நீரிழிவை துரத்துவோம்! (மருத்துவம்)

Read Time:14 Minute, 14 Second

“நம்மில் பத்தில் இருவருக்கு நீரிழிவுப் பிரச்சினை இருக்கிறது” என்று அதிரவைக்கிறார்கள் மருத்துவர்கள்.
சாதாரண தலைவலி மாதிரி இது பொதுவான பிரச்சினையாக மாறிவிட்டது. வாழ்நாள் முழுக்க இதற்காக சிகிச்சை எடுத்தாக வேண்டும் என்று ஆயுள்தண்டனைக்கு தள்ளப்படுகிறோம்.‘‘நம் உடலில் ஏற்படும் உயிர் வேதியியல் மற்றும் சுற்றுப்புற சூழல் இரண்டும் சரிவர ஒத்துப்போகாமல் இருப்பது தான் நீரிழிவுக்கு முக்கிய காரணம்’’ என்கிறார் நீரிழிவு நிபுணர் டாக்டர் விஜயராகவன்.அவரிடம் பேசினோம்.

“நீரிழிவு என்னமாதிரி பிரச்சினை? தெளிவா சொல்லுங்களேன்.‘‘நாம் அன்றாடம் சாப்பிடும் உணவு நம்முடைய உயிர் வேதியியல் முறைக்கு ஏற்றது இல்லை. அதன் காரணமாக நம் உடலில் பல விதமான மாற்றங்கள் ஏற்படுகிறது. விளைவு உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், கொழுப்பு சத்து… அதில் முக்கியமானது நீரிழிவு பிரச்னை. நீரிழிவு நோயை டைப் 1 மற்றும் டைப் 2 என இரண்டு வகையாக பிரிக்கலாம்.

இதில் டைப் 1 ல் இன்சுலின் என்ற ஹார்மோன் சுரக்காது. இன்சுலின் இல்லாமல் அவர்களால் உயிர் வாழ முடியாது. நம்மில் 90 சதவிகித மக்கள் அவதிப்படுவது டைப் 2 நீரிழிவு நோய் பிரச்னையால். இதில் இன்சுலின் சுரந்தாலும், அது தன்னுடைய வேலையை சரியாக செய்யாது. இதை தான் எல்லாரும் சர்க்கரை அளவு அதிகமாகி விட்டதுன்னு நினைக்கிறாங்க. பொதுவாக டைப் 2 நீரிழிவு பிரச்னையை இரண்டு பிரிவாக பிரிக்கலாம். அதாவது முதல் 20 வருடம் எந்த பிரச்னையும் இல்லாமல் சர்க்கரையின் அளவு சீராக இருக்கும். இந்த சமயம் இன்சுலின் ஹார்மோன் அதிகமாக சுரக்கும். 20 வருடங்களுக்கு பிறகு, இன்சுலின் சுரப்பது குறையும், சர்க்கரையின் அளவு அதிகமாகும். நீரிழிவு பிரச்னையின் முக்கிய காரணம் சர்க்கரையின் அளவு கிடையாது. அதற்கான சிகிச்சை எடுத்துக் கொள்வதால் சரியாகாது. நீரிழிவு நோய்க்கு முக்கிய பிரச்சனை இன்சுலின் தான். இன்சுலின் சுரப்பது குறைந்து, அது சர்க்கரையின் அளவை சீர் செய்ய தவறுவது தான். அதனால் நீரிழிவை பொருத்தவரை பிரச்னை என்ன என்று அறிந்து அதற்கு ஏற்ப சிகிச்சை அளிக்க வேண்டும்.’’

“என்னதான் தீர்வு?”
‘‘சர்க்கரை நோய் ஒரு முறை நம்மை தாக்கினால் வாழ்நாள் முழக்க அந்த பிரச்னையில் இருந்து மீளவே முடியாது. இந்த பிரச்னைக்கு சர்க்கரையின் அளவை குறைக்க மட்டுமே சிகிச்சை அளிக்கப்படுகிறது. மாறாக இன்சுலின் சுரக்க நாம் சிகிச்சை எடுத்துக் கொள்வதில்லை.இன்சுலின் ஏன் அதிகமாக சுரக்க வேண்டும் என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். நாம் சாப்பிடும் உணவில் மூன்று மைக்ரோ நியூட்ரியன்ட் உள்ளது. கார்போஹைட்ரேட் (மாவு சத்து), புரதம் மற்றும் கொழுப்பு சத்து. இதில் நம்முடைய உடலுக்கு மிகவும் முக்கியமானது புரதம் மற்றும் கொழுப்பு சத்து. மாவுச்சத்து நம் வாழ்வியலுக்கு அவசியம் இல்லை. இருப்பினும் காப்போஹைட்ரேட் குளுகோசாக உடையும் போது அது சக்தியாக மாறும். அதற்காக அதிகமாக கார்போஹைட்ரேட் உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதில்லை. இதனை நாம் சாப்பிடாமல் இருந்தாலும், நம் உடலில் குளுகோஸ் தானாகவே உற்பத்தி செய்யும் தன்மை கொண்டது.

அதிகமாக மாவுச்சத்தை எடுத்துக்கொள்ளும்போது, அது சர்க்கரையின் அளவை அதிகரிக்கிறது. நம் உடலில் 140க்கு மேல் சர்க்கரையின் அளவு ஏறும் போது, உடனடியாக இன்சுலின் சுரந்து அதை கட்டுப்படுத்தும். இன்சுலின் சுரக்காமல், அதை கட்டுப்படுத்தாமல் போகும் பட்சத்தில் தான் நம் உடலில் சர்க்கரை கல்லீரல் மற்றும் தசையில் கொழுப்பாக தங்குகிறது. கொழுப்பு நம் உடலில் இவ்வாறு சேரும் போது அது உடல் பருமன், அதிக ரத்த அழுத்தம், இருதய பிரச்னை என ஒவ்வொரு பிரச்னைக்கும் வழிவகுக்கிறது.

நம்மில் 90% மக்கள் மாவு சத்து தான் அதிகம் சாப்பிடுகிறோம். இதன் முக்கிய காரணம் தான் உடல் பருமன். இதனை ஒரு குறிப்பிட்ட காலம் இன்சுலின் பாதுகாக்கும். அதன் பிறகு நம் உடலில் உள்ள திசுக்கள் தங்களின் வலுவை இழக்க ஆரம்பிக்கும். விளைவு இன்சுலின் அளவு சுரப்பதும் குறையும், சர்க்கரையின் அளவு அதிகமாகும். சர்க்கரையின் அளவு சீராக இருந்தால் நாம் சரியாக இருக்கிறோம் என்று அவசியம் இல்லை. அதே சமயம் இன்சுலினும் சரியாக சுரக்கிறதா என்றும் நாம் கணிக்க வேண்டும்.

இதை தான் நம் முன்னோர்கள் கடைபிடித்து வந்தார்கள். அவர்கள் அரிசி வகை மற்றும் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவினை அதிகம் சாப்பிட மாட்டார்கள். அப்படியே சாப்பிட்டாலும், நாளைக்கு ஒரு வேலை தான் அந்த உணவினை உட்கொள்வது வழக்கமாக கொண்டு இருந்தார்கள். புரதம் மற்றும் கொழுப்பினை தான் அதிகம் சாப்பிட்டார்கள்.புரதம் நம்முடைய தசைகளுக்கு வலுவை கொடுக்கும். அதே போல் கொழுப்பு சக்தியை அளிக்கும். எல்லாவற்றையும் விட சாப்பிட்ட உணவு செரிக்கும் வரை அப்போது உடல் உழைப்பு இருந்தது. இப்போதுள்ள செடென்டரி வாழ்க்கையில் நாம் நம் சக்தியை அதிகம் பயன்படுத்த தவறுகிறோம். மாறாக அதனை கொழுப்பாக உடலில் சேமிக்கிறோம். இப்போது கருவில் இருக்கும் குழந்தையை கூட சர்க்கரை நோய் பாதிக்க காரணம் அம்மாவின் உடல் நிலை. இதற்கு ஒரே தீர்வு உணவுக் கட்டுப்பாடு.”

“என்னமாதிரி கட்டுப்பாடுகள் தெவை?”
“டயட் என்றதும், நான் காலை இரண்டு பிரட், மதியம் ஒரு கப் அரிசி, இரவு பழங்கள்ன்னு சொல்கிறார்கள். நம் உடலை வருத்திக் கொண்டு இருப்பது டயட் அல்ல. நம்முடைய உடலுக்கு தேவையான மற்றும் ஏற்றுக் கொள்ள கூடிய உணவினை சாப்பிடுவது தான் டயட். உணவு கட்டுப்பாட்டினை பின்பற்றினால், சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். உடல் பருமன் பிரச்னை இருக்காது. ரத்த கொதிப்பு சீராகும், குடல் சம்மந்தமான பிரச்னை குறையும், தூக்கம் சீராக இருக்கும். இது எல்லாம் நார்மலாக இருந்தாலே நீரிழிவு பிரச்னை நம்மை அண்டாது.

வெள்ளையாக இருக்கும் எந்த உணவும் நமக்கு விஷம்ன்னு சொல்லலாம். அரிசியில் கூட நன்கு பாலிஷ் செய்யப்பட்ட வெள்ளை அரிசிக்கு பதில் சிகப்பரிசி சாப்பிடலாம். அதுவும் அளவு குறைவாக தான் உட்கொள்ள வேண்டும். சப்பாத்தி சாப்பிட்டால் உடல் எடை குறையும்ன்னு சொல்லவாங்க. அது உண்மை கிைடயாது. கோதுமை ஜெனிடிக் முறையில் மாற்றி அமைக்கப்பட்ட உணவு. அதிலும் மாவுச் சத்து அதிகமாக உள்ளது.
தானியங்கள் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்வதை தான் நம் முன்னோர்கள் வழக்கமாக கொண்டு இருந்தார்கள். குறிப்பாக நாம் வேட்டையாடி மற்றும் காட்டில் உள்ள உணவுகளை தான் சாப்பிட்டு வந்தோம். கொழுப்பு அதிகம் எடுத்துக் கொண்டாலும், அதற்கான உடல் உழைப்பும் இருந்தது. இப்போது எல்லாமே தலை கீழாக மாறிவிட்டது. சாப்பிடுற அளவுக்கு நாம் உடல் உழைப்பு செய்வதில்லை. உடல் உழைப்பு அதிகமாக இருந்தது, அதனால் மனஉளைச்சல் குறைவு. இப்போது எல்லாமே மாறிவிட்டது. மனஉளைச்சல் அதிகமாக இருந்தால், தூக்கம் சரியாக இருக்காது. அந்த சமயம் சுரக்கும் கார்டிசால் ஹார்மோன் கல்லீரலில் உள்ள சர்க்கரை அளவை ரத்தத்தில் கலக்கும். இதனை இன்சுலின் கொழுப்பாக மாற்றிடும். விளைவு சர்க்கரை நோய் மற்றும் இதர பிரச்னைகள்.

உணவில் மண்ணுக்கு அடியில் விளையும் கிழங்கு மற்றும் வகை உணவினை தவிர்க்க வேண்டும். இதில் மாவு சத்து அதிகம் என்பதால் இதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. அதற்கு பதில் பச்சை காய்கறிகள் உணவில் அதிகம் உட்கொள்ளலாம். கீரையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதில் புரதம் மற்றும் நார் சத்து அதிகம் என்பதால், உடலில் மாவு சத்து தங்காது. சிலர் முட்டையின் மஞ்சள் கருவை நீக்கிவிட்டு சாப்பிடுவார்கள். நல்லது தான்.

வெள்ளை கருயில் புரதச் சத்து இருக்கும். மஞ்சளில் கொழுப்பு. மஞ்சள் கருவை சாப்பிடலாம். அவ்வாறு சாப்பிடும் போது நம் உடலில் சேரும் கொழுப்பை உடற்பயற்சி மூலம் நீக்க வேண்டும். நாம் சாப்பிடும் கிரிஸ்டல் சர்க்கரையில் பாதி குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் உள்ளது. இரண்டுமே மாவு சத்து. பிரக்டோஸ் கல்லீரலில் கொழுப்பாக மாறும். சர்க்கரைக்கு பதில் பனங்கல்கண்டு, நாட்டு சர்க்கரையை பயன்படுத்தலாம். அதே போல் கிரிஸ்டல் உப்புக்கு பதில் கல் உப்பு பயன்படுத்தலாம். நாமே நம்முடைய பிரச்னைக்கு வழிவகுக்கிறோம்.”

“எப்படி இந்த பிரச்சினைகளையெல்லாம் தவிர்ப்பது?”
“இது குறித்த விழிப்புணர்வு எல்லோருக்கும் ஏற்பட வேண்டும். பள்ளி, கல்லூரி மற்றும் நாம் வேலை பார்க்கும் அலுவலக கேன்டீனும் முறையாக இருக்க வேண்டும். அதிகமா ஃபாஸ்ட்ஃபுட் சாப்பிடுவதால் நாம் இளம் வயதிலேயே இந்த பிரச்னையை சந்திக்கிறோம். அதாவது நம் உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது லெப்டின் என்ற ஹார்மோன் சுரக்கும். இத மூளைக்கு சாப்பிட்டது போதும் என்று சிக்னல் கொடுக்கும். உடலில் மாவுச்சத்து அதிகமாக இருக்கும் போது இந்த சிக–்னல் மூளைக்கு செல்லாத காரணத்தால் நாம் அதிக அளவு உணவினை சாப்பிடுவோம். விளைவு உடல் பருமன். குறிப்பாக பெண்களில் பலர் பாலிசிஸ்டிக் ஓவரியால் அவதிப்படுகிறார்கள். மாதவிடாய் பிரச்னை, குழந்தையின்மை. இதற்கு மாத்திரை நிரந்தர தீர்வாகாது. உணவுக் கட்டுப்பாடு மிகவும் அவசியம். அதற்காக சாப்பிடாமல் இருந்தாலும் பிரச்னை தான். எந்த உணவாக இருந்தாலும் அதற்காக ஒரு அளவை நிர்ணயிக்க வேண்டும். அதனை பின்பற்றினால் எந்த தீங்கும் ஏற்படாது. இப்போது எல்லாரும் சிறு தானியங்களுக்கு மாறிவருகிறார்கள். இதனை சாப்பிட்டால் உடல் கட்டக்கோப்பாக இருக்கும். ஆனால் அதே சமயம் உடற்பயிற்சி செய்வதும் அவசியம். இதை புரிந்து கொண்டாலே போதும். எல்லாரும் ஆரோக்கியமாக வாழ முடியும்.’’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post செல்லுலாய்ட் பெண்கள் 95!! (மகளிர் பக்கம்)
Next post வீகன் டயட்!! (மருத்துவம்)