வடக்கு கிழக்கு மாகாணங்களின் இணைப்பு சட்டவிரோதமானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!
வடக்கு-கிழக்கு மாகாண இணைப்பானது சட்டவிரோதமானதொன்றென உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. வடக்கு-கிழக்கு மாகாணங்களை தனித்தனியாக பிரிக்குமாறு கோரி ஜே.வி.பியினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு மீதான விசாரணையின் பின்னரே இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில்; 13வது திருத்தச்சட்டத்தின் மூலம் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் 1987ம் ஆண்டு ஒன்றாக இணைக்கப்பட்டன.
ஆனால் இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தன இம்மாகாணங்களை இணைத்தமையினால் கிழக்கு மாகாணத்திலுள்ள சிங்கள மற்றும் முஸ்லிம் சமூகங்களினது அரசியல் அபிலாசைகளை நிறைவேற்ற முடியாதுள்ளதாகவும் இச்சமூகங்களின் விகிதாசாரம் குறைவடைந்துள்ளதாகவும் தமது மனுவில் குறிப்பிட்ட ஜே.வி.பி. கட்சியானது அதனால் இம்மாகாணங்களை 1987க்கு முன்னதான நிலையிலிருந்தவாறு வேறுவேறாகப் பிரிக்குமாறு கட்டளையிடக் கோரி இவ்வழக்கினைத் தொடர்ந்திருந்தது.
உச்ச நீதிமன்ற நீதியரசர் சரத் என்.சில்வா தலைமையிலான ஜவர் கொண்ட நீதியரசர் குழு இவ்வழக்கு மீதான தீர்ப்பினை இன்று வழங்கியது.
ஏதிர்வரும் காலங்களில் தேர்கள் நடத்தப்படும் போது இனி தனித்தனியாகவே இரண்டு மாகாணங்களுக்குமான தேர்தல்கள் நடத்தப்பட வேண்டுமெனவும் இத்தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே வடக்கு- மாகாணங்கள் இணைக்கப்பட்ட போது பல்வேறு முஸ்லிம் கட்சிகளும் அதனை எதிர்த்து விமர்சித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த தீர்ப்பின் அடிப்படையில் இனி இரண்டு மாகாணங்களும் வேறுவேறாக பிரிக்கப்படுமெனவும் தனித்தனியான சபைகளைக் கொண்டு இயங்குமெனவும் அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
இத்தீர்ப்பு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அம்பாரை மாவட்டத்தின் முஸ்லிம், சிங்கள பகுதிகளில் மக்கள் பட்டாசு கொழுத்தி தமது சந்தோசத்தினைத் தெரிவித்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.