மாடித்தோட்டம் அமைக்கலாம் வாங்க…!! (மகளிர் பக்கம்)
வீடுகளில் மாடித்தோட்டம் அமைப்பது எளிது. அதை அமைத்துவிட்டால் தினசரி வீட்டு சமையலுக்கு தேவையான காய்கறிகளை இத்தோட்டத்தில் இருந்தே பெறலாம். காய்கறி மட்டுமின்றி, கீரை, பழம், பூ ஆகியவையும் பயிரிடலாம். முதலில் வீட்டில் பயனற்ற பிளாஸ்டிக் டப்பா மற்றும் கோணிப்பைகளை செடி வளர்க்க பயன்படுத்தலாம். இவற்றில் மண்ணுக்கு பதிலாக தேங்காய் நார்களை போட்டு, அதில் விதைகளை நடலாம். உரத்திற்கு புண்ணாக்கும், மண்புழு உர எருக்கலவையை பயன்படுத்தலாம். பூச்சிக்கொல்லிக்கு பதிலாக வேப்ப எண்ணெயுடன் மஞ்சள் பொடி கலந்து பயன்படுத்தலாம்.பொதுவாக அனைத்து செடிகளையும் ஆடிப்பட்டத்தில் விதைக்கலாம் என்றாலும், ஒவ்வொரு செடியையும் குறிப்பிட்ட மாதத்தில் விதையிட்டால் அவை நன்றாக விளையும்.
எந்த மாதத்தில் என்ன
ஜனவரியில் கத்தரி, முள்ளங்கி, பாகல், தக்காளி, பூசணி, அவரை மற்றும் கீரை வகைகள் பயிரிடலாம். பிப்ரவரியில் வெண்டை, மிளகாய், மார்ச் மாதத்தில் தக்காளி, பாகல், அவரை, பீர்க்கன், ஏப்ரல் மாதத்தில் முருங்கை, அவரை, மே மாதத்தில் கத்தரி, தக்காளி, முருங்கை, ஜூன் மாதத்தில் கத்தரி, தக்காளி, கீரை, ஜூலையில் வெண்டை, பீர்க்கங்காய், ஆகஸ்ட் மாதத்தில் வெண்டை, பீர்க்கங்காய், மிளகாய், செப்டம்பர் மாதத்தில் முருங்கை, கத்தரி, முள்ளங்கி, அக்டோபரில் கத்தரி, தக்காளி, முள்ளங்கி, நவம்பரில் கத்தரி, தக்காளி, முள்ளங்கி, டிசம்பரில் தக்காளி, மிளகாய், சுரைக்காய் பயிரிடலாம்.
இவ்வாறு குறிப்பிட்ட மாதத்தில் குறிப்பிட்ட விதைகளை நட்டால் அவை நன்றாக விளையும். மாடித்தோட்டம் அமைக்க ஒரு முறை செலவு செய்தால் போதும். துவக்கத்தில் ரூ.3 ஆயிரம் செலவாகும். பின்பு உரத்திற்கு அவ்வப்போது செலவிட வேண்டும். வீட்டில் கழிவாகும் காய்கறி கழிவுகளை எடுத்து, மக்க வைத்து உரமாக மாற்றினால் அந்த செலவும் இருக்காது. தினசரி ரூ.50 முதல் ரூ.100 மதிப்புள்ள காய்கறிகள் கிடைக்கும். மாடித்தோட்டம் பராமரிப்பு நல்ல உடற்பயிற்சியாகவும் இருக்கும். மன அழுத்தத்தில் இருந்தும் விடுபடலாம்.
Average Rating