தமிழ்நாடு அரசின் நிபுணர் குழுவில் நோபல் வென்ற எஸ்தர் டஃப்லோ!! (மகளிர் பக்கம்)
தமிழ்நாடு அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் ஐவர் அடங்கிய பொருளாதார வல்லுநர் குழுவில் இடம் பெற்றுள்ள எஸ்தர் டஃப்லோ யார் என்பதே இங்கு பலரின் கேள்வி.
* பிரெஞ்சு அமெரிக்கரான எஸ்தர் டஃப்லோ வறுமை ஒழிப்பில் எக்ஸ்பர்ட்.
* முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு பொருளாதார ஆலோசனைகளை வழங்கியவர்.
* 2019ல் அபிஜித் பானர்ஜியுடன் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை பகிர்ந்து கொண்டவர்.
* மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கல்வி நிலையத்தில் பொருளாதார வளர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்புத் துறையின் பேராசிரியர்.
* அடித்தட்டு மக்களின் பொருளாதார நிலை குறித்தும், ஒரு அரசு எப்படி உதவ வேண்டுமென பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளை எழுதியவர்.
தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட அமெரிக்க ஆராய்ச்சியாளர் செந்தில் முல்லைநாதன். பொருளாதார வல்லுநர் அபிஜித் பானர்ஜி. பொருளாதார ஆராய்ச்சியாளர் எஸ்தர் டஃப்லோ. மூவரும் இணைந்து 2003ல் உருவாக்கியதே ‘அப்துல் லதீப் ஜமீல் பார்வர்டி ஆக்சன் லேப்’ (Abdul Latif Jameel Poverty Action Lab) என்கிற சர்வதேச ஆராய்ச்சிக் குழு. குழுவில் இடம்பெற்றுள்ள அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டஃப்லோவின் கணவர்.
எஸ்தர் டஃப்லோ இந்த குழுவை முன்னின்று நடத்தியவர். உலகின் பல்வேறு பிராந்தியங்களில் இந்த குழுவின் கிளைகள் உள்ளது. பொருளாதாரக் கோட்பாடு என்பது பேப்பரில் மட்டுமே இருப்பது கிடையாது. அதை நடைமுறை ரீதியாக மக்களிடம் எப்படி கொண்டு செல்வது என்பதை எஸ்தர் டஃப்லோ தனது ஆராய்ச்சி மூலம் கண்டுபிடித்ததோடு, நலத்திட்டங்களை மக்களிடம் நேரடியாக கொண்டு செல்வதே வறுமை ஒழிப்பின் முதல்படி என்றும் குறிப்பிட்டார்.
இந்தியாவின் பொருளாதார கொள்கைகளை தொடர்ந்து உற்றுநோக்கியவர், அதனை மோசமாகவும் விமர்சனம் செய்து வந்தார். இந்தியாவில் கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் மோசமாக உள்ளது. மக்கள் வறுமையில் இருக்க இதுவே காரணம் என்றவர், இந்தியாவில் பணக்காரர்கள், ஏழைகளுக்கு இடையிலான வேறுபாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்றும் விமர்சனங்களை வைத்தார்.
இவரைத்தான் தற்போது தமிழக முதல்வருக்கும் தமிழக அரசுக்கும் பொருளாதார ரீதியாக ஆலோசனை வழங்கும் குழுவில் அரசு களம் இறக்கியுள்ளது. நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர்கள் ஒரு நாட்டின் ஆலோசகராக இருப்பதற்கே யோசிக்கும் நிலையில், ஒரு மாநிலத்தின் ஐவர் குழுவில் இடம்பெற்றிருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருப்பதுடன், எஸ்தர் டஃப்லோ தமிழ்நாட்டிற்காக களமிறக்கப்படுவது முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாகவும் பார்க்கப்படுகிறது.தமிழகத்திற்கு எஸ்தரின் ஆலோசனைகள் நன்மை தரும் என்று எதிர்பார்க்கலாம்.
Average Rating