ஏமாற்றும் இசிஜி… காப்பாற்றும் ட்ரட் மில்! (மருத்துவம்)

Read Time:11 Minute, 48 Second

டாக்டர்கள் எடுக்கச் சொல்லும் எல்லா டெஸ்ட்களும் அவர்கள் சம்பாதிக்கத்தானா? பலரின் சந்தேகங்களுக்கு இதில் பதில் இருக்கிறது!

மருத்துவ அறிவு என்பது முன்பு மருத்துவர்களுக்கு மட்டுமே சொந்தமாக இருந்தது. என்னென்ன பரிசோதனைகள் தேவை, என்ன சிகிச்சை என எல்லாவற்றையும் மருத்துவர்களே முடிவு செய்தார்கள். நோயாளிகளுக்கு இதில் பங்கு இல்லை. கிட்டத்தட்ட கடவுளிடம் சரணாகதி அடைந்த பக்தனின் நிலை இது. ‘கடவுள் நமக்கு நல்லதுதான் செய்வார்’ என்ற நம்பிக்கையில் இயங்கும் நிலை இது. மக்களின் இந்த நம்பிக்கையைப் பயன்படுத்தி தவறிழைக்கும் மருத்துவர்களும் உண்டு.ஆனால், தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் நோய் என்ன? அதற்கு செய்ய முடிகிற பல்வேறு சிகிச்சை முறைகள் என்ன? அவற்றின் சாதக பாதகங்கள் என்ன? என எல்லாம் அறிந்தால், ஆராய்ந்து முடிவெடுக்கும் பொறுப்பு நோயாளிகளுக்குக் கிடைக்கிறது.

இது மருத்துவர்களைக் கடவுளாகக் கருதும் நிலையிலிருந்து நல்ல ஆலோசகராக மட்டும் காணும் மாற்றத்துக்கு வழிவகுக்கிறது. இதனால், மருத்துவர் நோயாளி உறவில் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும். மருத்துவர்களின் மீது நம்பிக்கை பிறக்கும்; சந்தேகம் குறையும். என்னிடம் வழக்கமாக சிகிச்சைக்கு வரும் சர்க்கரை நோயாளி ஒருவருக்கு திடீரென்று நெஞ்சில் வலி ஏற்பட்டது. எனக்கு போன் செய்தார். ‘‘உங்களுக்கு மாரடைப்பு இல்லை என்பதை முதலில் உறுதி செய்ய வேண்டும். அதற்கு இசிஜி எடுத்துப் பார்த்துக் கொள்ளுங்கள்’’ என்று சொல்லி, ஒரு டாக்டரிடம் அனுப்பினேன். அந்த டாக்டர் இசிஜி, ட்ரட் மில், ரத்தச் சர்க்கரை எனப் பல பரிசோதனைகளைச் செய்துவிட்டு, ‘‘பயப்படும்படியாக ஒன்றுமில்லை’’என்று சொல்லி அனுப்பி விட்டார்.

நமக்கு வந்த பிரச்னை ஹார்ட் அட்டாக் இல்லை. இதயம் நன்றாக இருக்கிறது’ என நினைத்து சந்தோஷப்படவில்லை அந்த நோயாளி. எனக்கு போன் செய்து, “நீங்கள் இசிஜி மட்டும்தானே எடுக்கச் சொன்னீர்கள். அந்த டாக்டர் ட்ரட் மில் என்று ஒரு பரிசோதனையை வேறு செய்யச் சொல்லிவிட்டார். அடுத்து இரண்டு முறை இசிஜி எடுத்தார்’’என்று வருத்தப்பட்டார். ‘‘உண்மையிலேயே இந்தப் பரிசோதனைகள் எல்லாம் தேவையா? நெஞ்சு வலிக்கு ஒரு முறை இசிஜி எடுத்தால் போதாதா?’’என சந்தேகத்தை வேறு கிளப்பினார். மருத்துவம் இப்போது வணிகமயமாகிவிட்டது என்ற நினைப்பு மக்களிடம் வேர் விடுவதால் விளைகின்ற சந்தேகப் பார்வை இது. இந்த மாதிரியான அனுபவங்கள் உங்களுக்கும் ஏற்பட்டிருக்கலாம்.

‘நெஞ்சுவலிக்குக் காரணம் மாரடைப்பா, இல்லையா?’ எனக் கண்டுபிடிக்கும் பொதுவான பரிசோதனை இசிஜி (Electro Cardio Gram ECG). இதயம் துடிக்கும்போது இதயத்தில் ஏற்படும் மிக நுண்ணிய மின் மாற்றங்களைப் பல ஆயிரம் மடங்கு பெரிதுபடுத்தி, அவற்றை ஒரு வரைகோட்டுப் படமாக (Graph) அதற்கென உள்ள தாளில் பதிவு செய்து தரும் பரிசோதனை. இசிஜி கருவி ஒவ்வொன்றிலும் ‘லீடுகள்’ (Leads) என்று சொல்லக்கூடிய மின் குமிழ்கள் இருக்கும். இவற்றை நோயாளியின் கைகள், கால்கள் மற்றும் நெஞ்சுப் பகுதிகளில் பொருத்தி, இசிஜி கருவியுடன் இணைத்து, இதயத்தின் மின் மாற்றங்களைப் பதிவு செய்வார்கள். இவ்வாறு எடுக்கப்படும் வரைகோட்டுப் படத்தில் Lead I, II, III, AVR, AVL, AVF, V1, V2, V3, V4, V5, V6 என மொத்தம் 12 தொகுதிகள் இருக்கும்.

ஒவ்வொரு தொகுதியும் இதயத்தில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் ஏற்படுகிற மின்கடத்தலின் தன்மையைத் தெரியப்படுத்தும். இதை வைத்து இதயத்தில் உள்ள பிரச்னையை மட்டுமன்றி, அது எந்தப் பகுதியில் ஏற்பட்டுள்ளது என்பதையும் தெரிந்துகொள்ள முடியும். இதயத்தின் பின் பகுதியில் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது எனக் கருதினால், V7, V8, V9, V10, V11, V12 என்று மேலும் ஆறு தொகுதிகளில் இசிஜி எடுக்கப்படும். ஆரோக்கியமான ஒருவரின் இசிஜியில் ஒரு முறையான அலைகள் காணப்படும். இதய நோயுள்ளவரின் இசிஜியில் அவரது நோய்க்கு ஏற்ப அந்த அலைகளில் மாற்றங்கள் தெரியும். அந்த மாற்றங்களைக் கவனித்து நோயைக் கணிக்கிறோம் மருத்துவர்கள் நாங்கள். என்றாலும் இசிஜி சில சமயங்களில் ஏமாற்றிவிடும். உதாரணமாக, ஆரம்பநிலையில் இருக்கும் மாரடைப்பை இது உடனே தெரிவிக்காது.

சில மணி நேரங்களை எடுத்துக்கொள்ளும். இதனால்தான் நெஞ்சுவலி வந்தவருக்கு முதல்முறையாக எடுக்கப்படும் இசிஜி நார்மலாக இருந்து, நெஞ்சுவலி தொடருமானால், ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் இசிஜி எடுக்கச் சொல்வார்கள். இரண்டாவது இசிஜியும் நார்மலாக இருந்தால் மட்டுமே, மாரடைப்புப் பிரச்னை இல்லை என்று கூற முடியும். இந்தக் காரணத்தால்தான் நான் அனுப்பிய நோயாளிக்கு இரண்டு முறை இசிஜி எடுக்கப்பட்டது. சமயங்களில் நெஞ்சில் வலி இருப்பவர்களுக்கு, மாரடைப்பு இருப்பது போல் ஒரு சந்தேகத்தை இசிஜி ரிப்போர்ட் ஏற்படுத்திவிடும். அந்தச் சந்தேகத்தைப் போக்க அவர்களுக்கு ட்ரட் மில் பரிசோதனை செய்ய வேண்டும். சிலருக்கு நெஞ்சுவலி இருக்காது. ஆனால், இசிஜியில் மாரடைப்பு உள்ளதாக சந்தேகத்தைக் கிளப்பும். அப்போதும் ட்ரட் மில் பரிசோதனை தேவைப்படும்.

பொதுவாக சர்க்கரை நோயாளிகளுக்கு நரம்புகள் பாதிக்கப்படும். இதய நரம்புகளும் இதற்கு விதிவிலக்கல்ல. இதனால் இவர்களுக்கு மாரடைப்பு வந்திருந்தாலும், நெஞ்சில் வலியை உணரமுடியாது; அப்போது இசிஜியில் தெளிவான முடிவு இல்லையென்றால், ட்ரட் மில் பரிசோதனை செய்ய வேண்டும். ட்ரட் மில் (Tread Mill Test) என்பது சாதாரண இசிஜி கருவியின் அடிப்படையில் செய்யப்படும் பரிசோதனைதான். என்றாலும் சிறிய வித்தியாசம் உண்டு. நோயாளியை உடற்பயிற்சி செய்ய வைத்து, அதன் மூலமாக இதயத்துக்கு பளுவை அதிகப்படுத்தி, அப்போது இசிஜியை எடுத்துப் பார்க்கும் பரிசோதனை இது. கணினியும் இசிஜி கருவியும் இணைந்த ஓர் இயந்திரம் இருக்கிறது. மின்சாரத்தில் ஓடும் தளம் ஒன்று இதில் இருக்கிறது.

நோயாளியை இதில் நிற்க வைத்து, பொத்தானை அழுத்தினால், தளம் எதிர்த்திசையில் ஓடும். அவர் நிற்கும் இடத்திலேயே நின்றுகொண்டும் கைப்பிடியைப் பிடித்துக்கொண்டும் மாற்றி மாற்றி பாத அடிகளைப் பதிக்கலாம். போகப் போக அந்தத் தளம் இயங்கும் வேகத்தையும் சாய்வு கோணத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக கூட்டுகிறார்கள். இதனால் நடையின் வேகமும் அதிகரிக்கிறது; இதயத்துடிப்பின் வேகமும் அதிகரிக்கிறது. அப்போது இதயத்தில் ஏற்படும் மாற்றங்களையும் இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம் போன்றவற்றையும் ஒரு வரைபடமாக வரைந்து கொடுக்கிறது இதில் உள்ள இசிஜி கருவி. இதயக்கோளாறு உள்ளவர்களால் சில மணித்துளிகளுக்கு மேல் இதில் நடக்க முடியாது. அப்போது பரிசோதனையை நிறுத்திவிடுவார்கள்.

ட்ரட் மில் இசிஜி காண்பிக்கிற மின்னலை மாற்றங்கள், இதயத்தில் மறைந்துள்ள சிறு பிரச்னையைக்கூட துல்லியமாகத் தெரிவித்துவிடும். அப்படி ஒரு அதிநுட்ப இசிஜி இது! மறைந்திருக்கும் மாரடைப்பையும், அவ்வப்போது வந்து செல்கிற இதயவலியையும் இனம் காட்ட உதவும் முக்கியமான பரிசோதனை இது. செலவு சிறிது அதிகம். என்றாலும், மருத்துவர்களை இசிஜி ஏமாற்றும்போது இதுதான் சரியான சாய்ஸ்!

எல்லாம் சொல்லும் இசிஜி!

மாரடைப்பைத் தெரிந்துகொள்ள மட்டுமே இசிஜி என்று பலரும் நினைக்கிறார்கள். அப்படியல்ல!

* இதயத்துடிப்பின் எண்ணிக்கையை இதைக் கொண்டு அறியலாம். ‘இதயம் சீரான லயத்துடன் துடிக்கிறதா, அல்லது முறையில்லாமல் துடிக்கிறதா’ என்பதையும் தெரிந்துகொள்ள முடியும். இவற்றின் பலனால், இதயத்துடிப்புக் கோளாறுகளை (Arrhythmias) ஏற்படுத்துகிற இதய நோய்களைக் கண்டறிய முடியும்.
* மாரடைப்புக்கு முன்பாக ஏற்படுகிற இதயவலியின் பாதிப்பை (Angina) எளிதில் தெரிந்து கொள்ளலாம். இதன்மூலம், மாரடைப்பையே தடுக்க முடியும்.
* இதயத்தசைகள் மற்றும் இதய அறைகளின் வீக்கம், தடிமன் ஆகியவற்றையும் அறிந்துகொள்ள முடியும்.
* ரத்தத்தில் உள்ள சில தாதுக்களின் நிலைமை (உதாரணத்துக்கு, பொட்டாசியம் தாது), சில மருந்துகளின் நச்சுத்தன்மை (உதாரணத்துக்கு, டிஜிட்டாலிஸ் மருந்து) போன்றவற்றையும் இது காட்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாரடைப்பு, பக்கவாதம் வராமல் தடுக்கும் பழங்கள்!!! (மருத்துவம்)
Next post என் பள்ளி வேறு உன் பள்ளி வேறு என்ற சிவாஜி-பொறாமையே இல்லாத ஜெய்!! (வீடியோ)