ஜப்பானில் புல்லட் ரெயில்களை நிறுத்திய ஒற்றை நத்தை!! (உலக செய்தி)
ஜப்பானில் இயக்கப்படும் அதிவேக புல்லட் ரெயில்கள் நேரம் தவறாமைக்கு உலகளவில் முன்னுதாரணமாக இருந்து வருகின்றன. நிலநடுக்கம், கன மழை போன்ற கடுமையான இயற்கை சீற்றங்களின்போது கூட அங்கு புல்லட் ரெயில் சேவை முழுமையாக நிறுத்தப்பட்டது கிடையாது.
இந்த நிலையில், கடந்த மாதம் 30-ந் தேதி நாட்டின் தெற்கு பகுதியில் புல்லட் ரெயில்கள் வழித்தடத்தில் ஏற்பட்ட மின் கோளாறு காரணமாக 25 புல்லட் ரெயில்களின் சேவை முழுமையாக நிறுத்தப்பட்டது. இதனால் 12 ஆயிரத்திற்கும் அதிகமான பயணிகள் பாதிப்புக்கு உள்ளானார்கள்.
இந்த நிலையில், புல்லட் ரெயில் சேவை பாதிப்புக்கு ஒரு நத்தைதான் காரணமாக இருந்திருக்கிறது என்ற தகவல் தற்போது தெரியவந்துள்ளது. மின்சாரம் தடைப்பட்டதற்கான காரணம் குறித்து புல்லட் ரெயில் ஊழியர்கள் ஆராய்ந்தபோது, ரெயில் பாதைக்கு தொடர்புடைய ‘எலக்ட்ரானிக்’ கருவியில் உயிர் இழந்த நிலையில் நத்தை ஒன்றை மீட்டனர்.
கட்டுப்பாட்டு அறையில் உள்ள எலக்ட்ரானிக் கருவியை கடக்க முயன்றபோது, நத்தை மீது மின்சாரம் பாய்ந்து, அதனால் மின்சாரம் தடைப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இயற்கை பேரிடர்களால் கூட நிறுத்த முடியாத ஜப்பான் புல்லட் ரெயில் சேவையை ஒரு நத்தை நிறுத்திவிட்டது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.
Average Rating