வடாம் டிப்ஸ்!! (மகளிர் பக்கம்)
வெயில் காலம் வந்துவிட்டால் மாவடு ஊறுகாய், மாங்காய் ஊறுகாய், வத்தல், வடாம் எல்லாம் போட தயாராகிவிடுவோம். வடாம் போடும் முன் சில விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்.
*வடாம் மாவை முதல் நாள் இரவே கிளறிவைத்துக் கொண்டால் காலையில் உப்பு, காரம், எலுமிச்சை சாறு சேர்த்துக் கிளறி வெயிலுக்கு முன்னால் வேலையை முடித்து விடலாம்.
*வடாம் மாவில் ஓமத்தைப் பொடி செய்து சேர்த்து, லெமன் எல்லோ கலர் சேர்த்து ஓமப்பொடி அச்சில் பிழிந்தால் மாலை நேர ஸ்நாக்ஸாக காய்ந்தவுடன் பொரித்து கொடுக்கலாம்.
*மிளகாய்க்கு பதில் மிளகு பொடி கலந்து வடாம் பிழிந்தால் மாறுதலான சுவையோடு வடாமும் மணக்கும் ஜீரணமும் ஆகும்.
*தோல் சீவி மிக்சியில் கூழாக்கிய பீட்ரூட்டைக் கொதிக்கும் வடகம் மாவில் கலந்து செய்தால் வடாம் ரோஸ் நிறத்திலும் சிறிது இனிப்புச் சுவையுடனும் இருக்கும்.
*துளிர் நார்த்தை இலைகள் பத்து எடுத்து பொடியாக நறுக்கி வடாம் மாவுடன் சேர்த்து கிளறி போட்டால், மணம், சுவை இருக்கும்.
*இளம் பிரண்டைகள் ½ கப் எடுத்து நீர் சேர்த்து அரைத்து வடிகட்டி வடாம் தண்ணீர் கொதிக்கும் போது விட்டு, பின் மாவு விட்டு கிளறி வெந்தவுடன் இறக்கி சிறு ஸ்பூனால் வட்டமாக விட்டால், பச்சை நிறமான வடாம் தயார். பிரண்டை உடலுக்கும் ஏற்றது.
*நன்கு முற்றிய பூசணிக்காயைத் துருவி, பூசணித் தண்ணீரிலேயே உளுத்தம் பருப்பு, உப்பு, பெருங்காயம், மிளகாய் வற்றல் சேர்த்து ஊறியபின் அரைத்து கறிவேப்பிலை, மல்லித்தழை, சீரகம் சேர்த்து கிள்ளி போட்டு காயவைத்து எடுத்தால் கூட்டு வடாம் தயார். இதனை கூட்டு, மோர் குழம்பு, சாம்பார் இவற்றில் பொரித்தும் போடலாம்.
*அரிசி வடாம் பிழியும் போது மாவில் சிறிது பால் சேர்த்துக் கொண்டால் வடாம் வெள்ளை நிறத்துடன் பொரியும்.
*எலுமிச்சை சாறு அதிகம் பிழிந்தால் வடாம் சிவந்து விடும்.