள்வதையும் எளிதாக்கும் வகையில் புதிய விசா நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இங்கிலாந்தில் ஆராய்ச்சி படிப்புக்காக காமன்வெல்த் கல்வி உதவித்தொகை பெறும் மாணவர்கள் உட்பட 60 பிரிவினருக்கு ‘டையர் 5’ விசா வழங்கப்பட்டு வருகிறது. இதில் தற்போது ‘அறிவியல், ஆராய்ச்சி, உயர்கல்வி திட்டம்’ என்ற புதிய பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்தியா உள்ளிட்ட ஐரோப்பிய யூனியனில் சேராத வெளிநாடுகளில் இருந்து திறமையான ஆராய்ச்சி மாணவர்கள், அறிவியல் நிபுணர்கள் இங்கிலாந்தில் பணியாற்றவும், பயிற்சி பெறவும் வழி வகை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த விசா மூலம் 2 ஆண்டுக்கு இங்கிலாந்தில் தங்கி ஆராய்ச்சி மற்றும் பயிற்சியில் ஈடுபட முடியும்.
இந்த புதிய விசா நடைமுறையை தொடங்கி வைத்த இங்கிலாந்தின் குடியேற்றத்துறை அமைச்சர் கரோலின் நோகிஸ் கூறுகையில், ‘‘ இங்கிலாந்தில் இனி சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் எளிதாக பணியாற்றுவதும், பயிற்சி பெறுவதும் எளிதாக்கப்பட்டுள்ளது. குடியேற்றத் துறையின் இந்த முயற்சி, சர்வதேச அறிவியல் நிபுணர்களை நிச்சயம் ஈர்க்கும்’’ என்றார். இங்கிலாந்தின் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு மையத்தின் கீழ் 7 ஆராய்ச்சி கவுன்சில்கள் உள்ளன. இதுதவிர, இந்த மையத்தின் அங்கீகாரம் பெற்ற இயற்கை வரலாற்று மியூசியம் போன்ற 12 ஆராய்ச்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இனி இந்த அமைப்புகள், புதிய விசா மூலமாக திறமையான வெளிநாட்டு மாணவர்களுக்கு நேரடியாக உதவித்தொகை வழங்கி இங்கிலாந்தில் பணி மற்றும் பயிற்சி அளிக்கலாம்.
Average Rating