இன்குபேட்டருக்கு ஓர் இயற்கை மாற்று!! (மருத்துவம்)

Read Time:10 Minute, 38 Second

குறைப்பிரசவத்தில் ஒரு குழந்தை பிறக்கிறது. அந்தக் குழந்தையின் எடையும் மிகக்குறைவு. ‘இனி இக்குழந்தையை காப்பாற்ற முடியாது’ என மருத்துவர்கள் கை விரிக்கிறார்கள். பெற்றோருக்கோ பேரதிர்ச்சி. அந்த சிசுவை வயிற்றில் சுமந்த தாய்க்கு வேதனை இருக்கத்தானே செய்யும்? அப்போது ஒரு செவிலி அந்தக் குழந்தையை எடுத்து தன் உடலோடு ஒன்றாக பிணைத்துக் கொள்கிறார். அவரது பணி நேரம் முழுமைக்கும் அந்தக் குழந்தை அவரது அரவணைப்பிலேயே இருக்கிறது. அந்த செவிலியின் உடல் வெப்பம் அந்தக் குழந்தைக்கும் பாய, அந்த குழந்தையின் உடல் நிலை தேறி எடையும் கூடுகிறது. அந்தக் குழந்தைக்கு உயிரூட்டியது அந்த செவிலியின் உடல் வெப்பம்தான். அந்தக் குழந்தை யாரெனில் ‘உதிரிப்பூக்கள்’, ‘முள்ளும் மலரும்’ போன்ற தமிழ் சினிமா வின் தவிர்க்கவியலாத படைப்பு களைக் கொடுத்த இயக்குநர் மகேந்திரன்!

இந்தச் சம்பவத்தை மேற்கோளாகக் காட்டுவதற்கு ஒரு காரணம் உண்டு. இயல்பாக ஒரு குழந்தையின் உடலில் 36.5 முதல் 37.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் இருக்க வேண்டும். ஆனால், குறைப்பிரசவம் மற்றும் எடை குறைவாகப் பிறந்த குழந்தைகளால் தங்களது உடலுக்கான வெப்பத்தை ஏற்படுத்திக் கொள்ள இயலாது. இதன் காரணமாக அக்குழந்தைக்கு தேவையான வெப்பத்தைக் கொடுக்கும் பொருட்டு இன்குபேட்டர் கருவி பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், மனித உடலின் வெப்பமே இன்குபேட்டருக்கு நிகராக இருக்கும் என்பதற்கான உதாரணம்தான் மேற்கூறியது. இச்சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால் கூட 75 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்த கருத்தியல் நம் தமிழ் சமூகத்தில் இருந்திருக்கிறது.

இருந்தும், 1978ல், தென் அமெரிக்காவின் கொலம்பியாவில் உள்ள பொகோடா நகரில் இன்குபேட்டருக்கு மாற்றாக இம்முறை கண்டுபிடிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. குளிர் பிரதேசத்தில் வாழும் கங்காரு தனது பையில் தன் குட்டியை கதகதப்பாக வைத்துக் கொள்ளும். இதே போல குழந்தையின் கதகதப்புக்காக மேற்கொள்ளப்படும் இச்செயலுக்கு ‘கங்காரு தாயார் பராமரிப்பு’ என்று பெயர். எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் இப் பராமரிப்பு குறித்த பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதோடு இதற்கென தனிப்பிரிவும் இருக்கிறது. மேலும் இது குறித்த விவரத்தை பச்சிளம் குழந்தைத் துறையின் பேராசிரியர் மங்கல பாரதி விளக்குகிறார்.

‘‘தாயின் இரு மார்பகங்களுக்கு இடையில் குழந்தையை செங்குத்தாக, கை, கால்களை மடித்து வைத்த நிலையில் ஒரு தவளை போல படுக்க வைக்க வேண்டும். குழந்தையின் தலை ஒரு பக்கமாக திரும்பியிருக்க வேண்டும். குழந்தையின் அடிப்பாகத்தைத் தாங்கிய வாறு அணைத்துப் பிடிக்க வேண்டும். தாயின் மார்போடு குழந்தையின் மார்பு ஒட்டியிருந்தால் போதுமானது. மற்றபடி குழந்தைக்கு சாக்ஸ், குல்லா அணிவிக்கலாம். நாப்கின் பயன்படுத்துவது வசதியாக இருக்கும். குழந்தைக்குத் தேவையானது மனித உடலின் வெப்பம்தான். அதனால், தாய்தான் இப்பராமரிப்பை மேற்கொள்ள வேண்டும் என்பதல்ல. குழந்தையின் தந்தை, பாட்டி, தாத்தா என யார் வேண்டுமானாலும் இந்த கங்காரு பராமரிப்பை மேற்கொள்ளலாம்.

யாருக்குத் தேவை?

பிரசவத்தைப் பொறுத்த வரையிலும் வாரக்கணக்கைத்தான் அடிப்படையாகக் கொள்வோம். அதன்படி 40வது வாரத்தில் குழந்தை பிறத்தல்தான் ஆரோக்கியமானது. அதை விடுத்து 34வது வாரத்துக்குள் குழந்தை பிறந்தாலோ, 2 கிலோவுக்கும் குறைவாக எடை இருந்தாலோ மிகவும் அபாயமானது. அந்தச் சூழலில் குழந்தையின் உடலுக்கு வெப்பத்தை கொடுக்கும் பொருட்டே இன்குபேட்டர் கருவியைப் பயன்படுத்துகிறோம். பொருட்செலவு அதிகம் செய்ய வேண்டியிருக்கும் என்பதே இக்கருவியைப் பயன் படுத்துவதில் உள்ள சிக்கல். கங்காரு தாய் பராமரிப்பு இயற்கையான முறையில் மேற்கொள்ளப்படுவதால் பொருட்செலவு குறைவதோடு, தாய்க்கும் சேய்க்கும் பல நன்மைகளும் ஏற்படும்.

கங்காரு பராமரிப்பின் நன்மைகள்

குழந்தையின் உடல் வெப்ப நிலைக்கு ஏற்றவாறு கங்காரு பராமரிப்பை மேற்கொள்பவர்களின் உடல் சரிவிகிதத்தில் வெப்பத்தை வெளிவிடும். குழந்தை அதிக குளிரான சூழலில் இருக்கும்போது அதிக அளவு வெப்பத்தை வெளி விடும். அதிக வெப்பநிலையோடு குழந்தை இருக்கும்போது குறைவான வெப்பத்தை வெளிவிடும். இந்தப் பராமரிப்பை மேற்கொள்பவர்களின் உடலே, குழந்தையின் வெப்ப நிலையை சரி செய்து கொள்ளும் வல்லமை பெற்றது என்பதுதான் முக்கியமானது. இன்குபேட்டர் கருவியில் வைத்திருக்கும்போது தாயும் சேயும் பிரிந்திருக்க வேண்டிய நிலைமை உருவாகுகிறது. இதனால் குழந்தைக்கு முறையாக தாய்ப்பால் கிடைக்காமல் போகும்.

கங்காரு தாயார் பராமரிப்பு முற்றிலும் தாய்சேய் நலன் சார்ந்தது. தாயின் அரவணைப்பில் இருக்கும்போது குழந்தைக்கும் தாய்க்குமான பிணைப்பு அதிகமாகிறது. இதன் காரணமாக தாய்ப்பால் அதிக அளவில் சுரக்கும். தாய்ப்பாலை குடிக்கும்போது குழந்தை நல்ல ஆரோக்கியத்தோடு வளரும். கங்காரு தாயார் பராமரிப்பு முறையை மருத்துவமனையில்தான் செய்ய வேண்டும் என்பதில்லை. இங்கு பயிற்சி எடுத்துக் கொண்டு வீட்டிலும் மேற்கொள்ளலாம். நாளொன்றுக்கு 24 மணி நேரமும் கங்காரு பராமரிப்பை மேற்கொண்டாலும் தவறில்லை. குறைந்தது 8 மணி நேரமாவது இந்தப் பராமரிப்பை மேற்கொண்டால்தான் கூடிய விரைவில் குழந்தை நல்ல உடல் நிலைக்குத் திரும்பும்.

குழந்தைக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால் கூட, தாய் சுவாசிக்கையில் குழந்தையின் உணர்வும் தூண்டப்பட்டு, சுவாசம் சீராகிறது. குழந்தையை மார்புடன் இணைத்து இப்பராமரிப்பை மேற்கொண்டபடியே, வீட்டு வேலை களையும் கவனித்துக் கொள்ளலாம். குழந்தை இரண்டரை கிலோவுக்கு மேல் வளர்ந்த பிறகு இப்பராமரிப்பை நிறுத்தி விடலாம். போதுமான அளவு வெப்பம் கிடைத்து குணமாகி விட்ட குழந்தைகள் இனி மேற்கொண்டு இந்தப் பராமரிப்பு தேவையில்லை என்பதை குறிப்பாலே உணர்த்தி விடுவார்கள். எட்டி உதைத்தல், அழுதல் ஆகியவற்றை வைத்து நாம் புரிந்து கொள்ளலாம். இப்பராமரிப்பை மேற்கொள்பவர்கள் கிருமித்தொற்று ஏற்படாத வண்ணம் சுத்தமாக இருத்தல் அவசியம்.

விழிப்புணர்வு

பொருட்செலவைக் குறைப்பதோடு மட்டுமில்லாமல் தாய்க்கும் சேய்க்கும் நல்லதொரு பிணைப்பையும் உருவாக்கும் கங்காரு தாயார் பராமரிப்பு முறை 20 ஆண்டுகளுக்கும் மேலாக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமீபமாகத்தான் கங்காரு தாயார் பராமரிப்பு மற்றும் பயிற்சிக்காக தனிப்பிரிவு ஒதுக்கப்பட்டிருக்கிறது. இப்பிரிவில் சாய்வான நாற்காலியில் அமர்ந்தபடியே இப்பராமரிப்பை மேற்கொள்கின்றனர். பேச்சு மற்றும் காட்சி ஊடகம் மூலமாகவும் கங்காரு தாயார் பராமரிப்பு குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. 2011லிருந்து மே 15 அன்று, ‘உலக கங்காரு தாய் பராமரிப்பு தினம்’ கொண்டாடப்படுகிறது. இதன் மூலம் இப்பராமரிப்பு குறித்து அனைத்து கர்ப்பிணிகளிடத்திலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பேனா, பென்சில் எல்லாவற்றையும் கையோடு எடுத்து வந்த கிம் ஜாங்!! ( வீடியோ)
Next post பெண்கள் உச்சகட்டம் அடைவதவற்கு ஆண்கள் எப்படி உதவ வேண்டும்? (அவ்வப்போது கிளாமர்)