சுகவாழ்வு தரும் சுயதொழில்!! (மகளிர் பக்கம்)

Read Time:6 Minute, 55 Second

காளீஸ்வரி ரெத்தினம் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். தன் குடும்பத்தின் முதல் பட்டதாரி. காளீஸ்வரியின் தாயாருக்கு கைவினைப் பொருட்கள் செய்வதில் கொஞ்சம் ஆர்வமும் திறமையும் இருந்ததால், காளீஸ்வரிக்கும் சிறு வயது முதலே இதில் ஈடுபாடு இருந்து வந்துள்ளது. படித்து முடித்ததும், படிப்புடன் சேர்த்து அவர் 30க்கும் மேற்பட்ட வகையான கலைப்பொருட்களையும் செய்யப் பழகிக்கொண்டார். அப்போதுதான், அடுக்கடுக்காக சான்றிதழ்களை மட்டும் வைத்துக்கொண்டு, அதை ஏன் உபயோகப்படுத்தாமல் இருக்க வேண்டும் என்று, கைவினைப் பொருட்கள் மீதிருந்த ஆர்வத்தை கைத்தொழிலாக மாற்றிக்கொண்டார். அவர் செய்யும் பொருட்களைப் பார்த்து, அவர் திறமையைக் கண்டு வியந்த நண்பர்கள், அவரிடம் அதைக் கற்க விருப்பம் தெரிவித்தனர்.

அதிலும் ஒரு கை பார்த்துவிடலாம் என்று, ஒரு தொழிற்பயிற்சி நிறுவனமே ஆரம்பித்துவிட்டார் காளீஸ்வரி. இப்போது காரைக்குடியிலிருந்து சென்னைக்கு வந்து, ‘ஈஷா கைவினை தொழிற்பயிற்சி மையத்தை’ நடத்தி வருகிறார். பெண்கள், ஆண்கள் என அனைவருமே கைத்தொழில் பழக வேண்டும் என்று கூறும் காளீஸ்வரி, ‘‘கலைப் பொருட்களை உருவாக்க, எளிமையாகவும் இயற்கையாகவும், நம் உள் நாட்டிலேயே கிடைக்கக்கூடிய பொருட்களைக் கொண்டு, திறமையை மட்டுமே மூலதனமாக வைத்து தொழில் தொடங்கிவிட முடியும். இன்று அனைவரும் படிப்பிருக்கும் போது கைத்தொழில் எதற்கு என்று நினைக்கின்றனர். ஆனால், அனைவருமே கைத்தொழில் கற்பது அவசியம்’’ என்கிறார்.

குறிப்பாக பெண்கள் வேலைக்குச் செல்லமுடியாத சூழ்நிலையில் இது போன்ற கைத்தொழில் அவர்களுக்கு உதவியாய் இருக்கும். இன்று பெண்கள் வேலைக்குச் செல்லாவிட்டாலும் சம்பாதிப்பது அவசியமாகிறது. தாமாக ஒரு சிறிய தொகையை சம்பாதிக்கும் போது, சுயமரியாதையும் தன்னம்பிக்கையும் நமக்கு கிடைக்கும். இப்படி சம்பாதிக்க நினைக்கும் பெண்கள் முதலில் வீட்டிலிருந்தே தொடங்கலாம். நண்பர்கள், உறவினர்களிடமிருந்து ஆரம்பித்து, பின் அவர்கள் மூலம் அதிக வாடிக்கையாளர்களை அணுகலாம். இது பாதுகாப்பானதும் கூட என்று
ஆலோசிக்கிறார்.

காளீஸ்வரி, தன் ஈஷா தொழிற்பயிற்சி மையத்தில் பல பெண்களுக்கு டெய்லரிங், டெக்ஸ்டைல் டிசைனிங், பர்ஃபியூம், ஆரி, ஜூட், ஜூவாலா போன்ற பொருட்களை சேர்த்து முப்பதிற்கும் அதிகமான கைத்தொழிலுக்குப் பயிற்சி அளித்து வருகிறார். அவர் சொல்லிக்கொடுக்கும் பப்ளி பீட்ஸ் என்ற அலங்கார நகைகளுக்கு வெளிநாட்டு ரசிகர்கள் அதிகமாம். காளீஸ்வரி, இதற்கு முன் ஒரு பள்ளியில் பத்து ஆண்டுகளாக ஆர்ட்ஸ் – க்ராஃப்ட்ஸ் ஆசிரியராக வேலைப் பார்த்திருக்கிறார். மேலும், இப்போது கல்லூரியில் வருகை பயிற்சியாளராகவும் இருக்கிறார். இப்போது தான் உபயோகிக்கும் பொருள் ஒவ்வொன்றும் தன் சொந்த சம்பாத்தியத்தில் வாங்கியதாக பெருமையாக கூறும் காளீஸ்வரி, மீண்டும் பெண்கள் கைத்தொழில் கற்க வேண்டும் என்று வலியுறுத்தி, “சம்பாதிக்கும் எண்ணம் இல்லாவிட்டாலும், ஒரு கைத்தொழில் நிச்சயமாக கற்றுக்கொள்ள வேண்டும்.

மாற்றங்கள் இல்லாத வாழ்க்கையே கிடையாது. வாழ்க்கை எந்த திசையில் உங்களை அழைத்து சென்றாலும், அதை எதிர்கொள்ள உங்கள் திறமையும் நம்பிக்கையும் மட்டுமே உங்களுக்கு கைகொடுக்கும். இப்போது சம்பாதிக்க நினைக்கும் பெண்களுக்கு பல சலுகைகள் இருக்கின்றது. தொழில்நுட்ப வளர்ச்சியுடன் அரசும் நமக்குப் பல உதவிகள் கொடுக்க தயாராய் இருக்கின்றன. அரசு சலுகைகள் குறித்த தகவல்களை முதலில் சேகரியுங்கள். கிராமங்களில், பல வங்கிகளே பெண்களுக்கு இலவசமாகக் கைத்தொழில் பயிற்சி கொடுத்து, அவர்களுக்கு வருமானம் வரும் வகையில் தொழில் செய்ய கடனும் தருகிறது.

அவர்கள் பொருட்களை முக்கிய சந்தைகளில், பொது இடங்களில் விற்க, இலவச ஸ்டால் வசதியும் கொடுத்து, அவர்கள் பொருட்களை விளம்பரம் செய்கிறது. கொஞ்சம் விழிப்புணர்வுடன் நமக்குக் கிடைக்கும் சேவைகளைப் பற்றிய விவரங்களை சேகரித்து முழு மனதுடன் முயற்சி செய்தால், அனைவருமே இங்கு தொழில் முனைவோர் ஆகலாம். பன்னாட்டு நிறுவனங்கள் இன்று நம் சந்தைகளை ஆக்கிரமித்திருந்தாலும், நம் உள்நாட்டிலேயே கிடைக்கும் பொருட்கள் மூலம், பிளாஸ்டிக்கை தவிர்த்து, இயற்கை முறையில் தயாராகும் கைவினை பொருட்களை விரும்பி வாங்கும் மக்களும் இங்கு இருக்கவே செய்கின்றனர். மக்கள் மத்தியில் விழிப்புணர்வு அதிகரிக்க, அவர்களும் மெல்லச் சிறுதொழில் செய்வோருக்கு ஆதரவாய் நிற்க வருவார்கள்’’என்றார் காளீஸ்வரி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புதுமணத் தம்பதிகளுக்குத் தேனிலவு தரும் பரிசு…! (அவ்வப்போது கிளாமர்)
Next post ஃப்ரான்சைஸியில் தொழில் தொடங்கலாம்… நிரந்தரமான வருமானம் ஈட்டலாம்!!! (மகளிர் பக்கம்)