பிரபலமாகிறது கோதுமைப்புல்!! (மருத்துவம்)

Read Time:9 Minute, 36 Second

‘‘கோதுமை சார்ந்த உணவுகளை நாம் சாப்பிட்டு வருகிறோம். அதேபோல கோதுமையை விளைவிக்கக்கூடிய வித்தாக இருக்கிற கோதுமைப்புல்லும் சமீபத்தில் பிரபலம் அடைந்து வருகிறது. அது பல்வேறு நோய்களுக்கு சிறந்த மருந்தாகவும் இருக்கிறது. கோதுமைப் புல்லினை ஜூஸாக பயன்படுத்தும்போது அதன் மருத்துவ பலன்கள் நம்மை ஆச்சரியப்படுத்தும் அளவில் இருக்கிறது’’ என்கிறார் சித்த மருத்துவர் திருநாராயணன். கோதுமைப்புல் பற்றி தொடர்ந்து விளக்குகிறார்…

இயற்கையாக விளையும் செடி, கொடி மற்றும் தாவரங்களில் உடல் நலத்தைப் பேணுவதற்கேற்ற எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவ்வரிசையில், கோதுமைப் புல்லும் தன்னிடம் இயற்கை குணம் உடைய எண்ணற்ற சத்துக்களைக் கொண்டுள்ளது. இதனால்தான் உலக நாடுகள் முழுவதிலும் தற்போது கோதுமைப்புல் உடல்நலத்துக்கு ஏற்றது என்ற விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது.

கோதுமைப் புல்லில் உள்ள சத்துக்கள்…

ஒரு டம்ளர் கோதுமைப்புல் சாற்றில் நீர்ச்சத்து – 65%, புரதம் – 20%, கொழுப்பு – 3%, மாவுச்சத்து – 12%, நார்ச்சத்து – 1%, கால்சியம் – 40 மி.கி, இரும்பு – 6 மி.கி., வைட்டமின் B1 – 1.4 யூனிட், B2 – 0.54 யூனிட், நியாசின் – 2.90 யூனிட் மற்றும் வைட்டமின் A, B, C, E & K ஆகியவை உள்ளன.

அறுகம்புல் ஜூஸ் போல…

பொதுவாக நாம் அறுகம்புல் ஜூஸ் பயன்படுத்தி வருகிறோம். அது நீரிழிவு, ரத்த அழுத்தம், உடல்பருமன் போன்றவற்றுக்கு மருந்தாக இருக்கிறது. அதேபோல கோதுமைப்புல்லும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. அதற்கும் காரணம் இருக்கிறது. உடலில் புற்றுநோய் செல்களை அழிக்கக்கூடிய திறன் கோதுமைப்புல்லுக்கு உண்டு, கோதுமைப் புல் சாறில் 70% பச்சையம் உள்ளது. இது ரத்தத்தை சுத்தம் செய்கிறது.

ரத்தத்தில் வெள்ளை, சிவப்பணுக்களை அதிகரிக்கச் செய்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை உண்டு பண்ணுகிறது. புற்றுநோய் வராமல் தடுக்கிறது. அதேபோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடல்ரீதியிலான தொந்தரவுகளையும் குறைப்பது மட்டுமல்லாமல் குணமடையவும் உதவுகிறது. உடலில் உள்ள நச்சுக்களை நீக்குகிறது. சிறுகுடல், பெருங்குடலை சுத்தம் செய்கிறது. ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. மலச்சிக்கலைப் போக்குகிறது. தோல் சம்பந்தபட்ட அனைத்து நோய்களையும் குணப்படுத்துகிறது.

தினமும் 30 மில்லி…

தினமும் 30 மிலி கோதுமைப்புல் சாறு அருந்துவது நல்லது. குழந்தைகள் முதல் பெரியவர் வரை மற்றும் நீரிழிவு நோயாளிகள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் என அனைவரும் அருந்தலாம். ரத்தசோகை உள்ளவர்கள், உடல் பலவீனமாக இருப்பவர்கள் இதுபோன்ற பிரச்சனை உள்ளவர்கள் குணமடையும் வரை அருந்தலாம்.

சாதாரணமாக வாரத்திற்கு ஒரு நாள் கோதுமைப்புல் ஜூஸ் அருந்துவது உடல் எடையைக் குறைப்பதற்கு உதவுகிறது. கோதுமைப்புல் தொடர்ந்து குடித்து வந்தால் நாள்பட்ட நோய்கள் குணமடையும். முக்கியமாக, உடல் பருமன் குறையும். நீரிழிவு நோயின் பாதிப்பு கட்டுக்குள் வரும்.
அறுகம்புல்லைச் சாறாக அரைத்து காலையில் வெறும் வயிற்றில் அருந்துவதைப்போல இச்சாறையும் பெரியவர்கள் காலை உணவுக்கு முன்னர் பருகலாம்.

கோதுமைப் புல் சாறு செரிப்பதற்கு அதிகபட்சம் 1 மணிநேரம் ஆகும், அதனால் கோதுமைப் புல் சாறு அருந்தியவுடன் ஒரு மணி நேரம் கழி்த்துதான் வேறு உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். ஜீரண சக்தி குறைவாக உள்ளவர்கள் குறைந்த அளவு கோதுமைப்புல் எடுத்துக் கொள்ளலாம்.

அதிக பச்சையம்…

இளகிய தன்மை கொண்ட கோதுமைப்புல்லில் குளோரோபிஃல்(Chlorophyll) என்ற பச்சையம் அதிகளவில் இருக்கும். இந்தப் பச்சையம் நாம் சாப்பிடுகிற உணவுவகைகள் எளிதாக செரிமானம் நடைபெற உதவிசெய்கிறது. மேலும், இந்த பச்சை நிறமி, நாம் சாப்பிடுகிற உணவுப்பொருட்களில் காணப்படுகிற நச்சுத்தன்மையை வெளியேற்ற உதவும் ஆன்டி-ஆக்சிடென்ட்டாகவும் செயல்படுகிறது.

இந்த நிறமி ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்கிறது. இதன்மூலம் ரத்தத்துக்கு அதிகளவில் ஆக்சிஜன் செல்ல வழி ஏற்படுத்துகிறது. சிவப்பு மற்றும் வெள்ளை அணுக்களை உற்பத்தி செய்யவும் இப்பச்சையம் துணைசெய்கிறது.

வைட்டமின் பி

முளைகட்டி வளர்க்கப்படும் தாவரம் எதுவாக இருந்தாலும் அதில் கண்டிப்பாக பலவிதமான வைட்டமின்கள் காணப்படும். குறிப்பாக, வைட்டமின் பி இருக்கும். அதுமட்டுமில்லாமல் இரும்புச்சத்து, கால்சியம், சிறிதளவு புரதம் ஆகியவையும் சேர்ந்து இருக்கும். அதன் அடிப்படையில், முளைகட்டி வளர்க்கப்படும் கோதுமைப் புல்லிலும் மேலே சொல்லப்பட்ட சத்துக்கள் போதுமான அளவு இருக்கிறது.

19 வகை அமினோ அமிலங்கள்

ரொட்டி கோதுமை என்ற வேறு பெயராலும் குறிப்பிடப்படுகிற இந்தப் புல்லில் 19 வகையான அமினோ அமிலங்களும், 92 வகையான தாதுக்களும் உள்ளன. இப்புல்லில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைச் சரி செய்ய உதவுகிறது. இது அளவுக்கு அதிகமான கொலஸ்ட்ராலைக் குறைப்பதால் உடல் எடையைச் சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது.

கோதுமைப் புல் விளைவிப்பது எப்படி?

கோதுமையை நிலத்தில் தூவி வளர்த்தால் 7 முதல் 14 நாட்களில் நாற்று மாதிரி வளரும். முக்கால் அடியில் இருந்து ஒரு அடி வரை உள்ள கோதுமைப்புல் மிகவும் இளகியதாகக் காணப்படும். முதலில் 6 சதுர அடி நிலம் அல்லது பிளாஸ்டிக் தொட்டியில் மணலை நிரப்பிக் கொள்ள வேண்டும். அதில் தண்ணீர் ஊற்றி ஈரப்படுத்தி அதை ஏழு கட்டங்களாக பிரிக்க வேண்டும்.

பின்பு கோதுமையை 12 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் தொட்டியில் முதல் கட்டத்தில் போட வேண்டும். அதுபோல் 7 கட்டத்திலும் 7 நாட்களுக்கு போட வேண்டும். ஏழாவது நாள் முதல் கட்டத்தில் விதைத்த கோதுமை முளைத்துவிடும். இதுபோல் வளர்ச்சி அடைந்த புல்லை எடுத்து, நன்றாக தண்ணீரில் சுத்தம் செய்துகொள்ள வேண்டும். பின்பு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் அரைத்து வடிகட்டி ஒரு நபருக்கு 30 மிலி வீதம் அருந்தலாம்.

இவற்றை நினைவில் கொள்ளுங்கள்

முற்றிய கோதுமைப் புல்லை உபயோகிப்பதால் பயன்கள் எதுவும் கிட்டாது. செரிமானம் நடைபெறுவதும் தடைபடும். செரிமானமும் ஆகாது. உடல் நலத்துக்கு ஏற்ற சத்துக்களைக் கொண்டு உள்ளது என்பதற்காக, இதை வரைமுறையின்றி சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. கோதுமைப்புல்லில் உள்ள பூஞ்சைகள் மற்றும் கிருமிகள் நம்மை பாதிக்கக்கூடியன. எனவே, மாடித்தோட்டம் போன்ற சுகாதாரமான இடங்களிலேயே வளர்க்க வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்களுக்கு ஒரு ரொமான்டிக் ஐடியா!! (அவ்வப்போது கிளாமர்)
Next post தினமும் ஜவ்வரிசி சாப்பிட்டால் கிடைக்கும் பலன்கள்!! (மருத்துவம்)