எதிர்பாராத சிக்கல்கள்!! (மருத்துவம்)

Read Time:13 Minute, 41 Second

எல்லா கர்ப்பிணிகளும் எவ்வித சிரமமும் இல்லாமல், சுகப்பிரசவம் ஆக வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன்தான் மருத்துவமனைக்குச் செல்கின்றனர். ஆனாலும், சில நேரங்களில் பிரசவத்தில் எதிர்பாராத சில சிக்கல்கள் தோன்றுவது உண்டு அல்லது ஏற்கனவே எதிர்பார்த்த சிக்கல்களும் ஏற்படுவது உண்டு. அவற்றின் விளைவால் பிரசவம் தாமதமாவதுண்டு. அவற்றைத் தெரிந்துகொள்வது கர்ப்பிணிக்கும், அவரது குடும்பத்தாருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

சுகப்பிரசவம் ஆவதற்குக் கருப்பை சரியான நேரத்தில், சரியான அளவில் சுருங்கி விரிய வேண்டியது ஒரு முக்கியமான உடலியல் அம்சம். இவ்வாறு கருப்பை சுருங்கி விரிவதற்குத் தேவையான வலிமை இல்லாமல், சரியான இடைவெளிகளில் சுருங்கி விரியாமல் ‘தூக்க நிலையில்’ இருந்தால், கருப்பையின் வாய்ப்பகுதி சரியாகத் திறக்கப்படாமல் போகலாம்.

அடுத்து, குழந்தைக்கு ஏற்ற அளவில் பிறப்புப் பாதையின் அளவு சரியாக அமையாமல் போகலாம்; கர்ப்பிணியின் இடுப்பெலும்பு சுருங்கி இருக்கலாம் அல்லது பிறப்புப்பாதையைவிட குழந்தையின் தலை அளவு அதிகமாக இருக்கலாம். இவை தவிர, குழந்தை இயல்புக்கு மாறாகப் படுத்திருந்தாலும், இயல்புக்கு மாறாக இறங்கியிருந்தாலும், குழந்தைக்குப் பிறவிக் குறைபாடுகள் காணப்பட்டாலும் இதே நிலைமைதான் ஏற்படும்.

இம்மாதிரியான காரணங்களால் குழந்தை சரியாகக் கீழே இறங்கி வராமல், பிரசவம் நிகழ வேண்டிய நேரத்தில் நிகழாமல் பிரசவ நேரம் நீடிக்கலாம்; பிரசவம் தாமதமாகலாம். கருப்பையின் வாய்ப்பகுதி விரியும் அளவு முதல்முறையாக கர்ப்பமடையும் பெண்ணுக்கு மணிக்கு 1 செ.மீ.க்கும் குறைவாகவும், குழந்தை இறங்கும் வேகம் மணிக்கு 1 செ.மீ.க்கும் குறைவாகவும் இருந்தால், ஏற்கனவே தாயானவர்களுக்கு இந்த இரண்டுமே அரை மணிக்கு 1 செ.மீ.க்கும் குறைவாகவும் இருந்தால், அதை நீடித்த பிரசவம்(Prolonged labour) அல்லது தாமதமான பிரசவம் என்கிறோம்.

இம்மாதிரியான நேரங்களில் கர்ப்பிணியின் உடல்நிலைக்கோ, குழந்தையின் உடல்நிலைக்கோ ஆபத்து நெருங்கும் என மருத்துவர் எதிர்பார்த்தால்,
பிரசவத்தைத் தூண்டுவதற்குப் பல நடவடிக்கைகளை மேற்கொள்வார்.

பிரசவத்தைத் தூண்டும் முறைகள்

கருப்பையின் வாய்ப்பகுதியில் உள்ள பனிக்குடத்தின் சவ்வு போன்ற பகுதிகள் சரியாகக் கீறப்படவில்லை எனும்போது, மருத்துவர் அதைக் கீறிவிடுவார். அப்போது பனிக்குட நீர் வெளிவரும். ஆம்னியாட்டமி(Amniotomy) எனும் இந்தச் சிகிச்சையின் வாயிலாக பிரசவம் எளிதாகவும், விரைவாகவும் நிகழ வாய்ப்புண்டு.

சமயங்களில் சிறிதளவே திறந்துள்ள கருப்பையின் வாய் வழியாக மருத்துவர் தமது விரலைச் செலுத்தி, கருப்பையில் ஒட்டிக்கொண்டிருக்கும் பனிக்குடப் படலத்தை, கருப்பைச் சுவரிலிருந்து பிய்த்து எடுப்பார். இதைத் தொடர்ந்து கருப்பை வாய் திறக்கும்.மேலும் இவ்வாறு செய்யும்போது, பனிக்குட நீரின் நிறத்தைத் தெரிந்துகொண்டு, குழந்தையின் நிலைமையையும் தெரிந்துகொள்ளலாம்.

பனிக்குட நீர் தெளிவாக இருந்தால், குழந்தைக்குப் பிரச்னை இல்லை என்று பொருள். அது பச்சை நிறத்தில் இருந்தால், குழந்தை உள்ளேயே மலம் கழித்துவிட்டது என்று பொருள். குழந்தைக்கு ஆக்ஸிஜன் குறைவாகக் கிடைக்கும்போது, இவ்வாறு மலம் கழித்துவிடும். குழந்தைக்கு மூச்சுத் திணறுகிறது என்பதைத் தெரிவிக்கும் அறிகுறி இது.

ஆக்ஸிடோசின் மருந்து செலுத்தப்படுதல் பெரும்பாலான கர்ப்பிணிகளுக்கு பிரசவத்தைத் தூண்டவும், பிரசவ வலியை அதிகப்படுத்தவும் ஆக்ஸிடோஸின் மருந்து செலுத்தப்படுவதுண்டு.

முதலில் இதை சிறிய அளவில் கொடுக்கத் தொடங்கி, பிறகு சிறிது சிறிதாக அளவை அதிகரிப்பது நடைமுறை. கருப்பை சரியான இடைவெளிகளில் சுருங்கி விரியும்வரை இந்த மருந்தைச் செலுத்துவார்கள். இந்த மருந்தைச் செலுத்தும்போது, கர்ப்பிணியின் நாடித்துடிப்பு, குழந்தையின் இதயத்துடிப்பு ஆகியவற்றைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது முக்கியம்.

சிலருக்கு ஆக்ஸிடோஸின் மருந்துக்குப் பதிலாக புராஸ்டோகிளான்டின் மாத்திரைகளைக் கர்ப்பிணியின் பிறப்புறுப்பில் வைப்பார்கள் அல்லது புராஸ்டோகிளான்டின் ஜெல்லை கருப்பை வாய்ப்பகுதியில் தடவுவார்கள். சிலருக்கு புராஸ்டோகிளான்டின் மாத்திரைகளை வாய்வழியாகக் கொடுப்பதும் உண்டு.அடுத்து, கர்ப்பிணியின் படுக்கை நிலையை மாற்றிப் பார்ப்பார்கள். ஆக்ஸிஜன் கொடுப்பார்கள்.

உடலில் நீரிழப்பு ஏற்படுவதைத் தவிர்க்க குளுக்கோஸ் சலைன் ஏற்றுவார்கள். வலியைக் குறைக்கும் ஊசிகளும் பயன்படுத்தப்படுவது உண்டு. இவற்றின் மூலம் கருப்பை சரியாகச் சுருங்கி விரியவும், கருப்பை வாய் நன்றாகக் கனிந்து திறக்கவும் வழி செய்யப்படும். இதன் பலனால், குழந்தை பிறப்புப்பாதையில் எளிதாக இறங்கிவரும். சுகப்பிரசவமாக வழி கிடைக்கும்.

இத்தனை முயற்சிகளுக்குப் பிறகும் தாமதமாகிறது என்றால், அதேநேரம் சுகப்பிரசவம் ஆக வாய்ப்புள்ளது என்பது உறுதியானால், வேக்குவம் கப்(Vacuum cup) அல்லது ஃபோர்சப்ஸ் எனும் ஆயுதத்தைப் பயன்படுத்தி, குழந்தையைப் பிரசவிப்பார்கள். ஒருவேளை குழந்தைக்குத் தீவிரமான பிரச்னை இருந்து, பிரசவம் விரைவில் ஏற்படாது எனும் நிலைமை உண்டானால், சிசேரியன் சிகிச்சை செய்வார்கள்.

யாருக்குத் தேவை?

கர்ப்பிணி குட்டையாக இருந்தால், குழந்தையின் தலை பெரிதாக இருந்தால், குழந்தை படுத்துள்ள நிலையில் மாறுதல் தெரிந்தால் பிரசவத்தைத் தூண்டும் முயற்சிகள் தேவைப்படும். பிரசவம் எதிர்பார்த்த தேதிக்குப் பிறகும் ஆகாமல் இருப்பவர்களுக்கு இவை அவசியப்படும். பிரசவ வலி ஏற்படுவதற்கு முன்பே பனிக்குடத்தின் சவ்வுப்படலம் வெடித்துவிட்டால், இவை தேவைப்படும்.

கர்ப்பிணிக்கு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக நோய் போன்ற நோய்கள் இருந்தால், பனிக்குட நீரில் தொற்றுகள் காணப்பட்டால், குழந்தையின் வளர்ச்சி தடைபட்டிருந்தால், பிறப்பதற்கு முன்பே குழந்தை கருப்பையில் இறந்துவிட்டது என்றாலும் மேற்சொன்ன முயற்சிகள் தேவைப்படும்.

எப்போது, யாருக்கு இது கூடாது?

நச்சுக்கொடி கருப்பையின் கீழ்ப்பகுதியில் இருக்கும்போதும், கருப்பையின் வாய்ப்பகுதி முழுமையாக நச்சுக்கொடியால் மூடப்பட்டிருக்கும் போதும் பிரசவ வலியைத் தூண்டும் முயற்சிகளை மேற்கொள்ளக்கூடாது.

மேலும், முந்தைய பிரசவங்களில் தாய்க்கு சிசேரியன் செய்யப்பட்டிருந்தாலும், கருப்பைக் கட்டிகளை அகற்றும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் பிரசவ வலியைத் தூண்டும் முயற்சிகளை மேற்கொள்ளக்கூடாது. இவர்களுக்கு சிசேரியன் சிகிச்சைதான் உதவும்.

குழந்தையின் இதயத் துடிப்பு சரியா?

பிரசவம் நிகழும்போது, குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதை உறுதி செய்ய மிகச் சிறந்த வழி, அதன் இதயத்துடிப்பைக் கண்காணிப்பதுதான். பொதுவாகவே, பிரசவத்தின்போது அதன் இதயத்துடிப்பில் சில மாறுதல்கள் காணப்படும். அவற்றில் இயல்பானவை எவை, இயல்புக்கு மாறானவை எவை என்பதை அறிய, ‘எலெக்ட்ரானிக் ஃபீட்டல் மானிட்டரிங் கருவி’ பயன்படுகிறது. பெரியவர்களுக்கு இதயப் பிரச்னைகளை அறிய இசிஜி எடுத்துப் பார்ப்பதைப்போலத்தான் இதுவும்!

கருவில் உள்ள குழந்தையின் இதயத்துடிப்பு பொதுவாகவே 120 முதல் 160 முறை வரை துடிக்கும். இந்த அளவு குறைந்தாலோ, கூடினாலோ குழந்தைக்கு ஏதோ பிரச்னை என்று தெரிந்துகொள்ளலாம்.

குழந்தையின் இதயத்துடிப்பில் ஏற்படும் மாற்றங்கள் கர்ப்பிணியின் கருப்பை சுருங்கி விரியும் தன்மையுடன் தொடர்புடையவை என்பதால், கருப்பை சுருங்கி விரியும் வேகத்தையும் காலத்தையும் கணித்துக்கொண்டு, தேவையான சிகிச்சைகளை மேற்கொள்கிறார் மருத்துவர்.

பொதுவாக, குழந்தையின் இதயத்துடிப்பு தொடர்ந்து குறைவாக இருந்தாலோ, மிகவும் அதிகமாக இருந்தாலோ குழந்தைக்கு மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்னைகள் உள்ளதாகக் கணிக்கப்படும்.ஃபீட்டல் நான் ஸ்ட்ரெஸ் டெஸ்ட் (Fetal Non-Stress Test)கருத்தரித்து 28 வாரங்களுக்குப் பிறகு மேற்கொள்ளப்படும் எளிய பரிசோதனை இது.

கருக்குழந்தையின் மீது எவ்வித அழுத்தமும் தராமல் மேற்கொள்ளப்படுவதால் இதற்கு இந்தப் பெயர்! ‘எலெக்ட்ரானிக் ஃபீட்டல் மானிட்டரிங் கருவி’யை தாயின் அடிவயிற்றின் மேல் வைத்து, குழந்தையின் இதயத்துடிப்பைக் கண்காணிக்கும் முறை இது.

குழந்தைக்குப் போதிய ஆக்ஸிஜன் கிடைக்கிறதா என்பதை இதன் மூலம் அறியலாம். போதிய ஆக்ஸிஜன் கிடைக்கவில்லை என்றால், அதன் இதயத்துடிப்பில் தீவிரமான மாற்றங்கள் தோன்றும்.

அப்போது அடுத்தகட்ட நடவடிக்கைகளை மருத்துவர் மேற்கொள்வார்.இரட்டைக் குழந்தை, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக நோய் ஆகிய கர்ப்பகாலச் சிக்கல்கள் உள்ளவர்களுக்கு மூன்றாவது டிரைமெஸ்டரில் வாரம் ஒருமுறை இந்தப் பரிசோதனையை மேற்கொள்வதுண்டு.

மேலும், பிரசவ நேரத்தில் குழந்தையின் அசைவுகள் குறைவாக இருக்கும்போதும், கணக்கிட்ட தேதிப்படி பிரசவம் ஆகாவிட்டாலும், கருக்குழந்தையின் வளர்ச்சி சரியில்லை என்றாலும், நச்சுக்கொடி மற்றும் தொப்புள்கொடி பிரச்னை செய்தாலும் இந்தப் பரிசோதனை தேவைப்படும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எல்லை தாண்டும் பயங்கரவாதம்!! (அவ்வப்போது கிளாமர்)
Next post மனசை ரிலாக்ஸ் ஆக்கும் ஆப்கள்!! (மகளிர் பக்கம்)