பிரியாணி இலையின் பலன்கள்! (மருத்துவம்)
பிரியாணி இலை உணவில் மணத்திற்கும் ருசிக்கும் பயன்படுத்துவதோடு, தன்னுள்ளே பல மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. இதற்கு பிரிஞ்சி இலை, மலபார் இலை, பட்ட இலை என ஊருக்கு தகுந்தவாறு பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. நேபாளம், பூட்டான், இமயமலை சாரல்களில் இந்த பிரியாணி இலை நிறைய வளர்கிறது. இதிலிருந்து இருக்கும் யூஜினால் சைமன் என்கிற எண்ணெய் தன்மை சமைக்கும்போது, ஆவியாகி வாசத்தைத் தருகிறது.
இதில் ஆன்டி – ஆக்ஸிடென்டுகள் மற்றும் கனிம சத்துக்களான கால்சியம், பொட்டாசியம், காப்பர், செலினியம், இரும்பு சத்துக்கள் உள்ளன. பிரியாணி இலைகளில் உள்ள உன்டர்லியுகின் என்ற புரதசத்து அழற்சி மற்றும் சுவாசப் பிரச்னைகளைத் தீர்க்கும். இதிலுள்ள ஆன்டி – பாக்டீரியல் மற்றும் நோய் எதிர்ப்புசக்தி பல பிரச்னைகளுக்கு மருந்தாகிறது. பிரியாணி இலையிலுள்ள காஃபிக் அமிலமும், ரூடின் என்ற பொருளும் இதயத்தில் உள்ள ரத்தக்குழாய்களை வலுப்பெறச் செய்கின்றன. மேலும், கெட்டக் கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கச் செய்கிறது. மேலும், உணவு செரிமான பிரச்சனை உள்ளவர்களுக்கு இது நல்ல நிவாரணியாக பயன்படுகிறது.
இது பெரும்பாலான சித்தா, ஆயுர்வேத லேகிய மருந்து தயாரிப்புகளில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதன் இலையை எரிப்பதனால் உண்டாகும் நறுமணம், மன அழுத்தத்தைக் குறைப்பதுடன், வீட்டில் நேர்மறை ஆற்றல்களை உண்டாக்கும்.இதன் நறுமணம் அரோமா தெரபிகளில் சருமம், சுவாசப் பிரச்னை சிகிச்சைகளில் பயன்படுத்தப்படுகிறது. இதன் இலையிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்வதால், மூட்டு வலி, தலைவலி போன்றவை நீங்கும்.
பிரியாணி இலையில், புற்றுநோய் எதிர்ப்பு பொருட்களான காஃபிக் அமிலம், யூஜினால் மற்றும் க்யூயர்சிடின் அதிகளவு உள்ளதால், இதனை உணவில் அடிக்கடி பயன்படுத்தி வந்தால், புற்றுநோய் வராமல் தடுக்கிறது. சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றலும் பிரியாணி இலைக்கு உண்டு. உடல் எடையை குறைக்க நினைப் பவர்கள், தினமும் இரண்டு பிரியாணி இலையை 1 டம்ளர் தண்ணீரில் இட்டு கொதிக்க வைத்து, குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.