சீனாவுக்கு நிபுணர் குழுவை அனுப்பி விசாரணை! (உலக செய்தி)
சீனாவில்தான் கொரோனா வைரஸ் முதன்முதலில் உருவானது. தற்போது, சீனாவில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்தாலும், உலகில் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உருவெடுத்துள்ளது.
அதனால், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சீனா மீது அடிக்கடி ஆத்திரத்தை வெளிப்படுத்தி வருகிறார். கொரோனாவை ‘சீனா வைரஸ்’ என்று வர்ணித்து வந்தார். கொரோனா குறித்து சீனா முன்கூட்டியே தகவல் தெரிவிக்காமல் மறைத்து விட்டதாக குற்றம் சாட்டினார்.
கடந்த சனிக்கிழமை, நிருபர்களை சந்தித்த டிரம்ப், “கொரோனாவை திட்டமிட்டே சீனா பரப்பி விட்டிருந்தால், அந்நாடு பின்விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும்” என்று கடுமையாக எச்சரித்தார்.
இந்நிலையில், டிரம்ப் மீண்டும் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:- சீனாவுடனான வர்த்தக பேரம் எனக்கு மகிழ்ச்சி அளித்தது. எல்லாமே மகிழ்ச்சி அளித்தது. பின்னர், பிளேக் (கொரோனா வைரஸ்) பற்றி தெரிய வந்தது. அது தெரிய வந்ததில் இருந்து எனக்கு மகிழ்ச்சி இல்லை.
இந்த நோய் எப்படி உருவானது? என்று விசாரணை நடத்த சீனாவுக்கு நிபுணர் குழுவை அமெரிக்கா அனுப்பும். சீனாவுக்கு குழுவை அனுப்புவது பற்றி சீனாவிடம் நீண்ட காலத்துக்கு முன்பே பேசினோம். இப்போது அனுப்ப விரும்புகிறோம். அங்கு என்ன நடக்கிறது? என்பதை அறிய விரும்புகிறோம். ஆனால், நிச்சயமாக சீனா அழைப்பு எதுவும் விடுக்கவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். விசாரணை அடிப்படையில், உண்மையை நாங்கள் கண்டுபிடிப்போம். இவ்வாறு டிரம்ப் கூறினார்.
Average Rating