ஹேப்பி ப்ரக்னன்ஸி!!(மகளிர் பக்கம்)

Read Time:13 Minute, 15 Second

பிரசவ கால கைடு – 15

மூன்றாவது ட்ரைமஸ்டரின் கடைசி மாதம்தான் பிரசவத்தின் கிளைமாக்ஸ். அதுவரை ஓருயிராய் இருந்தவர்கள், தாய் என்றும் சேய் என்றும் ஈருயிராய் வாழத் தொடங்கும் வாழ்வின் முக்கிய தருணம் இது. தாயின் உடலும் சிசுவின் உடலும் பிரசவத்துக்குத் தயாராக இருக்கும். பத்தாவது மாதத்தில் வயிற்றில் உள்ள சிசுவும் அன்னையும் எப்படி இருப்பார்கள் என்று இந்த இதழில் காண்போம்.

வாரம் 35
குழந்தையின் நுரையீரல் முழுமையாக வளர்ந்திருக்கும். தோலுக்கு அடியில் சதைப் பிடிப்பு உருவாவதற்காக குழந்தையின் உடலில் கொழுப்பு சேர்க்கும் பணி துரிதமாக நடந்துகொண்டிருக்கும். அன்னையின் வயிறு தொப்புளுக்கு மேலே ஆறு இஞ்ச்சுகள் வரை வளர்ந்திருக்கும். அன்னையின் எடை சுமார் 12 முதல் 15 கிலோ வரை அதிகரித்திருக்கும். குரூப் பி ஸ்ட்ரெப்டோகோக்கஸ் பாக்டீரியா தொற்று அன்னையின் உடலில் உள்ளதா என்பது இந்த வாரம் முதல் 37வது வாரம் வரை மருத்துவர்கள் கண்காணிப்பார்கள்.

வாரம் 36
குழந்தையின் உடல் தலை முதல் பாதம் வரை 20.7 இஞ்ச்சுகள் வளர்ந்திருக்கும். எடை சுமார் இரண்டரை கிலோவுக்கு மேல் இருக்கும். குழந்தை பிரசவத்துக்குத் தயாராவதற்காக தலைகீழான நிலையில் அன்னையின் வயிற்றில் இருக்கும். குழந்தையின் மூளை அதிவேகமான வளர்ச்சி நிலையில் இருக்கும். அன்னையின் வயிறு நன்கு வளர்ந்திருக்கும்.

பிரசவம் பற்றிய பதற்றத்தாலும் குழந்தையின் உடல் போதுமான ஊட்டச்சத்தை அன்னையின் உடல் மூலம் எடுத்துக்கொள்வதாலும் சில கர்ப்பிணிகள் மிகவும் சோர்வாக உணர்வார்கள். உடலின் போஸ்சர் மாறுபடுவதால் முதுகுவலி மற்றும் கீழ் இடுப்பு வலி இருக்கும். அமரும்போது சரியான நிலையில் அமர்வதும் உறங்கும்போது இடதுபுறமாக படுத்த நிலையில் உறங்குவதும் நல்லது.

வாரம் 37
உங்கள் குழந்தை தற்போது 21 இஞ்ச்சுகள் வளர்ந்திருக்கும். எடை சுமார் மூன்று கிலோவை நெருங்கியிருக்கும். குழந்தையின் தசை வளர்ச்சி கிட்டத்தட்ட முழுமையடைந்திருக்கும். அதன் மேற்புற சருமம் பிங்க் வண்ணத்தில் மாறியிருக்கும். சரும சுருக்கங்கள் முழுமையாக மறைந்திருக்கும். கடந்த இருவாரங்களாக இருந்த அளவுக்கே அன்னையின் வயிறு இப்போதும் இருக்கும். எடை கணிசமாக அதிகரித்திருக்கும். மருத்துவர்கள் பிரசவத்துக்கு அன்னையின் உடல் தயாராக உள்ளதா என்பதை பெல்விக் பரிசோதனைகள் மூலம் உறுதி செய்வார்கள். வாரம் ஒருமுறை மருத்துவரைச் சந்தித்து உங்கள் உடலியல் மாற்றங்களைச் சொல்வது நல்லது.

வாரம் 38
கருகருவென வளர்ந்த முடியோடு நுரையில் நன்கு வளர்ச்சி பெற்று பட்டுப்போன்ற சருமத்துடன் சுருக்கங்கள் நீங்கி ஒரு முழுக் குழந்தையாக வடிவெடுத்திருக்கும் உங்கள் பாப்பா. தன் உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான ஆன்டிபாடிஸ் சத்துக்களை குழந்தை அன்னையின் உடலில் இருந்து பெற்றிருக்கும். குழந்தையின் வளர்ச்சி மிகவும் துரிதமாகவும் இல்லாமல் மந்தமாகவும் இல்லாமல் ஒரே சீரான நிலையில் தற்போது இருக்கும்.

பிரசவம் குறித்த பதற்றம் சிலருக்கு ஏற்பட்டு அசெளகர்யமான மனநிலையில் இருப்பார்கள். இதனால், சில தாய்மார்களுக்கு மூட் ஸ்விங்ஸ் ஏற்படக்கூடும். மனதுக்கு இதமான சூழ்நிலைகளை உருவாக்கிக்கொள்வது, நல்ல இசையைக் கேட்பது என மனதைப் பக்குவப்படுத்தும் செயல்களில் ஈடுபடுங்கள். அதிக சோர்வாய் இருந்தால் ஒரு மணி நேரம் பகலில் உறங்குவதும் தவறு இல்லை.

வாரம் 39
குழந்தையின் கை கால்கள் நன்கு தசை வளர்ச்சி பெற்றிருக்கும். நகங்கள் நன்றாக வளர்ந்திருக்கும். குழந்தை அன்னையின் வயிற்றில் தலைகீழாகவே இருக்கும். நிறை மாதம் என்பதால் சற்று சோர்வாகவும் பதற்றமாகவும் இருப்பீர்கள். தேவையற்ற மனக்குழப்பங்களை தவிர்த்திடுங்கள். பிரசவம் தொடர்பாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஐடியா தருவார்கள்.

அதை எல்லாம் கேட்டு குழம்பிவிட வேண்டாம். ஒவ்வொரு பெண்ணின் உடல்வாகும் ஒவ்வொரு மாதிரி யானது. அவர்கள் சொல்லும் ஐடியாக்கள் அவர்களுக்கு செட்டாகி இருக்கும். அது உங்களுக்கும் பொருந்தும் என்பதற்கு எந்த முகாந்தரமும் இல்லை. எனவே, பிரசவம் தொடர்பாக எந்த குழப்பம் இருந்தாலும் மருத்துவரை நாடுங்கள்.

வாரம் 40
வயிற்றில் உள்ள ஆண் குழந்தைகள் பெண் குழந்தைகளைவிடவும் சற்று அதிக எடையுடன் இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது. குழந்தை முழு வளர்ச்சி பெற்று இந்த பூமிக்கு வரத் தயாராக இருக்கும். அன்னையின் வயிற்றில் இருந்து வெளிவர வசதியாக தலைகீழான நிலையிலேயே குழந்தை இருக்கும். உடலின் எல்லா பாகங்களும் முழுமையாக வளர்ந்திருக்கும்.

பிரசவ வலி ஏற்படும் தருணத்துக்காக காத்திருங்கள். சிலருக்கு இந்தத் தருணத்திலும் பொய்வலி ஏற்படக்கூடும். பொய்வலி என்பது பிரசவ வலியின் ஒத்திகை எனலாம். எனவே, அச்சம் வேண்டும். பிரசவ வலிக்கும் பொய்வலிக்கும் வித்தியாசங்கள் உள்ளன என்பதை கடந்த வாரங்களிலேயே பார்த்திருப்போம். எனவே, அறிகுறிகளைக் கொண்டு பொய்வலியா பிரசவ வலியா என்பதைக் கண்டறியுங்கள்.

எந்த நேரமும் மருத்துவமனைக்குச் செல்வதற்கு வசதியாக மருத்துவ ரிப்போர்ட்டுகள், துணிகள், பிறந்த குழந்தைக்கான ஆடைகள் என தேவையான அனைத்துப் பொருட்களையும் தயாராக வைத்திருங்கள். பிரசவ வலி வருவதைப் போன்ற உணர்வு இருந்தால் எதையும் சாப்பிடாதீர்கள். சிறிய உணவு வயிற்றில் இருந்தாலும் வாந்தி ஏற்படக்கூடும்.

மொத்தத்தில் இந்த மாதம் என்பது தாய்மை எனும் அற்புத வைபவத்தில் நுழைவதற்கான முதல் படி. இந்த மாதத்தை கவனமுடன் எதிர்கொள்ள வேண்டியது அவசியம். டாக்டர் பிரசவத்துக்குக் குறித்துத் தந்த தேதிக்கு முன்பாக சில குழந்தைகள் பிறந்துவிடுவதற்கு வாய்ப்பு அதிகம் என்பதால் தேதிதான் இருக்கிறதே என அலட்சியமாக இருக்க வேண்டாம். பிரசவ தேதி வரை பிரசவ வலி இல்லாவிட்டாலும் குறித்த தேதியில் மருத்துவமனைக்கு சென்று அட்மிட் ஆகிவிடுங்கள்.

தற்போது, இயற்கை வைத்தியம், மாற்று வைத்தியம் என்ற பெயரில் சிலர் வீட்டிலேயே பிரசவம் பார்க்கும் முயற்சியில் இறங்குகிறார்கள். முந்தைய காலங்களில் போதிய மருத்துவ வசதிகள் இல்லை என்பதால் வீட்டிலேயே மருத்துவம் பார்த்தார்கள். ஆனால், இன்று நிலை அப்படி இல்லை. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தாய் சேய் நல விடுதிகளில்கூட அடிப்படையான வசதிகள் இன்றுள்ளன. எனவே வீட்டிலேயே பிரசவம் என்பதைப் போன்ற விபரீத முடிவுகளைக் கைவிட்டு மருத்துவமனைகளை நாடி உங்கள்
பிரசவத்தை எளிதாக்கிக்கொள்ளுங்கள்.

டாக்டர் ஒரு டவுட்

வயிற்றில் உள்ள குழந்தை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் உணவு மட்டும் போதாது. ஊட்டச்சத்து மாத்திரைகள், ஹெல்த் ட்ரிங்க்ஸ் சாப்பிட வேண்டியதும் அவசியம் என்கிறார்கள் சிலர். இது சரியா?
– த.க.நிர்மலா தேவி, திருச்சி.

அன்னையின் உடலில் சேரும் ஆரோக்கியமான உணவுகள்தான் குழந்தைக்கு ஊட்டச்சத்தையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் அளித்துக் காக்கின்றன. பொதுவாக, கர்ப்பிணிகளுக்கு முதல் மூன்று மாதங்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகள், ஃபோலிக் ஆசிட் மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். வயிற்றில் உள்ள கரு தங்கவும் அதன் தொடக்க நிலை வளர்ச்சி சீராக இருக்கவும் இந்த மாத்திரைகள் மிகவும் அவசியம்.

ஆனால், வெறும் மருந்து, மாத்திரைகளால் மட்டுமே ஒரு குழந்தையை வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் தவறானது. அரிசி, கோதுமை, மீன், முட்டை, காய்கறிகள், கீரைகள், பழங்கள், தானியங்கள், நட்ஸ் என ஆரோக்கியமான உணவுகளைச் சமச்சீராக உண்டு வந்தாலே தாயும் சேயும் நலமாக இருப்பார்கள்.

மருத்துவர் பரிந்துரைத்தால் அன்றியும் தேவை இல்லாத வைட்டமின் மாத்திரைகள், ஊட்டச்சத்து மாத்திரைகள் போன்றவற்றைப் பயன்படுத்தாதீர்கள். ஹெல்த் ட்ரிங்க்ஸ் என்ற பெயரில் தற்போது சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான உணவுப் பொருட்கள் செயற்கையான பொருட்கள் சேர்த்துத் தயாரிக்கப்பட்டவை. பேக்டு ஃப்ரூட் ஜூஸும் அப்படித்தான். இதற்கு பதிலாக பழங்களைச் சாப்பிடலாம். அதுதான் ஆரோக்கியம்.

ப்ரக்னன்ஸி மித்ஸ்

வயிற்றில் உள்ள குழந்தையின் தொப் புள் கொடி கழுத்தில் மாலையாக சுற்றிக்கொண்டால் தாய் மாமனுக்கு ஆகாது என்ற நம்பிக்கை நம் மக்களிடையே உள்ளது. அன்னையின் வயிற்றில் உள்ள குழந்தைக்கும் தாய் மாமனுக்கும் என்ன தொடர்பு என்று விஞ்ஞானத்துக்குப் புரியவில்லை. சில சமயங்களில் குழந்தையின் தொப்புள்கொடி சுற்றிக்கொள்வதுண்டுதான்.

அந்த மாதிரியான சமயங்களில் சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை எடுப்பதற்கான வாய்ப்பு உள்ளது. பழைய பிரசவ முறைகளில் இப்படி மாலை சுற்றிப் பிறப்பது அன்னைக்கும் குழந்தைக்கும் ஆபத்தாக முடிந்திருக்கிறது. ஆனால், தற்போதைய நவீன மருத்துவமுறையில் சிசேரியன் மூலம் இந்தப் பிரச்சனையை எளிதாகக் கடக்கலாம். எனவே, இதற்காக அச்சப்படத் தேவையில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post Sleeping Beauty Syndrome!!( மருத்துவம் )
Next post செக்ஸ் தேவையை தீர்த்துக் கொள்ள தினமும் சுய இன்பத்தில் ஈடுபடலாமா?(அவ்வப்போது கிளாமர்)