வெயிலோடு விளையாடி…!! (மருத்துவம்)
‘கொஞ்சம் கண்களை மூடி உங்கள் பால்ய காலத்துக்குத் திரும்புங்கள்… விளையாட்டு என்பது எப்படியெல்லாம் இருந்தது? டயர் வண்டி உருட்டி, கண்ணாமூச்சி ஆடி, வெயிலில் அலைந்து, மழையில் திரிந்து, புழுதியில் புரண்டு வளர்ந்தவர்கள்தானே நாம் எல்லோரும். இப்போது கொஞ்சமேனும் நாம் ஆரோக்கியமாக இருப்பதற்கு அந்த இயற்கை யோடு ஒட்டி உறவாடிய வாழ்க்கைதான் காரணம் என்று சொன்னால் நம்புவீர்களா?’ என்று கேள்வி எழுப்புகிறார் குழந்தைகள் நல மருத்துவர் ஜெயகுமார்.
‘‘இன்றைய குழந்தைகளை இயற்கையிலிருந்து முற்றிலும் புறக்கணித்து வளர்க்கிறோம். வீடு, பள்ளி என கட்டடக் காடுகளுக்குள்ளேயே அவர்களின் சிறுவயது தொலைந்துகொண்டிருக்கிறது. கம்ப்யூட்டர், செல்போன் என எலெக்ட்ரானிக் திரைகளிலேயே அவர்களுடைய விளையாட்டும் முடிந்துவிடுகிறது. இதனாலேயே பேச்சுத்திறன் குறைபாடு, ஆட்டிசம், உடல் பருமன், நடத்தை மாற்றப் பிரச்னைகள், வைட்டமின் டி பற்றாக்குறை என உடல் மற்றும் மனம் சார்ந்த பல்வேறு பிரச்னைகளுக்கு ஆளாகி வருகிறார்கள்.
வெளியிடங்களில் விளையாடும்போது தேவையான பிராண வாயு கிடைக்கிறது. வெயிலில் சூரிய ஒளி படும்படி வெளிப்புறங்களில் விளையாடுவதால் வைட்டமின் டி கிடைக்கிறது. அதேபோல, வெளிப்புறங்களில் விளையாடுவதால் Endorphin என்ற வேதிப்பொருள் உடலில் வெளிப்படுகிறது. இந்த எண்டார்பின் வலி உணர்வுகளைக் கட்டுப்படுத்துவதோடு, மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதற்கும் உதவி செய்கிறது.இத்துடன் வெளியிடங்களில் மற்றவர்களுடன் கலந்து விளையாடும்போது குழு மனப்பான்மை, விட்டுக்கொடுத்தல் போன்ற பண்பு நலன்களையும் குழந்தைகள் கற்றுக் கொள்வார்கள். எனவே, குழந்தைகளை வெளியிடங்களில் விளையாட அனுமதியுங்கள். ஊக்குவியுங்கள்’’ என்கிறார் ஜெயகுமார்.
Average Rating