மன நலம்!! (மகளிர் பக்கம்)
நான் ஒரு இல்லத்தரசி. திருமணத்துக்கு முன் தைரியமானவளாகவே இருந்திருக்கிறேன். திருமணமானதும் என் மனநிலை மாறி விட்டது. எதற்கெடுத்தாலும் பயம். எப்போதும் நெகட்டிவ் சிந்தனைகள். குழந்தையைப் பள்ளிக்கு அனுப்பி விட்டு, வீடு திரும்பும் வரை என்ன நடக்குமோ, ஏதாகுமோ என பயம். கணவர் வேலை முடிந்து வீடு திரும்பும் வரை அவருக்கு பத்து முறை போன் செய்து பத்திரமாக இருக்கிறாரா எனக் கேட்கிறேன்.
என்னுடைய வயதான அம்மா, அப்பாவை நினைத்து இன்னொரு பக்கம் பயம். இரவு நேரத்தில் இந்தக் கவலைகள் மிகவும் அதிகமாவதால், தூக்க மாத்திரை துணையின்றி தூங்க முடிவதில்லை. இது ஏதேனும் மனநோயின் அறிகுறியா?
மனநல மருத்துவர் லட்சுமிபாய்
உங்களைப் போலவே ஏராளமான பெண்களுக்கு இந்தப் பிரச்னை இருக்கிறது. உங்களுடைய இந்தப் பிரச்னைக்கு ‘ஆங்ஸைட்டி டிஸ்ஆர்டர்’ என்று பெயர். அதீத கவலைகளின் வெளிப்பாடு இது. கல்யாணத்துக்கு முன்பு வரை உங்களுக்குப் பொறுப்புகள், கடமைகள் குறைவு. திருமணத்துக்குப் பிறகு திருமணம் என்கிற அந்த அமைப்பை நீங்கள் மிகவும் அழுத்தமாக நம்புகிறீர்கள். நீங்கள் சந்தித்த ஏதோ ஒரு சம்பவம் அல்லது யாரோ ஒருவரின் கஷ்டம் உங்களையும் அறியாமல் உங்களுக்குள் ஆழமாகப் பதிந்திருக்கிறது.
நீங்கள் பார்த்த ஏதோ ஒரு சோகமான திரைப்படம், டி.வி. சீரியல் என ஏதோ ஒன்றில் உங்களைப் பாதித்த அதே சம்பவம் உங்களுக்கும் நடந்து விடுமோ என ஆழ்மனதில் உண்டான பயம்தான் இப்படியெல்லாம் உங்களை யோசிக்க வைக்கிறது. உங்களை வருத்துகிற, பாதிக்கிற, பயமுறுத்துகிற அத்தனை விஷயங்களையும் தினமும் எழுதி வையுங்கள். ஒரு கட்டத்தில் நீங்கள் பயந்த மாதிரி அவற்றில் எதுவுமே நடக்கவில்லை என்று
உணர்வீர்கள்.
எப்போதும் பாசிட்டிவ் சிந்தனை உள்ள மனிதர்கள் பக்கத்திலேயே இருக்கப் பாருங்கள். நெகட்டிவ் சிந்தனை உள்ளவர்களுடன் நேரம் செலவிடுகிற போது, அவர்களது நெகட்டிவ் எண்ணங்கள் உங்களையும் தொற்றிக் கொண்டு, உங்கள் மூளையில் ஓர் ஓரத்தில் போய் உட்கார்ந்து கொண்டு, அடிக்கடி எட்டிப் பார்த்து, உங்களைத் தொந்தரவு செய்யும்.மனநல ஆலோசகரையும் நீங்கள் அவசியம் சந்தித்தாக வேண்டும். அவர் கொடுக்கிற உளவியல் ரீதியான கவுன்சலிங்கும் சப்போர்ட்டிவ் தெரபியும் கவலைகள் இல்லாமல் வாழ உங்களுக்குக் கற்றுத் தரும்.
Average Rating