சர்ச்சை காட்சியில் நடித்தது ஏன்? (சினிமா செய்தி)
ரகுல்பிரீத் சிங் நடித்துள்ள மன்மதடு-2 தெலுங்கு படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. இதில் அவர் புகைப்பிடிக்கும் காட்சிகள் இடம்பெற்று இருந்ததால் சமூக வலைத்தளத்தில் எதிர்ப்பு கிளம்பி பலரும் அவரை கண்டித்தனர். இதற்கு விளக்கம் அளித்து ரகுல்பிரீத் சிங் கூறியதாவது:-
“சினிமாவில் கதாபாத்திரங்களை டைரக்டர்கள் உருவாக்கி அதில் எங்களை நடிக்க வைக்கின்றனர். படங்களில் வருவது மாதிரி நிஜ வாழ்க்கையில் நாங்கள் இருப்பது இல்லை. ஆனால் சினிமாவில் நடிக்கும் கதாபாத்திரங்களை சர்ச்சையாக்குகிறார்கள்.
மன்மதடு-2 தெலுங்கு படத்தில் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சியில் நடித்ததற்கு எதிர்ப்பும், விமர்சனங்களும் கிளம்பி உள்ளன. நிஜ வாழ்க்கையில் எனக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லை. வாரத்தில் ஒரு நாளை பிடித்த உணவு வகைகளை சாப்பிடுவதற்கு ஒதுக்குகிறார்கள். அதுகூட எனது வாழ்க்கையில் கிடையாது. என்னை பற்றி சுற்றி இருப்பவர்களுக்கு நன்றாக தெரியும். நான் ஆரோக்கியத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறேன். உடற்பயிற்சிக்கு எவ்வளவு நேரம் ஒதுக்குகிறேன் என்று அவர்கள் அறிவார்கள். அர்ஜுன் ரெட்டி, கபீர் சிங் படங்களில் கதாநாயகன் புகைப்பிடிக்கும் காட்சிகள் உள்ளன.
உடனே அவர்கள் புகைப்பிடிக்க ஊக்குவிக்கிறார்கள் என்று அர்த்தமா? சினிமாவில் செய்வதை நிஜ வாழ்க்கையில் நாங்கள் கடைபிடிப்பது இல்லை. இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை எதிர்ப்பாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும். என்னை பெற்றோர்கள் புரிந்துள்ளனர். அதுபோதும்.” இவ்வாறு ரகுல்பிரீத் சிங் கூறினார்.
Average Rating