கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தார் சோனியா !! ( உலக செய்தி)
அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற விழாவில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தார்.
அறிவாலயத்தில் அண்ணா சிலைக்கு அருகில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
சிலையின் கீழ், அண்ணா வழியில் அயராது உழைப்போம், ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம். மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி, வ்ன்முறையை அழித்து வறுமை ஒழிப்போம், இந்தி திணிப்பை என்றும் எதிர்போம் ஆகிய வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.
சிலையை திறந்து வைத்த உடனேயே மேடையில் அமர்ந்திருந்த அரசியல் தலைவர்கள், சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதியின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினர். பின் அங்கிருந்து ஒய்எம்சிஏ மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன், கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆகியோர் மேடையில் அமர்ந்திருந்தனர்.
இந்த நிகழ்வையொட்டி அண்ணா அறிவாலயம் மற்றும் ஒய்எம்சிஏ மைதானத்தை சுற்றி பலத்த பாதுகாப்புகளும், போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டிருந்தன.
முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள் என வெகு சிலரே அண்ணா அறிவாலய விழாவில் கலந்து கொண்டனர். திமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்களுக்கும் கூட இதில் அழைப்பு விடுக்கப்படவில்லை.
தலைவர்கள் மட்டுமன்றி, பல்வேறு துறையை சார்ந்தவர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
ரஜினிகாந்த், கி.வீரமணி, வைரமுத்து, வைகோ, சத்ருஹன் சின்ஹா, டி.ராஜா, குஷ்பு, பிரபு, நாசர், விவேக் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதி கடந்த ஆகஸ்டு 7ஆம் தேதி காலமானார்.
கருணாநிதியின் மறைவை தொடர்ந்து ஸ்டாலின் திமுக தலைவராக பொறுப்பேற்றார்.
டிசம்பர் 9 ஆம் திகதி, ஸ்டாலின் டெல்லியில் சோனியா காந்தியை சந்தித்து கருணாநிதியின் சிலை திறப்பு விழாவுக்கான அழைப்பிதழை வழங்கினார்.
இந்த சிலை திறப்பு விழா, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
Average Rating