சினைப்பை புற்றுநோய் பயம் வேண்டாம்!! (மருத்துவம்)

Read Time:11 Minute, 51 Second

அமெரிக்க புற்றுநோய் ஆய்வு நிலையஅறிக்கையின்படி பெண்களைத் தாக்கும் புற்றுநோய்களுள் சினைப்பை புற்றுநோய் (Ovarian Cancer) 8 ஆவது மற்றும் ஒட்டுமொத்தமாக அனைவரையும் தாக்கும் புற்றுநோய்களுள் 18ஆம் இடத்திலும் உள்ளது. 2018 ஆம் ஆண்டு உலகெங்கும் 3,00,000 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.

“உடலுறுப்புகளில் உள்ள உயிரணுக்கள் கட்டுப்பாடற்ற முறையில் வளரத் தொடங்குவதே எந்த வகைப் புற்றுநோய்க்குமான அறிகுறியாகும். குறிப்பாக சினைப்பை புற்றுநோயின் தாக்கத்தைக் குறைக்க உரிய காலத்தில் பரிசோதனை செய்தல் அவசியம்” என்று சொல்லும் புற்றுநோய் மருத்துவரான டாக்டர் பாண்டிதுரையிடம் பேசியதில்…

சினைப்பை புற்றுநோய் என்றால் என்ன?

பெண் உடலிலுள்ள சினைப்பை மற்றும் இனப் பெருக்கச் சுரப்பிகளில் சினைப்பைப் புற்றுநோய் தோன்றும். இந்நிலையில் சினைப்பையிலுள்ள பலவகை உயிரணுக்களில் கட்டிகள் வளர ஆரம்பிக்கும். கட்டிகளில் இரு முக்கியப் பிரிவுகள் உள்ளன. சினைப்பையின் வெளிப்புற திசு அடுக்கில் உருவாக்கும் கட்டிகளுக்கு எபிதெலிகல் கட்டிகள் (Epithelical tumors) என்று பெயர்.

90% சினைப்பைப் புற்றுநோய்கள் இப்பிரிவைச் சேர்ந்தவையே ஆகும். ஹார்மோன்களை உற்பத்தி செய்யும் உயிரணுக்களில் கட்டிகள் வளர்ந்தால் அவற்றுக்கு ஸ்ட்ரோமல் கட்டிகள் (Stromal tumors) என்று பெயர். 7% சினைப்பைப் புற்றுநோய்கள் இவ்வகையைச் சேர்ந்தவையே. சினைப்பைகள் இடுப்புப் பகுதி உறுப்புகள் என்பதால், முற்றும் வரை இந்நோய் பெரும்பாலும் கண்டறியப்படுவதில்லை.

நோய்க்கான அறிகுறிகள் எவை?

இந்நோய்க்குக் குறிப்பிட்ட நோய்க்குறிகள் ஏதுமில்லை என்றாலும் ஒரு சில அடையாளங்கள் தோன்றும். அடிக்கடி சிறுநீர் கழித்தல், வயிறு வீக்கம், தொடர் அமிலப் பிரச்சினைகள், குறைந்த அளவு உணவு உட்கொண்ட நிலையிலும் வயிறு நிறைந்த இயல்பற்ற நிலை, வழக்கத்துக்கு மாறாக பிறப்புறுப்பில் ஒழுக்கு மற்றும் ரத்தக் கசிவு போன்ற அறிகுறிகள் தோன்றலாம்.

எந்த வயது பெண்களுக்கு வரும்?

இந்தியாவிலுள்ள பெண்களைப் பாதிக்கும் பொதுவான புற்றுநோய்களுள் சினைப்பைப் புற்றுநோய் நான்காவது இடம் வகிக்கிறது. உலகளாவிய தரவுகளின்படி 50-60 வயதுப் பிரிவிலுள்ள பெண்களே அதிகப் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். ஆனால் உலகளாவிய தரவுகள் எடுக்கப்படுவதற்குப் பத்தாண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் 41-50 வயதுப் பிரிவுப் பெண்களுக்கு இந்தப் பாதிப்பு வந்ததாகப் புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன.

சினைப்பை புற்றுநோய் இருப்பதை எப்படி கண்டறிவது?

வயிறு மற்றும் இடுப்புப் பகுதிகளில் குறித்த காலத்தில் அல்ட்ரா சவுண்ட் பரிசோதனைகளை மேற்கொள்வதன் மூலம் நோயைக் கண்டறிவது எளிதான மற்றும் புத்திசாலித்தனமான முறையாகும். இதன் காரணமாகச் சிகிச்சை தொடக்கத்திலேயே வழங்கப்படுவதால், நோயாளியின் வாழ்க்கைத் தரம் மேம்படும்.

குடும்ப உறுப்பினர்களில் யாரேனும் ஒருவருக்கு மார்பகம் மற்றும் சினைப்பைப் புற்றுநோய் இருக்கும் பட்சத்தில், பரிசோதனையில் 20% பெண்களுக்கு பிஆர்சிஏ மரபணு (BRCA gene) இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கருமுட்டை உற்பத்தி / வெளிப்படுத்தலில் மாற்றம் காரணமாக குழந்தைப் பேறின்மை அல்லது கருத்தறிப்பதில் தாமதம் ஏற்பட்டால், அதீத உடல் எடையே புற்றுநோய்க்கு காரணமாக அமையும். சினைப்பைப் புற்றுநோயைக் கீழ்க்காணும் சில பரவலான முறைகளில் கண்டறியலாம்:

1) இடுப்புப் பகுதி பரிசோதனையில் சினைப்பைகள் மற்றும் கருப்பையின் அளவு, வடிவமைப்பு ஆகியவற்றை மருத்துவ நிபுணர் அறிந்து கொள்வார். மேலும் இடுப்புப் பகுதி பரிசோதனை மூலம் பெண்களைத் தாக்கும் சில புற்றுநோய்கள் குறித்தும் தொடக்கத்திலேயே கண்டுபிடிக்கலாம்.

2) வயிறு மற்றும் இடுப்புப் பகுதி அல்ட்ரா சவுண்ட் பரிசோதனையில் ஒலி அலைகளைப் பயன்படுத்திக் கருப்பை, கருமுட்டைக் குழாய் மற்றும் சினைப்பைகளைப் பார்க்க முடியும். சினைப்பையில் உள்ள கட்டியையும் கண்டறியலாம். இருப்பினும் ஒவ்வொரு கட்டியும் புற்றுநோயாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

3) வயிறு மற்றும் இடுப்புப் பகுதிகளின் சிடி / எம்ஆர்ஐ பரிசோதனை மூலம் சினைப்பையின் தொகுப்பையும் , வயிற்றறை உறை மற்றும் மற்ற வயிறு உறுப்புகளில் அது பரவி இருப்பதையும் பார்க்கலாம்.

4) சிஏ – 125 ரத்தப் பரிசோதனை என்பது ரத்தத்தில் சிஏ – 125 (CA-125 ) அதாவது புரதத்தின் அளவைக் கணக்கிடும் பரிசோதனை ஆகும். சினைப்பைப் புற்றுநோயுள்ள பெண்களுக்கு சிஏ-125 அளவுகள் 500க்கும் அதிகமாக 1000 – 2000 வரை இருக்கும்.

5) திசுப் பரிசோதனையில் சினைப்பையிலிருந்து சிறிய திசு மாதிரி (Tissue Sample) எடுக்கப்பட்டு நுண்ணோக்கியில் பகுப்பாய்வு செய்யப்படும். சினைப்பை புற்றுநோய் பாதிப்பு இருப்பதைத் திசுப்பை பரிசோதனை மூலம் மட்டுமே மருத்துவர் உறுதிப்
படுத்த முடியும்.

அளிக்கப்படும் சிகிச்சைகள்

சிகிச்சை மற்றும் பாதுகாப்பில் உள்ள மேம்பாடு மற்றும் முன்கூட்டிய கண்டுபிடிப்புகள் காரணமாக உயிர் பிழைக்கும் சாத்தியக் கூறுகள் பெருகிவிட்டன. தொடக்கத்தில் அதாவது முதல் நிலையில் அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படும். மூன்றாம் நிலையில் அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து கீமோதெரபி அளிக்கப்படும்.

இரண்டாம் நிலையில் மேற்கண்ட இரண்டில் ஏதேனுமொரு சிகிச்சை தரப்படும். தொடக்க நிலையில் 5 ஆண்டு உயிர் வாழும் வாய்ப்பு 80 சதவீதம் மற்றும் தீவிர நிலையில் உயிர் வாழும் வாய்ப்பு 24 – 36 மாதங்கள் மட்டுமே ஆகும். நான்காம் நிலையில் உயிர் பிழைக்கும் வாய்ப்பு மிகக் குறைவே ஆகும். வாழப் போகும் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் நோயாளிகளுக்கான கடைநிலை மருத்துவம் நோய் மேலும் பரவாமல் தடுக்கும் நோக்கத்துடனேயே வழங்கப்படும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

இதில் சில பெண்களுக்கான சினைப்பை புற்றுநோய்க்கு மரபியலே காரணமெனில் எதையும் மாற்ற இயலாது. சினைப்பை புற்றுநோய் வாழ்க்கையில் வருவதற்கான வாய்ப்பு 10% – 40% வரை ஆகும். அன்றாட வாழ்க்கையில் கீழ்க்காணும் சில விஷயங்களில் கவனமாகச் செயல்பட்டால்தொடக்கத்திலேயே நோயை மேலாண்மை செய்யலாம்.

எடை கூடாமல் பராமரிப்பு

ஆரோக்கியமான எடையைப் பராமரிப்பது, சினைப்பை புற்றுநோய் வராமல் தடுப்பது போன்றவை உடல் நலம் சார்ந்த பல்வேறு பலன்களைத் தரும். BMI 30க்கு அதிகமாக இருப்பவர்களுக்கு மாதவிடாய் நிற்பதற்கு முந்தைய கட்டத்திலேயே இந்நோய் தாக்குவதற்கான வாய்ப்பு அதிகம்.

குடும்பக் கட்டுப்பாடு மற்றும் ஆரோக்கியமான தாம்பத்ய வாழ்க்கை35 வயதுக்கு மேல் கருவுற்ற மற்றும் குழந்தைப் பேறு இல்லாத பெண்களுக்குச் சினைப்பை புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம். கருத்தரித்தலைத் தவிர்க்கும் பெண்கள் கருத்தடைக்கு வாய் வழி மாத்திரைகளை எடுத்துக் கொள்வது சினைப்பை புற்றுநோய் பாதிப்பைக் குறைக்கும்.

டால்கம் பவுடரைத் தவிர்க்கவும்

தற்போது சுகாதார நோக்கில் பெண் குறியைச் சுற்றி டால்கம் பவுடர் பயன்படுத்துவது வழக்கத்தில் உள்ளது. இந்தப் பழக்கம் சினைப்பை புற்றுநோய் பாதிப்பை அதிகப்படுத்தும் என்பதால் பல மருத்துவ நிபுணர்கள் அதைத் தவிர்க்கும்படி ஆலோசனை கூறுகின்றனர்.

புற்றுநோய் உயிர்க்கொல்லி மற்றும் கவலை அளிக்கும் நிலை என்றாலும் மற்ற புற்றுநோய்களுடன் ஒப்பிடும் போது சினைப்பை புற்றுநோயை உரிய சிகிச்சை மூலம் நிர்வகிக்க முடியும் என்பதை ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

இந்நோய் இருப்பதைத் தொடக்கத்திலேயே கண்டுபிடித்தால் இதிலிருந்து விடுபட்டு வெளியே வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். சினைப்பை புற்றுநோய் இருப்பதைக் கண்டறிய தொடக்கத்திலேயே பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டியது கட்டாயமாகும். பொறுப்புள்ள மற்றும் நிறைவான வாழ்க்கை வாழ இது எளிமையான வழியும் கூட.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கிச்சன் டிப்ஸ்!! (மகளிர் பக்கம்)
Next post பெண்கள் கவர்ச்சியாக இருந்தும், ஏன் அழகு சாதனங்களைப் பெரிதும் விரும்புகிறார்கள்? (அவ்வப்போது கிளாமர்)