கிச்சன் டிப்ஸ்!!! (மகளிர் பக்கம்)
* ரவா அல்லது சேமியா கிச்சடி எதுவாக இருந்தாலும் சரி கிளறி இறக்கும் முன் மிகப் பொடியாக அரிந்த தக்காளித் துண்டுகளைச் சேர்த்து நன்கு கிளறி ஒரு நிமிடம் மூடி பரிமாற கிச்சடி நிறம் மாறாமலும் தக்காளி சற்றே மெத்தென்றும் இருக்கும்.
* தோசை மாவு அதிகம் புளித்துவிட்டதா? அதனுடன் ஒரு கரண்டி பால் சேர்த்துக்கொள்ளுங்கள். புளிப்பு சுவை குறைந்து மாவு நன்றாக இருக்கும். ஒருவேளை தோசை மாவு ஏற்கனவே நீர்த்திருந்தால் பாலில் இரண்டு டீஸ்பூன் ரவை மற்றும் அரிசி மாவு சேர்த்து அதனுடன் கலந்துவிட்டால் மேலும் நீர்த்துப்போகாது. புளிப்பும் தெரியாது.
– ஆர்.அஜிதா, கம்பம்.
* குழந்தைகளுக்கு சூப் தயாரிக்கும் போது அதில் ஒரு தேக்கரண்டி கேழ்வரகு மாவு கலந்திடுங்கள். உடலுக்கு நல்லது.
– ஆர்.ஜெயலட்சுமி, திருநெல்வேலி.
* வடைக்கு மாவு அரைக்கும்போது சிறிது தயிரை விட்டு அரைத்தால் வடை மிருதுவாக இருக்கும்.
* அதிக எண்ணெய் செலவில்லாமல் சமோசா தயாரிக்க விரும்புகிறவர்கள் கோதுமை மாவு, மைதா மாவு
இரண்டையும் சம அளவில் சேர்க்க வேண்டும்.
– ஆர்.ராமலெட்சுமி, திருநெல்வேலி.
* புது துடைப்பத்தை வாங்கியவுடன் உப்பு கலந்த நீரில் சிறிது நேரம் ஊற வைத்து விட்டுப் பிறகு உலர வைத்துப் பயன்படுத்தினால் நீண்ட நாட்கள் பயன்படுத்தலாம்.
* வறுத்த புழுங்கலரிசியை மாவாக்கி வைத்துக் கொண்டு கூட்டு, பொரியல் செய்யும் போது கடைசியாக மேலே தூவி இறக்க வாசனையாக இருக்கும்.
– ஆர். பூஜா, சென்னை.
* காய்கறிகளை வேக வைக்கும் போது அதனுடன் சிறிது தேங்காய் எண்ணெயைச் சேர்த்தால் காய்கறிகள் எளிதில் வெந்துவிடும்.
– ரெ.கயல்விழி, வடுகப்பட்டி.
* சப்பாத்தி மாவு பிசைவதற்கு முன்னால் சிறிதளவு உப்பைக் கைகளில் தடவிக் கொண்டால் கையில் சப்பாத்தி மாவு ஒட்டாது.
– ஆர்.அம்மணி ரெங்கசாமி, தேனி.
* கஸ்தூரி மஞ்சளை தூளாக்கி தேனுடன் கலந்து சாப்பிட்டால் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் நீங்கும். கஸ்தூரி மஞ்சளை அரைத்து முகத்தில் பூசி வர முகப்பரு, தேமல் போன்றவை நீங்கும்.
* ஒரு கடாயில் கடலை மாவை வறுத்து, தண்ணீர் சேர்த்து, 10 நிமிடங்கள் வேகவிடவும். ஆற வைத்து, உடன் பொடித்த சர்க்கரை, ஏலக்காய் பொடி, நறுக்கிய பாதாம் மற்றும் பிஸ்தா பருப்பு சேர்த்து கலந்து, 10 நிமிடம் ஃபிரிட்ஜில் வைத்து லட்டு பிடிக்கவும். நொடியில் கடலை மாவு லட்டு தயார்..!
– ஏ.எஸ்.கோவிந்தராஜன், சென்னை.
* தோசை மாவில் நான்கு ஸ்பூன் நல்லெண்ணெய் கலந்து ஊற்றினால் மிருதுவாக இருக்கும்.
– எஸ்.சடையப்பன், காளனம்பட்டி.
* ஒரு டம்ளர் அரிசியுடன் 1/4 பங்கு வறுத்த கொள்ளு பருப்பு சேர்த்து 1/2 ஸ்பூன் சீரகம், சிறிது கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு சேர்த்து கஞ்சி செய்து மோர் சேர்த்து சாப்பிட்டால் காலை உணவு முடிந்து விடும். வயிறும் நிரம்பும், உடலுக்கும் நல்லது.
Average Rating