விடுதலைப் புலிகள் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்போம்: அதிபர் ராஜபட்சய ஆவேசம்
யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகள் ஞாயிற்றுக்கிழமை நடத்திய பீரங்கித் தாக்குதலில் இலங்கை ராணுவத்தினர் 4 பேர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு தக்க பதிலடி கொடுப்போம் என இலங்கை அதிபர் மகிந்தா ராஜபட்சய திங்கள்கிழமை கூறினார். நார்வே தூதுக் குழுவினர் மத்தியஸ்தம் செய்து நடத்திய அமைதிப் பேச்சுவார்த்தையை தொடருவது குறித்து இலங்கைக்கு நிதி உதவி செய்துவரும் முக்கிய நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் அதிபர் ராஜபட்சயவை தலைநகர் கொழும்புவில் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினர்.
அந்த சந்திப்பின்போது ராஜபக்சய கூறியது:
இலங்கையின் இனப் பிரச்சினைக்கு சுமூகமான தீர்வையே அரசு விரும்புகிறது. இந்த நேரத்தில் விடுதலைப் புலிகள் ராணுவத்தின்மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். சர்வதேச சமூகம் விடுதலைப் புலிகளுக்கு இந்த விஷயத்தில் நெருக்கடி கொடுக்க வேண்டும். நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்கும் என்றார் ராஜபட்சய.
ஜெர்மனி, ஜப்பான், நார்வே மற்றும் அமெரிக்காவைத் சேர்ந்த பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
விடுதலைப்புலிகள் தாக்குதல்: யாழ்ப்பாணத்தில் உள்ள முகமலை ராணுவ கட்டுப்பாட்டுப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தியதாகவும், அதில் 4 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்குள் ராணுவ வீரர்கள் ஊடுருவ முயன்றபோது அவர்களைத் தாக்கியதாகவும் அதில் 5 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் விடுதலைப்புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக ராணுவம் படைகளைக் குவித்து வருகிறது என விடுதலைப் புலிகள் குற்றம் சாட்டிய சிறிது நேரத்திலேயே இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.
யாழ்ப்பாணம் பகுதியில் விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை ராணுவத்திற்கும் நடந்து வரும் சண்டையால் நூற்றுக்கணக்கான தமிழர்கள் அந்தப் பகுதியை விட்டு வேறு பாதுகாப்பான பகுதிகளுக்குச் சென்றுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.