என் இலக்கு ஒலிம்பிக் பதக்கம்!! (மகளிர் பக்கம்)

Read Time:11 Minute, 21 Second

‘‘குத்துச்சண்டை போட்டிகளில் பெண்கள் அதிகமாக பங்கு பெறுவதில்லை. இந்த விளையாட்டில் பெண்களுக்கு ஆர்வம் அதிகம். மேலும் வாய்ப்புகள் நிறைய உள்ள இந்த துறையில் அவர்களின் குடும்ப சூழ்நிலை காரணமாக எதையும் சாதிக்க முடியாமல் சாதாரண வாழ்க்கையை தான் இந்த வீராங்கனையர்கள் வாழ்ந்து வருகிறார்கள். அந்த பெண்களின் அடையாளமாகத்தான் நான் இந்த விளையாட்டில் ஈடுபட்டு வருகிறேன். நான் விளையாடுவது எனக்காக மட்டுமில்லை, வாய்ப்பு கிடைக்காமல் வீட்டில் இருக்கும் மற்ற பொண்ணுங்களோட கனவுகளுக்கும் சேர்த்து விளையாடுறேன்’’ என்கிறார் ஸ்வேதா. இவர் தமிழ்நாடு ஹாக்கி அணியின் கேப்டனாக இருந்து குத்துச்சண்டை விளையாட்டு மேல் ஏற்பட்ட ஆர்வத்தினால் அதில் பயிற்சி எடுத்துக்கொண்டு தேசிய அளவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் தனக்கான ஒரு இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

‘‘நான் 12ம் வகுப்பு படிக்கிறேன். எனக்கு சொந்த ஊரு திருப்பூர். என் அண்ணனுக்கு குத்துச்சண்டை விளையாட்டு மேல் ஆர்வம் அதிகம். அதனால் அவர் பாக்சிங் கத்துக்க ஆரம்பிச்சார். எங்களுடையது ரொம்ப சாதாரணமான குடும்பம். அப்பா மெக்கானிக் என்றாலும் அவருக்கும் விளையாட்டுகள் மேல ஆர்வம் அதிகம். அதனால அண்ணன் குத்துச்சண்டை பயிற்சி எடுக்க சம்மதம் கேட்டபோதும், போட்டியில் கலந்து கொள்ள இருப்பது குறித்து தெரிவித்த போதும் அவர் எந்த தடையும் விதிக்கவில்லை. ‘நீயும் அண்ணனைப் போல் ஏதாவது ஒரு விளையாட்டில் பயிற்சி எடுக்கணும்’ன்னு சொல்லிக் கொண்டே இருப்பார்.

அவர் சொல்லும் போது எல்லாம் எனக்கு பெரிய ஈடுபாடு இல்லை. ஆனால் அண்ணன் எப்போது குத்துச்சண்டை பயிற்சிக்கு போனாலும் நானும் கூடவே போவேன். அங்க அவர் பயிற்சி எடுப்பதை வேடிக்கைப் பார்ப்பேன். அண்ணன் ஓய்வு எடுக்கும் போது அவரோட பாக்ஸிங் கிளவுசை கையில் மாட்டிக் கொண்டு நான் குத்துச்சண்டை செய்வது போல் விளையாடிக் கொண்டு இருப்பேன். அண்ணன் எப்படி எல்லாம் சண்டைப் போட்டாரோ அப்படியே நானும் செய்து பார்ப்பேன். சில சமயம் பாக்ஸிங் பத்தி அவரு பேசும் போது நானும் எனக்கு தெரிந்த சில ஐடியாக்களை சொல்லுவேன்.

இப்படி குத்துச்சண்டை பார்த்து அது குறித்து பேசிப் பேசி எனக்கு அந்த விளையாட்டு மேல் ஒரு வித ஈர்ப்பு ஏற்பட ஆரம்பிச்சது. ஆனால் அதை கற்றுக் கொண்டு போட்டியில் விளையாட வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் எனக்கு ஏற்படல. என்னுடைய ஆர்வத்தை கவனித்த அண்ணன் தான் ‘நீயும் குத்துச்சண்டை கத்துக்கிறியான்னு’? கேட்டார். அவரு கேட்டதும் என்னால் குத்துச்சண்டை கத்துக்க முடியுமா? பாக்ஸிங் செய்ய முடியுமா? அவ்வளவு சக்தி இருக்குமா? ன்னு என்னுள் பல கேள்விகள் எழுந்தது. ஒரு பக்கம் பயமாகவும் இருந்தது. ஆனால் பாக்சிங் ேமல் தனிப்பட்ட விருப்பம் இருந்ததால் சரின்னு சொன்னேன்’’ என்றவரின் பயம் முதல் போட்டியில் விளையாடிய பிறகு தான் விலகியதாம்.

‘‘பாக்ஸிங் மேல் ஏற்பட்ட ஈர்ப்பால், பயிற்சி எடுத்தாலும் ஒரு வித பய உணர்வு இருந்து கொண்டே இருந்தது. முதல் போட்டியில் பங்கு பெறும் போது உடலில் நடுக்கம் ஏற்பட்டது. ஆனால் அந்த போட்டியில் விளையாடிய பிறகு அந்த பய உணர்வு எங்கு போனதுன்னு தெரியல. எனக்குள் ஒரு தன்னம்பிக்கை ஏற்பட்டது. என்னாலும் ஒரு குத்துச்சண்டை வீராங்கனையாக இருக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. தொடர்ந்து குத்துச்சண்டை பயிற்சி எடுத்தேன். போட்டியிலும் பங்கு பெற்றேன். அந்த ேநரத்தில் பள்ளியில் ஹாக்கி விளையாட்டிற்காக ஆள் எடுத்தாங்க. நான் நல்லா ஓடுவேன் என்பதால் என்னை டீமில் தேர்வு செய்தாங்க.

பாக்ஸிங்கை விட ஹாக்கி போட்டிகள்ல நான் நல்லா விளையாடுறேன்னு எங்க சார் சொன்னதால அதுல கவனம் செலுத்த ஆரம்பிச்சேன். எவ்வளவு விளையாடினாலும் படிச்சிருவேன். அதனால வீட்ல பயிற்சிக்கு போறதால ஒன்னும் சொல்ல மாட்டாங்க. நான் 7 வது படிக்கும் போது எங்க ஹாக்கி டீம் ஒரு நல்ல டீமாக உருவாச்சு. குஜராத்தில் நடந்த ‘கேளோ இந்தியா’ போட்டியில கலந்து கொண்டு தமிழ்நாடு அணிக்காக விளையாடினேன். அந்த போட்டிகளில் எங்களால் ஜெயிக்க முடியல.

அந்த போட்டியில் பங்கு பெற்றதால் விளையாட்டு குறித்த சில நுணுக்கங்களை தெரிஞ்சுகிட்டோம். அடுத்த வருஷம் இமாச்சல் பிரதேசத்துல நடந்த தேசிய அளவிலான ஹாக்கி போட்டி நடைபெற்றது. அதில் நான் தமிழக அணி கேப்டனா விளையாடினேன். அந்த போட்டி என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நிகழ்வுன்னு சொல்லணும். அந்த வருஷமும் நாங்க எல்லாரும் நல்லா விளையாடி மேட்சை டிரா செய்தோம்.

ஆனால் கடைசியில் நடைபெற்ற இருதரப்பு கோல் கணக்கில் ஒரு பாயின்ட் வித்தியாசத்தில் இமாச்சல் பிரதேசம் ஜெயிச்சது. தோல்வி அடைந்தாலும் எங்க விளையாட்டுத்திறன் மேலும் முன்னேற்றம் அடைந்தது. ஆனால் எந்த ஒரு கேப்டனுக்கும் தன் அணியை வெற்றி வாகை சூடினால் தான் அடுத்த அடுத்த போட்டிகளில் பங்கு பெற வாய்ப்பு கிடைக்கும். என்னால் அதை தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை என்ற காரணத்தால், அடுத்து நடந்த இரண்டு வருட ஹாக்கி போட்டிகளில் நான் தேர்வாகவில்லை.

அது என்னை மனதளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. அதனால் விளையாடவும் போகலை. அப்ப நான் 10ம் வகுப்பு படிச்சிட்டு இருந்தேன். இந்த சமயத்தில் தான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், விளையாட்டுக்கான பயிற்சி முற்றிலும் தடைபட்டது. இரண்டு வருடம் எந்த விளையாட்டிலும் நான் ஈடுபடவில்லை. படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். அந்த இரண்டு வருடம் என்னுடைய மன வருத்தம் நீங்க ஒரு மருந்தாக அமைந்தது’’ என்றவர் அதன் பிறகு குத்துச்சண்டை விளையாட்டு மேல் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.

‘‘வீட்டில் அப்பாவும் அண்ணாவும் நான் இப்படி இருப்பதைப் பார்த்து நீ மறுபடியும் குத்துச்சண்டை பயிற்சிக்கு போகலாமேன்னு சொன்னாங்க. ஏற்கனவே நான் பயின்ற விளையாட்டு என்பதால், அதில் பயிற்சி எடுக்க ஆரம்பித்தேன். போட்டிக்கு தயாராக ஆரம்பிச்சேன். ஒரு விளையாட்டில் தோற்றால் நம் வாழ்க்கையில் என்றுமே தோல்வி தான் என்ற என் நினைப்பை குத்துச்சண்டை மாற்றியது. இந்த விளையாட்டில் பயிற்சி எடுக்க ஆரம்பிச்ச பிறகு தான், இந்த விளையாட்டு தான் எனக்கானது என்பதை புரிந்து கொண்டேன்.

அதிலிருந்து முழு மூச்சோட பயிற்சி எடுக்க ஆரம்பிச்சேன். இந்த விளையாட்டு குறித்து நிறைய போட்டிகளை பார்த்தேன், பல விஷயங்களை அண்ணன் மற்றும் பயிற்சியாளரிடம் பேசினேன். அவங்களும் சில யோசனைகளை சொல்லுவாங்க. அதை மறுபடியும் பிராக்டீஸ் செய்வேன். ஒவ்வொரு முறை நான் ரிங்ல ஏறும்போது போன தடவை விளையாடியதை விட இந்த முறை முன்னேறி விளையாடணும்ன்னு போட்டியில் களம் இறங்குவேன்.

அந்த எண்ணம் தான் என்னை போட்டியில் ஜெயிக்கவும் பாலமாக அமைந்தது. தற்போது மயிலாடுதுறையில் உள்ள ஒரு பயிற்சி நிலையத்தில் பயிற்சி எடுக்கிறேன். கடந்த 2021ம் ஆண்டு மாநில அளவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் வெண்கல பதக்கம் வென்றேன். இப்போ +2 என்பதால் படிப்பில் கொஞ்சம் கவனம் செலுத்தினாலும், அடுத்த போட்டிகளுக்காக என்னை தயார் படுத்தி வருகிறேன். என்னோட இலக்கு ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் விளையாடி பதக்கம் வெல்ல வேண்டும் என்பதுதான். அதற்கான பயிற்சியில் என்னை ஈடுபடுத்தி வருகிறேன்’’ என்று மலைக்க வைக்கிறார் ஸ்வேதா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கரகாட்டம்!! (மகளிர் பக்கம்)
Next post காம முத்தத்தில் மூலம் என்ன ஃபீலிங் கிடைக்கும்?..!! (அவ்வப்போது கிளாமர்)