பனிக்கால குளியல் பவுடர்!! (மகளிர் பக்கம்)
குளியல் பவுடருக்கு தேவையானவைகடலைப்பருப்பு – 100 கிராம், பச்சைப்பயறு – 500 கிராம், செந்தாமரை இதழ்கள் – சிறிது, காய்ந்த ரோஜா இதழ்கள் – கைப்பிடியளவு, துளசி – கைப்பிடியளவு, வெட்டி வேர் – 10 கிராம், பூலாங் கிழங்கு – 50 கிராம், சீயக்காய் – 50 கிராம்.இவையனைத்தையும் நிழலில் உலர்த்தி பவுடராக்கி தேய்த்துக் குளித்தால் வறண்ட கேசம் அல்லது சருமத்திற்கு பளபளப்பும், ஈரப்பதமும் கூடும். குளிர்காலத்துக்கேற்ற சிம்பிள் ஃபேஸ் பேக்: கோதுமை மாவு, பயத்தம் மாவு, அரிசி மாவு இவைகளை தலா 1 ஸ்பூன் எடுத்துக் கொண்டு அத்துடன் காய்ச்சாத பாலைக் கலந்து சந்தனம் போல் குழைத்துக் கொண்டு, இந்த பேக்கை முகத்தில் தடவி 15-20 நிமிடங்கள் கழித்து கழுவினால் முகம் பொலிவு பெறும். இதை வாரம் ஒரு முறை செய்து வரலாம்.குளிர்காலத்துக்கேற்ற சிம்பிள் ஹேர் கேர்: புளிக்காத தயிர் – 5 ஸ்பூன், வேப்பிலைப் பொடி – ¼ ஸ்பூன், துளசி பொடி, வெந்தயப் பொடி தலா – ¼ ஸ்பூன், இவைகளை கலந்து தலையில் தடவி 15 நிமிடங்கள் ஊறவைத்து பின்னர் அலச வேண்டும். வாரம் 3 முறை செய்து வந்தால், தலை முடி வறண்டு போவது தடுக்கப்பட்டு பொடுகும் போய் விடும்.குளிர் காலத்தில் உடலில் ரத்த ஓட்டம் குறையும். அதனால் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை லேசாக சூடாக்கி, உடலில் தேய்த்து ½ மணி நேரம் அப்படியே ‘மசாஜ்’ செய்தால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். பின்பு சிறு பயறு பொடி, கடலைமாவு தூள் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை உடலில் தேய்த்துக் கழுவவும். உடலில் தேய்க்கும் எண்ணெயில் சிறிதளவு பன்னீர் கலந்து கொண்டால் சருமம் வாசனையாக இருக்கும்.