தும்மல் ஏன் வருகிறது? (மருத்துவம்)
கொரோனா வந்தாலும் வந்தது. தும்முவது இப்போது மாபெரும் குற்றமாகிவிட்டது. நான்கு பேர் இருக்குமிடத்தில் ஒருவர் தும்மினால் அது விவாதமாகவும் கூட மாறிவிடுகிறது.
சரி.. பொதுவாக தும்மல் ஏன் வருகிறது?
தும்மல் என்பது நம் உடலுக்குச் சேராத அந்நியப் பொருட்களை வெளியேற்றும் ஒரு செயல்தான். அதனால் சங்கடம் கொள்ள வேண்டியதில்லை. வர வேண்டிய நேரத்தில் தும்மல் வராமல் இருப்பது கூட ஒரு நோய்தான். பொதுவாக ரைனிடிஸ் (Rhinitis) என்னும் பிரச்னைதான் தும்மல் வருவதற்கான மூலகாரணமாக உள்ளது. மூக்கினுள் உள்ள மியூகஸ் சவ்வில் அழற்சி ஏற்படுவதால் இந்த ரைனிடிஸ் பிரச்னை ஏற்படுகிறது.
இதனால் மூக்கில் நீர் ஒழுகுதல், கண்களில் எரிச்சல், காதுகளில் வலி போன்றவை இருக்கும். இதில் தும்மலும் அடக்கம். இரண்டு வகை ரைனிடிஸ் உண்டு. ஒன்று அலர்ஜியால் ஏற்படுவது (Allergic rhinitis), மற்றொன்று அலர்ஜி அல்லாமல் ஏற்படுவது(Non allergic rhinitis).
மழை மற்றும் குளிர் என குறிப்பிட்ட காலநிலையில் மட்டும் சிலருக்கு தும்மல் வரும். இதற்கு சீசனல் ரைனிடிஸ் என்று பெயர். மரம், செடி, பூக்களில் உள்ள மகரந்தங்களின் வாசனை, வளர்ப்புப் பிராணிகளான நாய், பூனை இவற்றில் இருந்து வரும் நாற்றம், அவற்றின் முடிகள் ஏற்படுத்தும் அலர்ஜியால் தும்மல் வரலாம்.
அலுவலகத்தில் உள்ள மரத்தூசு, கரப்பான் பூச்சிகள், பழைய பேப்பர் வாசனை போன்றவையும் அலர்ஜியை ஏற்படுத்தி தும்மலை வரவழைப்பவை. டஸ்ட் மைட்ஸ் எனப்படும் பூச்சிகள், அழுக்கு சேர்ந்த தலையணை உறைகள், பெட்ஷீட், மெத்தைகள் போன்றவற்றில்
உருவாகும். இந்தப் பூச்சிகளும் அலர்ஜியை உருவாக்கி தும்மலை வரவழைக்கும்.
அதனால் ஒருவர் தும்மினாலே அச்சம் கொள்வதும் வேண்டாம். தும்மல் வந்தால் தயக்கம் கொள்ளவும் வேண்டாம். அதனால்தான் தரமான முகக்கவசம் அணிந்துகொண்டால் இரு தரப்பினருக்குமே எந்த அச்சமும் வேண்டியதில்லை என்று மருத்துவர்கள் தொடர்ந்து அறிவுறுத்துகிறார்கள். தொடர் தும்மலால் அவதிப்படுகிறவர்கள் மருத்துவ ஆலோசனையும் பெற்றுக் கொள்வது நலம்!
Average Rating