மூலிகை மந்திரம் : வாழை!! (மருத்துவம்)

Read Time:9 Minute, 44 Second

இறைவனுக்குச் செய்யும் வழிபாடு ஆகட்டும் நம் வாழ்வின் சுபநிகழ்வாகட்டும் அல்லது இறுதிச்சடங்காகட்டும்… வாழைக்கு அங்கு முக்கிய இடம் உண்டு. வாழ்த்தும்போது கூட ‘வாழையடி வாழையாக’ என கூறுவது வழக்கம். தன் சந்ததியை அபிவிருத்தி செய்துகொள்வதில் வாழையைப் போல் நீங்களும் இருந்து பல்லாண்டு வாழ வேண்டும் என்பதே அந்த வாழ்த்துதலின்உட்பொருள் ஆகும். நம் வாழ்வில் இதுபோல் தவிர்க்க முடியாத இடம் பெற்றிருக்கும் வாழையின் மருத்துவப் பயன்கள் பற்றி இனி பார்ப்போம்.

வாழையின் தாவரப் பெயர் Musapara disiaca என்பதாகும். வடமொழியில் கதலி, ரம்பா, சக்ருத்பலா போன்ற பெயர்களால் குறிப்பதுண்டு. வாழையில் பேயன் வாழை, காட்டு வாழை, கல்வாழை, நவரை வாழை, மகர வாழை, ஈனா வாழை, மர வாழை, துரை வாழை, கருவாழை, செவ்வாழை, வெள் வாழை, ரசத்தாளி வாழை, மொந்தன் வாழை, அடுக்கு வாழை, மலை வாழை, பச்சை வாழை என பல வகைகள் உள்ளன.

100 கிராம் எடையுள்ள ஒரு வாழைப்பழத்தில் எரிசத்து (Calories) 116, புரதச்சத்து 1.2 கிராம், கொழுப்புச்சத்து 0.3 கிராம், நார்ச்சத்து 2.6 கிராம், மாவுச்சத்து 27.2 கிராம், தாது உப்புகளான சுண்ணாம்பு சத்து 17 மில்லிகிராம், பாஸ்பரஸ் 36 மில்லிகிராம், இரும்புச்சத்து 0.36 மில்லிகிராம், மெக்னீசியம் 41 மில்லி கிராம், உப்புச்சத்து 36.6 மில்லிகிராம், பொட்டாசியம் 88 மில்லிகிராம், துத்தநாகம் 0.15 மில்லிகிராம் ஆகிய சத்துகள் அடங்கியுள்ளன. இவை தவிர வைட்டமின் சி, பி 6, கரோட்டின் சத்துகளும் அடங்கியுள்ளன.

‘நற்கதலிக் கந்தமலை நல்குந்தன் டோகுடலிற்
சிக்குமயிர் தோல்நஞ்சுந் தீர்த்திடுங்காண் – தொக்குறு பூ
மேகமொழிக் கும்பிஞ்சால் வெங்கடுப்பே கும்காயால்
தேகமுழுக் கக்காலாந் தேர்’- என்கிறது வாழையைப் பற்றிய அகத்தியர் குணபாடம்.

‘வாழையின் கிழங்கு உடலுக்கு சூட்டைத் தரக்கூடியது. வாழைத்தண்டு குடலில் தங்கியிருக்கும் தலைமயிர், சிக்குண்ட தோல், நஞ்சு ஆகியனவற்றை வெளியேற்றவல்லது. வாழையின் பூ உணவாகிறபோது ஆண், பெண் இருபாலருக்கும் ஏற்படும் வெள்ளைப்படுதல் குணமாகும். வாழைப் பிஞ்சு வயிற்றுக்கடுப்பு, மூலக்கடுப்பு ஆகியவற்றை குணமாக்கும். முற்றிய காய் வாயுவை அதிகப்படுத்தும் என்பதால் அடிக்கடி உண்ணக் கூடாது’ என்கிறார் அகத்தியர்.

வாழையின் மருத்துவத் தன்மைகள்

வாழைப்பழங்கள் மென்மையான மலமிளக்கியாக செயல்படுகின்றன. அதே நேரத்தில் வயிற்றுக்கழிச்சலையும் (Diarrhea), சீதபேதியையும் (Dysentery) தடுத்து நிறுத்துகிறது. குடல் புண்களை விரைவில் ஆற்றும் தன்மையும் வாழைப்பழங்களுக்கு உண்டு. முற்றிய வாழைக்காய் சர்க்கரை நோய்க்கும், வாழைப்பழப்பொடி வயிற்றுக் கோளாறுகளுக்கும் துணை மருந்தாகப் பயன்படுகிறது. வாழையின் வேர் வயிற்றுக் கிருமிகளை ஒழிக்கும் தன்மை கொண்டது.

வாழைச்சாறு குருதிப்போக்கைக் கட்டுப்படுத்தக் கூடியது. வாழைத்தண்டு பித்தத்தை அடக்கவல்லது. சிறுநீரைப் பெருக்கக் கூடியது. வாழைக்கட்டையை இடித்துப் பெறப்பட்ட நீர் எலும்புறுக்கி நோயைப் போக்கும். வாழைப் பிஞ்சு ரத்தக் கடுப்பு, ரத்த மூலம், அதிமூத்திரம், வயிற்றுப்புண் ஆகியவற்றை குணமாக்கும். வாழை சுவையான உணவாக இருப்பதோடு மட்டுமின்றி உடல் தேற்றியாகவும் விளங்குகிறது. தலைமுடி வளரவும் வாழை நல்ல உணவு. வாழைப்பூ வாத பித்தங்களைத் தணிக்கக் கூடியது. வாழைச்சாறு சிறுநீரகக்கற்களை உடைக்கவல்லது.

மொந்தன் வாழை விந்துவை வளர்க்கக் கூடியது, பித்தத்தைத் தணிக்கக்கூடியது. சிறுநீர் கழிப்பதில் வலி, எரிச்சல், அடிக்கடி சிறுநீர் போக வேண்டும் என்ற எண்ணம், மாதவிலக்குக் கோளாறுகள் ஆகியவற்றை வாழைக்கிழங்கு குணமாக்கும் என ஆயுர்வேத நூல்கள் தெரிவிக்கின்றன. வாழைப்பூவால் ஆஸ்துமா, ரத்தக்கசிவுப் பிரச்னைகள்,வெள்ளைப்போக்கு குணமாகும் எனவும் பல நூல்கள் கூறுகின்றன. வாழை மருத்துவ குணம் கொண்டதுதான் என்றாலும் சிலருக்கு எளிதில் ஜீரணமாகாது. வயிற்றுவலியும் ஏற்படலாம். அதனால் அளவு தாண்டி உண்ணக்கூடாது.

வாழையை மருந்தாகப் பயன்படுத்துவது எப்படி?

வாழைத்தண்டின் சாற்றை லேசாக சூடாக்கி, ஓரிரு சொட்டு காதில் விடுவதால் காதுவலி தணியும். வாழைப்பழத்தோடு நெய் சேர்த்துப் பிசைந்து சாப்பிடுவதால் மாதவிலக்கின்போது அதிக ரத்த இழப்பு ஏற்படுவது தடுக்கப்படும். வாழைப்பழத்தைப் பசுவின் கோமியத்தில் கொதிக்க வைத்து உட்கொள்வதால் இருமல், இழுப்பு ஆகிய நோய்கள் குணமாகும். வாழைப்பழத்தை நெருப்பில் இட்டுச் சுட்டும் உண்டாலும் இதே பலன் கிடைக்கும்.

வாழை இலையில் உணவை உட்கொள்வதால் தோல் பளபளப்பும் மென்மையும் பெறும். மேலும் மந்தம், பலமின்மை, இரைப்பு ஆகியவையும் அணுகாவண்ணம் காக்கப்படும். உடல் சூட்டைப் போக்கி குளிர்ச்சியைத் தரும் குணமும் வாழை இலை உணவுக்கு உண்டு.

வாழைத்தளிர் இலையை உலர்த்தித்தீயிலிட்டு சாம்பலாக்கி நெருப்பு அல்லது சுடுநீர்ப்பட்ட காயங்களுக்கு வைத்துக் கட்டினால் காயம் விரைவில் ஆறும். வாழை இலையின் மேல் விளக்கெண்ணெய் தடவி புண் மேல் கட்டி வைத்தாலும் விரைவில் ஆறும்.

வாழைப் பூவை இடித்து விளக்கெண்ணெய் விட்டு வதக்கி கை கால் எரிச்சலுக்கு ஒத்தடம் இட்டுப் பின் இதையே மேலே வைத்துக் கட்டுவதால் எரிச்சல் தணியும்.

வாழைப் பூவை இடித்து சாறு எடுத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து உண்ண குருதிப்போக்கு, வெள்ளைப்போக்கு,
வயிற்றுக்கடுப்பு ஆகியன போகும்.

வாழையின் வேர்ப்பகுதியில் உள்ள கிழங்கின் நீரை காலை, மாலை என இருவேளையும் 100 மி.லி. சாப்பிட்டு வருவதால் சிறுநீர் எரிச்சல், சிறுநீருடன் ரத்தம் வெளியாதல், வயிற்றுப்புண், கழிச்சல் ஆகியன வராமல் தடுக்கப் பெறும். தொண்டையில் நின்று துன்பம் தரும் கோழை, அயர்வு, சோகை, என்புருக்கி நோய் ஆகியன குணமாகும்.

வாழைக் கிழங்கை இடித்து அதிலுள்ள நீரைப் பிழிந்து எடுத்துவிட்டுத் திப்பியை அடிபட்ட வீக்கங்களுக்கு வைத்துக்
கட்டுவதால் சீக்கிரத்தில் வீக்கமும் கரையும்; வலியும் குறையும்.

தினமும் ஒரு வாழைப்பழம் உண்பவர்களுக்கு சிறுநீரகப் புற்று வராமல் தடுக்கப்படுவதாக ஆய்வுகள் தெரியப்படுத்தி உள்ளன. வாழைப்பழத்தில் இருக்கும் ‘ஆன்டி ஆக்ஸிடன்ட் பெனோலிக்’ கூட்டுப் பொருட்களே இதற்குக் காரணம் எனவும் தெரிய வருகிறது. நாம் வாழ்வதற்காக தன்னுடைய இலை, பூ, தண்டு என தன் ஒவ்வொரு பகுதியையும் அர்ப்பணிக்கும் வாழை, நம் வாழ்வில் தவிர்க்க முடியாத இடம் பெற்றதில் ஆச்சரியம் இல்லைதான்!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அழகுக்கும் ஆரோக்கியத்துக்கும் காராமணி!! (மருத்துவம்)
Next post உடலுக்கு புத்துணர்வை தரும் பேரிக்காய்!! (மருத்துவம்)