சதாம்உசேன் வழக்கை விசாரிக்கும் தலைமை நீதிபதி டிஸ்மிஸ் எதிர்ப்பு தெரிவித்த சதாம் உசேன் வெளியேற்றப்பட்டார்
ஈராக் முன்னாள் சர்வாதிகாரி சதாம்உசேன் வழக்கை விசாரிக்கும் தலைமை நீதிபதி அப்துல்லா அல் அமெரில் நடுநிலைமை தவறிவிட்டதாக கூறி டிஸ்மிஸ் செய்யப்பட்டார். ஈராக் நாட்டில் குர்து இன மக்கள் வசிக்கும் கிராமங்களில் விஷவாயு செலுத்தி ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்ததாக சதாம் உசேன் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை தலைமை நீதிபதி அப்துல்லா அல் அமெரி உள்ளிட்ட நீதிபதிகள் குழு விசாரித்தது.
திடீர் என்று தலைமை நீதிபதியை ஈராக் அரசு டிஸ்மிஸ் செய்தது. குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக அமெரி நடந்து கொண்டதால் அவரை அரசு நீக்கிவிட்டதாக அரசு செய்தி தொடர்பாளர் அலி அல் டாபா தெரிவித்தார்.அவர் மேலும் கூறியதாவது:-
அமெரி குற்றஞ்சாட்டப்பட்ட சதாம்உசேனை சர்வாதிகாரி அல்ல என்று குறிப்பிட்டு இருக்கிறார். இதன் மூலம் அவர் நடுநிலைமை தவறிவிட்டார் என்று அரசாங்கம் கருதுகிறது. இது தொடர்பாக மந்திரி சபை கூடி அவரை டிஸ்மிஸ் செய்வது என்று முடிவு எடுத்தது. எந்த ஒரு நீதிபதியையும் தன் கடமையைச்சரிவர செய்யாவிட்டால் அவரை மாற்றுவதற்கு மந்திரிசபைக்கு அதிகாரம் அளிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு செய்தித்தொடர்பாளர் டாபா தெரிவித்தார்.
புதிய தலைமை நீதிபதி
இதற்கிடையில் சர்வதேச சட்டநிபுணர் நெகல் பூட்டா நீதிபதியை டிஸ்மிஸ் செய்தது கோர்ட்டின் சுதந்திரத்தை மீறிய செயலாகும் என்று கூறினார். புதிய தலைமை நீதிபதியாக முகமது அல் ஓரியேபீ அல் கலீபா நியமிக்கப்பட்டார். அவர் நேற்று கோர்ட்டுக்கு வந்து விசாரணையை நடத்தினார்.
சதாம்உசேன் வெளியேற்றம்
அவர் கோர்ட்டுக்கு வந்ததும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து சதாம்உசேன் மற்றும் அவரது சகாக்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள் கோர்ட்டில் இருந்து வெளி நடப்பு செய்தனர். விசாரணை தொடங்கியதும் சதாம்உசேன் தன் இருக்கையில் உட்காராமல் நின்று கொண்டே இருந்தார். அவரை உட்காரும்படி நீதிபதி கூறியபோதும் அவர் அதன்படி நடக்கவில்லை. இதனால் அவர் அவரை கோர்ட்டை விட்டு வெளியேற்றுங்கள் என்று காவலர்களுக்கு உத்தரவிட்டார். அதன்படி காவலர்கள் அவரை கோர்ட்டை விட்டு வெளியேற்றினர்.