கர்ப்ப கால ரத்த சோகை!! (மருத்துவம்)

Read Time:11 Minute, 36 Second

ரத்த சோகை என்பது இந்தியாவில் இயல்பானது. அதிலும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் ரத்தசோகை இன்னும் இயல்பானதாகவே இருந்து வருகிறது.‘ரத்தசோகை இல்லாத இந்தியா’ என்ற திட்டத்தின் கீழ், இளம் வயதுள்ள பெண்களிடம் பரிசோதித்தபோது, ஆய்வில் கலந்துகொண்ட பாதி பேருக்கு ரத்தசோகை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தவறான உணவுப் பழக்கம், வறுமை காரணமாக சத்துள்ள உணவை சாப்பிடாதது, அடிக்கடியும் குறைந்த இடைவெளியிலும் கர்ப்பமாவது போன்ற பல காரணங்களால் ரத்தசோகை ஏற்படுவதாக அதில் தெரியவந்தது.

சாதாரணமாக ரத்தத்தில் சிவப்பணுக்கள் 50,000/கன மி.மீ. என்ற அளவில் இருக்க வேண்டும். இந்த அளவு குறையும்போது ஏற்படும் நிலைமையை ரத்தசோகை(Anaemia) என்கிறோம். உடல் உறுப்புகளுக்கு ஆக்ஸிஜனையும் சத்துக்களையும் சுமந்து செல்வது சிவப்பணுக்கள்தான். இவற்றில் உள்ள ஹீமோகுளோபின்(Haemoglobin) எனும் இரும்பு சத்துப் பொருள்தான் இப்பணியைச் செய்கிறது. ரத்தத்தில் சிவப்பணுக்கள் குறைந்தால் ஹீமோகுளோபின் அளவும் குறையும்.

கர்ப்பிணிகளுக்கு ஹீமோகுளோபின் 12 – 14.8 கிராம் இருக்க வேண்டும். 11 கிராமுக்குக் கீழ் இருந்தால், அது ரத்தசோகையைக் குறிக்கும்; 9 கிராமுக்குக் கீழ் இருந்தால் அந்த கர்ப்பிணிக்கு முழுமையான ரத்தப் பரிசோதனைகளும் முறையான சிகிச்சைகளும் உடனடியாகத் தேவைப்படும்.ரத்த சோகைக்குப் பல காரணங்கள் உண்டு. அதில் முதலாவதாக இருப்பது சத்து குறைபாடு. சிவப்பணுக்கள் உற்பத்தியாவதற்கு இரும்புச்சத்து, புரதச்சத்து, வைட்டமின்-பி12, வைட்டமின்-சி, ஃபோலிக் அமிலம் ஆகியவை தேவை. தினசரி உணவில் தேவையான அளவுக்கு இவை இல்லாதபோது ரத்தசோகை
ஏற்படுகிறது. மசக்கை காரணமாக முதல் டிரைமெஸ்டரில் பல கர்ப்பிணிகள் சரியாகச் சாப்பிட மாட்டார்கள்.

இது ஏற்கனவே உள்ள ரத்தசோகையை அதிகப்படுத்துகிறது.அதேபோல் நாள்பட்ட இரைப்பைப் புண், மூலநோய்(Piles), சீதபேதி போன்றவை காரணமாக மலத்தில் ரத்தம் வெளியேறுவதுண்டு. சில பெண்களுக்கு மாதவிலக்கின்போது அதிக உதிரப்போக்கு இருக்கும். இதுபோன்ற ரத்த இழப்புகளாலும் ரத்தசோகை ஏற்படுகிறது.குடலில் கொக்கிப்புழு தொல்லை, பரம்பரை காரணமாக ஏற்படும் சிவப்பணுக் கோளாறு, தைராய்டு பிரச்னை, சிறுநீரகக் கோளாறு, மலேரியா, காசநோய், புற்றுநோய் போன்றவையாலும் ரத்தசோகை ஏற்படுத்துவதுண்டு.ரத்தசோகையின் பாதிப்புகள் பொதுவாக இரண்டுவகையில் வெளிப்படுவதுண்டு.சத்துக் குறைவு ரத்தசோகை இரும்புச்சத்து, வைட்டமின் பி12, ஃபோலிக் அமிலம் ஆகிய சத்துக்கள் குறைவதால் ஏற்படும் ரத்தசோகை முதல் வகை.

கர்ப்ப கால ரத்தசோகைபொதுவாகவே, கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகளுக்கு ரத்தத்தின் கன அளவு அதிகரிக்கும். அப்போது, ரத்தம் நீர்த்துப்போவதும், அதன் விளைவாக ஹீமோகுளோபின் குறைந்து ரத்தசோகை ஏற்படுவதும் நடைமுறை. கர்ப்பத்தின் ஆரம்பத்தில் ரத்தசோகை இல்லாதவர்களுக்கு, இரண்டாவது டிரைமெஸ்டரில் ஹீமோகுளோபின் 10 கிராமுக்குக் குறைவாகவும், சிவப்பணுக்கள் 30 ஆயிரத்துக்கும் குறைவாகவும், பிசிவி(PCV) 32%-க்கும் குறைவாகவும் இருந்தால், அது கர்ப்ப கால ரத்தசோகையைக் குறிக்கும். உணவு மற்றும் மாத்திரைகள் மூலம் இதை சரிப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த நிலைமை பிரசவத்துக்குப் பிறகு 6 மாதங்கள் கழித்து சரியாகிவிடும்.

பொதுவான அறிகுறிகள் பசி குறையும். அஜீரணம் உண்டாகும். மிகுந்த சோர்வு ஏற்படும். அடிக்கடி தலைவலி, உடல்வலி, தூக்கமின்மை போன்றவை தொல்லை தரும். அடுத்த கட்டத்தில் மாடிப் படிகளில் ஏறினால் மூச்சு வாங்கும். படபடப்பாக வரும். நெஞ்சு வலிக்கும். தலைச்சுற்றல், மயக்கம் ஏற்படும். முகம், நகம், நாக்கு வெளுக்கும். முகம், கால் வீங்கும். அடிக்கடி தொண்டை, வாய், நாக்கு ஆகியவற்றில் புண் உண்டாகும்.

கர்ப்பிணிக்கு என்ன பிரச்னை?

கர்ப்பிணிக்கு ரத்தசோகை இருந்தால், நோய் எதிர்ப்புசக்தி குறைந்துவிடும். இதனால், அடிக்கடி ஏதாவது ஒரு நோய்த் தொற்று தொல்லை கொடுக்கும். உடலில் மறைந்திருக்கிற நோய்கள் வீரியமடைந்து பிரச்னை செய்யும் முன் பிரசவ வலிப்பு வரலாம். குறைப் பிரசவம் ஏற்படலாம். மூன்றாவது டிரைமெஸ்டரில் இதயம் செயலிழந்து கர்ப்பிணியின் உயிருக்கு ஆபத்து நேரலாம். பிரசவத்தின்போதும், பிரசவித்த பின்பும் அதீத ரத்தப்போக்கு ஏற்படலாம். நுரையீரலில் ரத்தம் உறைந்து(Pulmonary embolism) கர்ப்பிணியின் உயிருக்கு ஆபத்தைக் கொடுக்கலாம். தாய்ப்பால் குறைவாகச் சுரக்கலாம்.

குழந்தைக்கு என்ன பிரச்னை?

பொதுவாக, கருவில் வளரும் குழந்தை தனக்குத் தேவையான இரும்புச் சத்தைத் தாயின் ரத்தத்திலிருந்து உறிஞ்சிக் கொள்வதால், குழந்தைக்கு அவ்வளவாக பாதிப்பு ஏற்படுவதில்லை. என்றாலும், கர்ப்பிணிக்கு ஏற்பட்ட ரத்தசோகை மிக மோசமான நிலைமையில் இருந்தால், குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படும்; எடை குறைவாக இருக்கும்.குழந்தை உயிரிழக்கும் அபாயமும் உண்டு. ஃபோலிக் அமிலம் குறைவால் கர்ப்பிணிக்கு ரத்தசோகை ஏற்பட்டிருந்தால், குழந்தைக்கு பிளவுபட்ட மேல் உதடு, அண்ணப் பிளவு, முதுகுத் தண்டுவட நரம்பில் பிரச்னை போன்ற பிறவிக்
கோளாறுகள் தோன்றக்கூடும்.

என்ன சிகிச்சை?

ரத்தசோகையின் வகை மற்றும் காரணம் தெரிந்து சிகிச்சை பெற்றால், நோய் விரைவில் குணமாகும். இந்தியாவில் பெரும்பாலான கர்ப்பிணிகளுக்கு இரும்புச் சத்துக் குறைவால்தான் ரத்தசோகை ஏற்படுகிறது. கர்ப்பமானதும் கர்ப்பிணிகள் மருத்துவரைச் சந்திக்கும் முதல் சந்திப்பிலேயே ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவைப் பரிசோதித்து ரத்தசோகை இருக்கிறதா என்று தெரிந்துகொள்ள வேண்டும்.

ரத்தசோகை இருந்தால், இரும்புச் சத்து மாத்திரை ஒன்றை தினமும் 200 மி.கி. வீதமும், ஃபோலிக் அமிலம் மாத்திரை ஒன்றை தினமும் 1 மி.கி. வீதமும் பிரசவம் வரை சாப்பிட வேண்டும். ஏற்கனவே ஊனமுற்ற குழந்தை பிறந்திருந்தால், அந்தக் கர்ப்பிணிகள் மட்டும் ஃபோலிக் அமிலம் மாத்திரை ஒன்றை தினமும் 4 மி.கி. வீதம் முதல் டிரைமெஸ்டர் வரை சாப்பிட வேண்டும். அதற்குப் பிறகு இதன் அளவை 1 மி.கி. வீதம் குறைத்துக் கொள்ளலாம்.

அத்தோடு இரும்புச் சத்துள்ள உணவுகளையும் புரதம் நிறைந்த உணவுகளையும் தேவைக்கேற்ப சாப்பிட வேண்டும். குடற்புழு மாத்திரையையும் சாப்பிட வேண்டும். ரத்தசோகையை உண்டு பண்ணும் மலேரியா, மூலநோய், சிறுநீரகத் தொற்று, சீதபேதி போன்றவற்றுக்கு உடனுக்குடன் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். 30-வது, 36-வது கர்ப்ப வாரங்களில் மீண்டும் ஒருமுறை ஹீமோகுளோபின் அளவைப் பரிசோதித்து ரத்தசோகை சரியாகிவிட்டதா என்பதைத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

இரும்புச்சத்து ஊசிகள் எப்போது தேவை?

மேற்சொன்ன சிகிச்சை எடுத்த பிறகும் ஹீமோகுளோபின் அளவு 9 கிராம்/100 மி.லி.க்கும் குறைவாகவே இருக்கிறது என்றால், இரும்புச்சத்து ஊசிகளைச் செலுத்த வேண்டும். இவை தசை ஊசிகளாகவும், சலைனில் கலக்கப்பட்டு ரத்தத்தில் நேரடியாக செலுத்தப்படும் சிரை ஊசிகளாகவும் கிடைக்கின்றன. கர்ப்பிணிக்குத் தேவையான மொத்த இரும்புச்சத்தை அளவிட்டு(Total dose infusion), ஒரே ஊசியில் ரத்தத்தில் செலுத்திவிடுவது சிறந்தது.ஏனென்றால், இரும்புச்சத்து தசை ஊசிகளைத் தொடர்ந்து பலமுறை போட வேண்டும். இதற்கு சோம்பல்பட்டு பலரும் சிகிச்சையை நிறைவு செய்வதில்லை. மேலும், ஊசிபோட்ட இடத்தில் வலி, வீக்கம், தொற்று, தோல் நிறம் மாறுவது போன்ற சிரமங்களும் ஏற்படலாம்.ரத்தம் செலுத்த வேண்டுமா?கர்ப்பிணிக்கு ரத்தசோகை மிகவும் மோசமாக இருந்தாலோ, கர்ப்பத்தின் கடைசி டிரைமெஸ்டரில்தான் கர்ப்பிணிக்கு ரத்தசோகை இருக்கிற விஷயமே தெரியவந்தது என்றாலோ ரத்தம் செலுத்த வேண்டியது வரலாம் அப்போதுகூட ரத்தசெல்களை(Packed cells) மட்டும் தேவைக்கேற்ப செலுத்திக் கொள்வது நல்லது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சோகம் மறந்து வாய் விட்டு சிரிக்க இந்த காமெடியை பார்த்து மகிழுங்கள்!! (வீடியோ)
Next post கர்ப்பிணிக்கு வரும் காய்ச்சல்!!(மருத்துவம்)