அகதிகள் முகாம் மீது விமான தாக்குதல்- 40 பேர் பலி!! (உலக செய்தி)
வட ஆப்பிரிக்காவில் உள்ள லிபியாவில் உள் நாட்டு போர் நடந்து வருகிறது. அங்கு அரசு படைகளுக்கும், கலிபா ஹப்டர் தலைமையிலான லிபிய தேசிய இராணுவம் படையினருக்கும் கடும் சண்டை நடந்து வருகிறது.
இரு தரப்பினரும் வான் வழித்தாக்குதல் துப்பாக்கி சண்டை ஆகியவற்றில் ஈடுபட்டு வருகிறார்கள். தலைநகர் திரிபோலியை கைப்பற்ற கலிபா ஹப்டர் தலைமையிலான கிளர்ச்சியாளர்கள் படையினர் தீவிரமாக முயன்று வருகிறார்கள்.
இந்நிலையில் திரிபோலி அருகே உள்ள தஜோரா பகுதியில் புலம்பெயர்ந்தவர்கள் முகாம் மீது விமான தாக்குதல் இன்று நடத்தப்பட்டது. இங்கு ஆப்பிரிக்கா மற்றும் அரபு நாடுகளில் இருந்து ஆவணம் இன்றி வந்தவர்கள் அகதிகளாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த மையம் மீது இன்று அதிகாலை வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது. விமானங்கள் மூலம் வெடிகுண்டுகளை வீசினார்கள். இதில் 40 அகதிகள் உடல் சிதறி பலியானார்கள். 80க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
அவர்களை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை கூடும் என்று அஞ்சப்படுகிறது. விமான தாக்குதலை கிளர்ச்சியாளர் படையினர் நடத்தி உள்ளனர் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
Average Rating