யோகாவில் வித்தை!!(மகளிர் பக்கம்)
யோகா மூலம் தன் உடலை ரப்பர் போல பின்னி, உடலை வில்லாய் வளைத்து, குறுக்கி வித்தை காட்டுகிறார் வைஷ்ணவி. கண் இமைக்கும் இடைவெளியில் சட்சட்டென்று ஆசனங்களை மாற்றி மாற்றி போட்டு செய்து காட்டுகிறார் இந்தக் குட்டிப் பெண். சமீபத்திய சாதனையாக யோகா மூலம் இவர், அரை மணி நேரத்தில 596 யோகாசனங்களை செய்து அனைவரையும் அசத்தி இருக்கிறார். ஏற்கனவே 60 நொடிகளில் 64 யோகாசனங்களை செய்து சாதனை நிகழ்த்தி முடித்திருக்கிறார். இவர் யோகா செய்யும் அழகை பார்ப்பவர்கள் அனைவரும் விழிகள் விரிய, சொல்ல வார்த்தையற்று பிரமித்து நிற்கிறார்கள்.
“ஒன்பது வயதில் நான்காம் வகுப்பு படிக்கும்போது, நான் படித்த பள்ளியில் எனக்கு யோகா சொல்லிக் கொடுத்தார்கள். அப்போது சாதாரணமாகத்தான் யோகா செய்யத் துவங்கினேன். என் உடலின் வளைவுகளை கவனித்த எனது யோகா ஆசிரியர் என்னை கூடுதல் கவனம் எடுத்து யோகா கற்றுக்கொள்ள வலியுறுத்தினார். எனவே தொடர்ந்து யோகாவிற்கு முக்கியத்துவம் கொடுத்து, சிறப்பு வகுப்பில் இணைந்து யோகா கற்றுக்கொள்ள துவங்கினேன்.யோகாவில் ஆர்வமாகி தொடர்ந்து ஈடுபாட்டுடன் செயல்பட்டு, இந்த நிலையினை எட்டியிருக்கிறேன்” என்கிறார் இவர். இதுவரை 200க்கும் மேற்பட்ட மேடைகளில் ஏறி யோகா நிகழ்ச்சிகளை செய்திருக்கிறார். இவர் வாங்கிக் குவித்த விருதுகள், மெடல்கள் மட்டுமே 250ஐ தாண்டி வீடு நிறைந்து காட்சியளிப்பதாகச் சொல்கின்றனர் இவரின் பெற்றோர். தற்போது ஒன்பதாம் வகுப்பு படிக்கும் வைஷ்ணவி, மாநிலம் கடந்து சர்வதேச எல்லைகளையும் இந்த யோகா நிகழ்ச்சி மூலம் தொட்டிருக்கிறார்.
கடந்த ஆண்டு, சர்வதேச அளவில் இந்தோனேஷியாவில் நடந்த யோகா போட்டியில் கலந்து கொண்டு, தங்கம் வென்று தங்க மங்கையாக இந்திய நாட்டுக்கு பெருமை சேர்த்து ஜொலிக்கிறார். எளிமையான குடும்பத்தைச் சேர்ந்த வைஷ்ணவி, இன்னும் பல சாதனைகளை யோகா மூலம் நிகழ்த்தி, லிம்கா மற்றும் கின்னஸ் ரெக்கார்டில் இடம் பிடிக்க வேண்டும் என்பதையே கனவாகக் கொண்டிருக்கிறார்.ஆனால் அதற்கான பொருளாதாரச் சூழல் இல்லை என்பதே இவரின் வருத்தமாகவும் உள்ளது. தங்கள் மகளுக்கு அதிக திறமையிருந்தும் கார் ஓட்டுநராக பணியில் இருக்கும் தன்னால் தன் மகளின் கனவை நிறைவேற்ற முடியுமா என்பதே வைஷ்ணவி பெற்றோர்களின் இப்போதைய கவலை.
Average Rating