தும்மினால் நிற்குமா இதயம்? (மருத்துவம்)
சிலர் தும்மும்போது அந்த இடமே அதிரும். அப்படித் தும்முவதைப் பார்த்தால் அவர்களது இதயமே நின்று போகிற மாதிரி இருக்கும். பலமான தும்மல் இதயத் துடிப்பை நிறுத்துகிறது என்ற கருத்தும் பரவலாக நிலவுகிறது. இது உண்மையா?… விளக்குகிறார் இதய சிகிச்சை நிபுணர் ஆர். சிவக்குமார்.
‘தூசி, கண்ணுக்குத் தெரியாத துகள்கள் போன்றவை மூக்கின் உள்ளே செல்லும்போது, மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் தும்மல் வெளிப்படும். அந்த நேரங்களில் இதயத்துடிப்பு நிற்கும். தும்மல் முழுவதுமாக அடங்கிய பிறகு மீண்டும் இதயம் செயல்பட ஆரம்பிக்கும்’ என்பதற்கு மருத்துவரீதியாக எந்தவிதமான ஆதாரங்களும் கிடையாது. ஆனால், மூக்கில் தூசி, கண்ணுக்குத் தெரியாத துகள்கள், புகை மற்றும் இயல்புக்கு மாறான வாசனை (Foreign Bodies) நுழைகிறபோதும், மூக்கில் எரிச்சல் ஏற்படும்போதும், மூளையில் உள்ள மெடுல்லா என்ற பகுதியின் தூண்டுதலால் தும்மல் வெளிப்படும்.
அதன் காரணமாக, மூக்கில் நுழைந்த தூசி முதலானவை வெளியேற்றப்படும். அந்த நேரங்களில், இதய சுவர்களில் (Chest Wall) அழுத்தம் அதிகமாகும். நுரையீரலில் இறுக்கம் ஏற்படும். நாடித்துடிப்பு, ரத்த அழுத்தம் சீராக இல்லாமல் மிகவும் சிறிய அளவில் மாறுபட்டு இருக்கும். ஆனால், எந்த காரணத்துக்காகவும் இதயத் துடிப்பு நிற்காது. ஏனென்றால், இதயத்துக்கு என்று தனியாக ஒரு நாடித்துடிப்பு செயல்பட்டுக் கொண்டிருக்கும்.
தும்மல் வெளிப்படுவதற்கும், இதயம் செயல் இழப்பதற்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது. ஒரு சிலருக்கு தும்மல் காரணமாக மயக்கம் ஏற்படலாம். ஆனால் அதற்கான வாய்ப்புகள் மிகமிகக் குறைவு. வேறு சிலருக்கு இருமல் காரணமாகவும் மயக்கம் (Cough Syncope) வரும். குறிப்பாக, பிறவியிலேயே இதயத்தில் குறைபாடு உள்ளவர்கள், முதியவர்கள் ஆகியோருக்கு தும்மல் மற்றும் இருமல் காரணமாக மயக்கம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
சுவாசித்தல் மற்றும் காற்று காரணமாக நமது உடலின் உள்ளே வேண்டாத தூசி, துகள்கள் செல்வதைத் தும்மல் தடுப்பதால், அது பாதுகாப்புக்குரிய செயலாகவே கருதப்படுகிறது. அதே நேரத்தில், தும்மல் காரணமாக உண்டாகும் மயக்கம் வராமல் தடுப்பதற்கு முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக கை, கர்ச்சீப் ஆகியவற்றால் வாய், மூக்கு போன்றவற்றை நன்றாக மூடியவாறு தும்ம வேண்டும். தும்மும்போது அருகில் உள்ள மற்றவர்களுக்கு கிருமிகள் பரவாமல் பார்த்துக் கொள்வதும் அவசியமாகும். தும்மல் மற்றும் இருமல் காரணமாக ஒருவருக்கு மயக்கம் ஏற்பட்டால், உடனடியாக பொதுநல மருத்துவரை அணுகி தேவையான சிகிச்சை அளிக்க வேண்டும்.’’
Average Rating