அயோத்தியில் ராமர் கோவில் கட்ட பொதுமக்களிடம் நிதி !! (உலக செய்தி)
அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு கடந்த நவம்பர் 9-ந்தேதி தீர்ப்பளித்தது.
சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கு அனுமதி வழங்கிய கோர்ட்டு, கோவில் கட்டுவதற்காக 3 மாதத்துக்குள் அறக்கட்டளை ஒன்றை மத்திய அரசு அமைக்க வேண்டும் என தீர்ப்பளித்தது.
மேலும் அயோத்தியில் முக்கியமான இடத்தில் மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
இதையடுத்து அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக அறக்கட்டளை அமைக்கும் பணிகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. முதற்கட்டமாக, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக திட்டமிட கூடுதல் செயலாளர் தலைமையிலான 3 அதிகாரிகள் கொண்ட புதிய குழுவை மத்திய அரசு நியமித்தது.
இந்த குழு அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு அளித்த அனைத்து உத்தரவுகளையும் நிறைவேற்றும் என்று உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அயோத்தி அறக்கட்டளையில் பா.ஜனதாவை சேர்ந்த ஒருவர் கூட இடம்பெற மாட்டார்கள் என தெரிவித்துள்ளனர். அறக்கட்டளையில் யார்-யார் இடம்பெறுவார்கள், அவர்களின் அதிகாரம் குறித்த அறிவிப்புகள் வருகிற 15-ந்தேதி பொங்கல் பண்டிகையான மகர சங்கராந்திக்கு பின் வெளியாகும் என தெரிகிறது.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘அறக்கட்டளை அமைக்க கோர்ட்டு வழங்கிய 3 மாத கெடு வருகிற பிப்ரவரி 9-ந்தேதி வரை உள்ளது. அதற்குள் அறக்கட்டளை குறித்து அறிவிப்புகள் வெளியிடப்படும்’ என்றார்.
ராமர் கோவில் கட்டுவதற்காக மக்களிடம் இருந்து நிதி திரட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது. சமீபத்தில் ஜார்க்கண்ட்டில் தேர்தல் பிரசாரம் செய்த உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், ராமர் கோவில் கட்டுவதற்கு ஒவ்வொரு வீட்டைசேர்ந்தவர்களும் ரூ.11 மற்றும் செங்கற்களை அளிக்குமாறு கேட்டிருந்தார்.
இதை பின்பற்றி நாடு முழுவதும் மக்களிடம் இருந்து நிதி வசூலித்து ராமர் கோவில் கட்டுவதற்கான ஏற்பாடுகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
Average Rating