இது வெற்றிப் படிக்கட்டே!! (மருத்துவம்)
சிறுநீரகம், இதயம், கல்லீரல் போன்ற முக்கிய உடல் உறுப்புகள் செயல் இழந்தாலும், அதை மாற்றிக் கொள்ளும் அறுவை சிகிச்சை இன்று சாத்தியமாகி இருக்கிறது. இதன் அடுத்தகட்டமாக, கருப்பை மாற்று அறுவை சிகிச்சைக்கான முயற்சி உலகமெங்கும் நடந்து வருகிறது. குறிப்பாக, அமெரிக்கா இதில் பெரிதும் ஆர்வம் செலுத்திக் கொண்டிருக்கிறது. எலி, முயல், நாய் போன்ற விலங்குகளில் வெற்றிகரமாக அமைந்த இந்த முயற்சி, மனிதர்களில் கைகூடுவது இன்னும் சவாலாக இருந்து வருகிறது. துருக்கி, சவுதி அரேபியாவில் கருப்பை மாற்று அறுவை சிகிச்சை முயற்சிக்கப்பட்டும் வெற்றி கிடைக்கவில்லை.
சுவீடனில், 2013ம் ஆண்டு உயிருள்ள 61 வயதான பெண்ணிடம் இருந்து தானமாகப் பெறப்பட்டு 36 வயது பெண்ணுக்குக் கருப்பை பொருத்தப்பட்டது. இதன்மூலம், அந்தப் பெண் கர்ப்பிணியானதுடன் உலகிலேயே முதன்முறையாக கருப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண் என்ற பெருமையுடன் குழந்தையையும் பெற்றெடுத்தார்.அதனால், உற்சாகமான அமெரிக்கா இந்த முயற்சியை ஆர்வத்தோடு செய்து வந்தது. கடந்த பிப்ரவரி மாதத்தில் பிறவியிலேயே கருப்பை இல்லாத 26 வயது பெண்ணுக்கு, இறந்த பெண்ணின் கருப்பை பொருத்தப்பட்டது.
ஆனால், அந்தப் பெண்ணின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கருப்பையை உடனடியாக அகற்றியுள்ளனர். பிறவியிலேயே கருப்பை இல்லாதவர்களுக்கும், உடல்நலப் பிரச்னை காரணமாக கருப்பை அகற்றப்பட்ட பெண்களுக்கும் பெரிய வரப்பிரசாதமாக அமையும் என்று காத்திருந்தவர்கள் இதனால் ஏமாற்றம் அடைந்திருக்கிறார்கள். இருப்பினும், மனம் தளராத அமெரிக்க விஞ்ஞானிகள், அதற்கான காரணங்களை இப்போது ஆராய்ந்து வருகிறார்கள்.
‘பொதுவாகவே, ஒருவரின் உடல் உறுப்பு இன்னொருவருக்கு ஏற்றுக் கொள்வதில்லை. அந்த சவால்களை எல்லாம் கடந்துதான் இப்போது நடைமுறையில் பல உறுப்பு மாற்று சிகிச்சைகள் சாத்தியமாகி இருக்கின்றன. அதனால், இந்த தோல்வி இறுதியான முடிவு அல்ல. சுவீடனில் உயிருள்ள பெண்ணிடம் இருந்து கருப்பை தானம் பெற்றதையும் கவனத்தில் கொண்டிருக்கிறோம்’ என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.
Average Rating