நான் சௌதிக்கு திரும்பினால் என் குடும்பம் என்னை கொன்றுவிடும்!! (உலகசெய்திகள்)
ஒரு இளம் சௌதி பெண் மீண்டும் சொந்த நாட்டிற்கு திரும்பச் செல்வதற்கான விமான பயணச்சீட்டை வைத்திருக்கவில்லை என்ற காரணத்துக்காக பேங்காக்கின் பிரதான விமான நிலையத்தில் சௌதி அதிகாரிகள் பிடித்து வைத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
18 வயதான ரஹாஃப் மொஹம்மத் அல்-குனன் தனது குடும்பத்தில் இருந்து தப்பிக்க முயற்சித்ததாகவும் ஆனால் தாய்லாந்தில் தரையிறங்கியதும் சௌதி அதிகாரிகள் தனது பாஸ்போர்ட்டை பிடித்துவைத்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் பேங்காக்கில் உள்ள சௌதி தூதரகம், அப்பெண்ணிடம் மீண்டும் சொந்த நாட்டிற்கு திரும்புவதற்கான பயணச் சீட்டு இல்லை என்ற காரணத்திற்காகவே பிடித்து வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் பாஸ்போர்ட் அப்பெண்ணிடம் தான் இருக்கிறது என அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
அவர் குவைத்தில் தனது குடும்பத்தோடு பயணத்தில் இருந்தபோது இரண்டு நாள்களுக்கு முன்பாக விமானம் மூலமாக தப்பினார். பேங்காக்கில் உள்ள இணைப்பு விமானம் வழியாக அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முயற்சித்துள்ளார்.
பிபிசியிடம் பேசிய அப்பெண், தாம் இஸ்லாம் மதத்தைத் துறந்ததாக கூறினார். ´´சௌதி அரேபியாவுக்கு வலுக்கட்டாயமாக அனுப்பப்பட்டால் எனது குடும்பத்தால் கொல்லப்படுவேன்´´ என்றும் அச்சத்துடன் தெரிவித்துள்ளார்.
மொஹம்மத் அல்-குனன் பயந்துபோய் இருப்பதாகவும் குழப்பத்தில் ஆழ்ந்திருப்பதாகவும் பேங்காக்கில் இருந்து ஜோனாதன் ஹெட் தெரிவிக்கிறார்.
தன்னிடம் அவுஸ்திரேலிய விசா இருப்பதாக கூறிய அல்-குனன் சுவர்ணபூமி விமானநிலையத்தில் அவுஸ்திரேலியாவுக்குச் செல்லும் விமானத்தை பிடிக்க முயன்ற போது தன்னைச் சந்தித்த சௌதி அதிகாரி தனது பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்ததாக தெரிவித்துள்ளார்.
Average Rating