தூக்கத்தில் வரும் பிரச்னை! (அவ்வப்போது கிளாமர்)

Read Time:6 Minute, 51 Second

மன்மதக்கலை சொன்னால்தான் தெரியும்!

உற்சாகம் தாளாத
நடனக்காரன்
பாட்டுச்
சத்தத்தை
கூட்டுவதைப் போலே இந்த இரவில் இன்னும் இன்னுமென
நிலவைத்
திருகுகிறான்
ஒருவன்.

– இசை

மிதுன் 12 வயது பையன். அவனுக்கு தூக்கத்தில் விந்து போக ஆரம்பித்தது. அவனது அப்பாவும் டாக்டரிடம் பரிசோதனைக்காக கூட்டிப் போனார். தினமும் டவுசரை கறையாக்கிவிடுகிறான். இப்படியே போனால் இவனது படிப்பு என்ன ஆகப்போகிறதோ என பயத்தை தெரிவித்தார். ஏற்கனவே இவனுக்கு படிப்பு விஷயத்தில் கவனம் இல்லை. ‘தூக்கத்தில் விந்து வெளியானால் உடல் பலவீனமடையும், ஞாபக மறதி வரும்’ என டி.வி. டாக்டர்கள் வேறு தெரிவிக்கிறார்கள் என பயந்தார்.

இது இயற்கையானதுதான். ஒன்றும் பிரச்னை இல்லை என மிதுனுடைய அப்பாவுக்கு அறிவுரை சொல்லி அனுப்பி வைத்தார் டாக்டர். சொப்பன ஸ்கலிதம் என்னும் தூக்கத்தில் விந்து போவது பயப்படும் அளவுக்கு ஒரு நோயா? அதனால் உடல் பலவீனமடையுமா? உண்மை என்ன? ஆண் குழந்தைகள் வளர்ச்சி அடைந்து வயதுக்கு வருவதை குறிக்கும் முதல் நிகழ்வு தூக்கத்தில் விந்து வெளியாதல்.

இதை ஆங்கிலத்தில் Wet dreams என அழைப்பார்கள். ஆண்கள் வயதுக்கு வந்த பிறகு டெஸ்டோ ஸ்டீரான் ஹார்மோன் சுரப்பு அதிகமாக இருக்கும். இது ஆண்களின் Reproductive Systemஐ தூண்டி விந்துவை வெளியேற்றுகிறது. இந்த டெஸ்டோஸ்டீரானின் சுரப்பானது 10 முதல் 13 வயது வரை, முன்-பின்னாக இருக்கும். பத்து வயதுக்கு மேல் விந்து வெளியேறுவதில் எந்தப் பிரச்னையும் இல்லை. அது இயற்கையானது.

10 வயதுக்கு உள்ளே விந்து வெளியேற ஆரம்பித்தால்தான் அதற்கு Precocious Puberty என்னும் ஹார்மோன் பிரச்னைதான் காரணம். சிகிச்சை எடுத்து சரிசெய்யலாம். வயது வந்த காலத்தில் விந்து அதிகமாக வெளியேறும். வயது ஏற ஏற அதன் அளவு கொஞ்சம் குறைந்துவிடும். செக்ஸ் பற்றி சரியாக அறியாத வீடுகளில், விந்து வெளியாவது பற்றி பல தவறான கருத்துகள் இருக்கின்றன.

இப்படியான தவறான நம்பிக்கைகள் வெளிநாடுகளிலும் உண்டு. ஆறாம் நூற்றாண்டில் Book of David என்னும் நூலில் சொப்பன ஸ்கலிதத்தை பாவமாக எழுதியுள்ளார்கள். இதனால் ஏற்படும் பாவத்தை தியானம் செய்து, ரொட்டியும் தண்ணீரும் மட்டும் உண்டு கழிக்க வேண்டும் என அந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மருத்துவ உலகில் கூட 1990ம் ஆண்டு வரை தூக்கத்தில் விந்து வெளியாவதைப் பற்றி பல தவறான நம்பிக்கைகள் இருந்தன. ‘வாரம் ஒருமுறை போனால் ஒன்றுமில்லை.

தினமும் விந்து வெளியானால் அது நோய்’ எனவும் கருதினார்கள். உண்மை என்னவென்றால் ஆரோக்கியமான ஆண் உடலில் வயதுக்கு வந்த நாள் முதல், கடைசி மூச்சு வரை விந்து தயாரிப்பானது நடந்துகொண்டே இருக்கும். குறிப்பிட்ட அளவுக்கு மேலே விந்துவை உடலில் சேகரித்து வைக்க முடியாது. அந்த விந்துவானது தூக்கத்தில் வெளியே வந்து தான் ஆக வேண்டும்.

ஒரு தண்ணீர் வரும் குழாயின் கீழ் ஒரு வாளியை வைத்து குழாயை மூடாமல் விட்டால் என்ன ஆகும்? அளவுக்கு மேல் நிரம்பும் நீரானது கீழே போக ஆரம்பிக்கும் அல்லவா? அப்படித்தான் ஆரோக்கியமான உடலில் நடக்கும் விந்து தயாரிப்பும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.விந்தானது செக்ஸில் ஈடுபடும் போது, சுய இன்பம் செய்யும் போது, தூக்கத்தில் வெளியேறுவது என 3 செயல்களில் வெளியேறுகிறது. விந்து சுரப்பதும், அது வெளியேறுவதும் இயற்கையான செயல். இது குறித்து யாரும் பயப்படத் தேவையில்லை.

விந்து சுரப்பானது சில பிரச்னைகளால் பாதிக்கப்படலாம். ஆண் ஜனன உறுப்பில் கோளாறு இருப்பது, சில வகை நோய்களால் விந்து சுரப்பு பாதிக்கப்படுவது, பால்வினை நோய்களுக்கு சிகிச்சை எடுக்காமல் விடுதல், விபத்தினால் ஆண் ஜனன உறுப்பானது பாதிக்கப்படுவது, எக்ஸ்-ரே மற்றும் அதிக வெப்பமான சூழலில் வேலை செய்வது ஆகியவற்றால் விந்து தயாரிப்பானது பாதிக்கப்படும்.

மற்றபடி விந்து உடலில் தயாராவதும் அது வெளியேறுவதும் யாரும் தடை செய்ய முடியாத ஒன்று என்பதை புரிந்துகொள்ளுங்கள். படிக்கிற வயதில் செக்ஸ் புத்தகங்கள், படங்கள் பார்ப்பதால் உறக்கத்தில் அது பற்றிய கனவுகள் வந்து அதனால் கூட விந்து வெளியேறும்.

மற்றபடி தூக்கத்தில் விந்து வெளியேறுவதால் உடல் பலவீனம், சோர்வு, ஞாபக மறதி ஏற்படும் என்று சொல்லப்படுபவை எல்லாம் டி.வி.யில் விளம்பரம் செய்யும் போலி மருத்துவர்களின் கட்டுக்கதைகள் என்பதை மக்கள் உணர வேண்டும். படிக்கும் வயதில் சமச்சீரான உணவு, தகுந்த உடற்பயிற்சிகள், தியானம் செய்து மனத்தை கட்டுப்பாட்டுடன் வைத்திருந்தால் படிப்பில் கவனமும் இருக்கும். தூக்கத்தில் வெளியேறும் விந்துவின் அளவும் குறையும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முதுகெழும்புக்கு பயிற்சி தரும் பட்டாம்பூச்சி ஆசனம்!! (மகளிர் பக்கம்)
Next post அனைவருக்கும் ஒரு நாளைக்கு குறைந்தது 375 ரூபாய் சம்பளம்! (உலக செய்தி)