உடல் நலம் காக்கும் பிரண்டை!! (மருத்துவம்)

Read Time:15 Minute, 0 Second

வச்சிரவல்லி என்றும் பிரண்டை என்றும் அழைக்கப்படும் இக்கீரையின் தாவரவியல் பெயர் சிஸஸ் க்வாட்ரங்குளாரிஸ் (Cissus quadrangularis) தாய்மார்கள் சில நேரங்களில் தங்களது குழந்தைகளின் மேல் கோபம் இருந்தால் “உன்னைப் பெத்த வயித்துல பிரண்டையை வைத்துத்தான் கட்ட வேண்டும்” என்று இயலாமை கலந்த கோபத்துடன் கத்தித் தீர்ப்பார்கள். உண்மையில் அந்தப் பழமொழிக்கான அர்த்தம் என்னவென்றால், பிரண்டைபுண்களை ஆற்றக்கூடிய சிறந்த மூலிகை.

இது பிரசவத்தின் போது பெண்களுக்கு பெல்விஸ் எனப்படும் இடுப்பு எலும்பின் விரிவால் ஏற்படும் வலியையும், பெண்களின் கர்ப்பப்பை மற்றும் வயிற்றில் ஏற்படும் புண்களையும் குணமாக்குவதற்காக அக்காலங்களில் வயிற்றை சுற்றி கட்டுவார்கள். இந்தப் பழமொழி இகழ்ச்சிக் குறிப்பாக இருந்தாலும், குழந்தைகளின் நடத்தை வயிற்றெரிச்சலை உண்டாக்குவதாக மறைமுகக் குறிப்பாக சொல்லி, அதைப் போக்குவதற்காக அவ்வாறு சொல்வார்கள். மேலும், பெத்த வயித்துக்கு பிரண்டை என்னும் சொல் வழக்கும் உண்டு.

இது இந்தியா, இலங்கை முதலிய இடங்களின் வெப்பப் பிரதேசங்களில் ஏராளமாய் உண்டாகிற கொடியினம். இதில் ஓலைப்பிரண்டை, உருட்டைப் பிரண்டை, முப்பிரண்டை, சதுரப்பிரண்டை, களிப்பிரண்டை, தீம்பிரண்டை, புளிப்பிரண்டை என சில பிரிவுகளுண்டு. முப்பிரண்டை கிடைப்பதரிது. இதில் நிறைய வகைகள் இருந்தாலும், நான்கு பட்டைகளைக்கொண்ட சாதாரணப் பிரண்டையே அதிகமாகக் கிடைக்கிறது.

பிரண்டையில் காணும் சத்துக்கள்

விட்டமின் சி, கால்சியம், இரும்புச்சத்து, மக்னீசியம், மாங்கனிஸ், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், கீட்டோ ஸ்டீராய்டு, பைட்டோஜெனிக் ஸ்டீராய்டு, சைட்டோஸ்டீரால், ஆல்பாஅமிரின், ஆல்பாஅம்பைரோன், டெட்ராசைக்ளிக் ட்ரைடெர்பினாய்டு மற்றும் ஆன்டிஆக்ஸிடென்ட் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.பிரண்டையின் குணங்களைப் பற்றி அகத்தியர், குணவாகடம் என்னும் நூலில் கீழ்வருமாறு குறிப்பிடுகிறார்.

“பிரண்டையைநெய் யால்
வறுத்துப் பின்பரைத்து மாதே!
வெருண்டிடா தேற்று விழுங்கில் – அரண்டுவரும்
மூலத் தினவடங்கும் மூலவி ரத்தமறும்
ஞாலத்தி னுள்ளே நவில்”.

“மாந்தம் வயிற்றுவலி வாயு
அதி சாரமுளை
சேர்ந்தமூ லங்கபம்உட் செம்புனற்போக் – கோய்ந்தநடை
யெல்லா மகலும் எழும்பும் அதிகபசி
மல்லார் பிரண்டையுண்டு வா”.

ஆசனத்தினவு, இரத்த மூலம் ஒழியும். மேலும் அக்கினிமந்தம், குன்மம், வாதாதிசாரம், முளைமூலம், கபதோடம், இரத்தபேதி, கால் அசதி நிவர்த்தியாகும். அதிக பசி உண்டாகும்.

களிப்பிரண்டை
ஐயமறும் பித்தம் அணுகாம லோடிவிடுந்
தையலார் போகமிகச் சாருங்காண் பையக்
கரப்பான் விலகுங் கடிசிலந்தி யும்போம்
உரப்பாங்களிப்பிரண்டை யுண்.
இதனால் கபவிருத்தி, பித்ததோடம், கரப்பான், காணாக்கடிவிடம், சிலந்தி விடம் இவை நீங்கும். வீரிய விருத்தி உண்டாகும்.

தீம்பிரண்டை, புளிப்பிரண்டை
“தீம்பிரண்டை தன்னாற் செரியாமந் தம்ஆமந்
தேம்பிரைப்பு விக்கல்ஐயந் திண்வாதம்-போம்பலரும்
பார்க்கும் புளிப்பிரண்டை பாண்டுநோய் குன்மகயம்
போக்குமது சூடாம் புகல்”.
தித்திப்புப் பிரண்டையால் செரியாமந்தம், சீதபேதி, அதி கொட்டாவி, சுவாசவிக்கல், கபவிருத்தி, வாதகோபம் இவை போகும். புளிப்பிரண்டையால் சரீரவெளுப்பு, மார்புநோய், வயிற்றுவலி, கயம் இவைகள் விலகும்.

எலும்பு பலவீனமானவர்களின் எலும்புகளை பலப்படுத்தவும் எலும்பு மூட்டுகளை வலுப்படுத்தவும் எலும்பின் அடர்த்தியையும் அதிகரிக்க உதவுகிறது பிரண்டை. எலும்பு முறிவு சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் மாத்திரைகளோடு பிரண்டைத்துவையல், பிரண்டைத் தோசை, பிரண்டைக்குழம்பு போன்றவற்றை உணவாகஎடுத்துக்கொள்வதோடு வெளிப்பிரயோகமாக பிரண்டைக்கட்டையும் பயன்படுத்தலாம்.

பிரண்டைத் துவையல்

பிரண்டையின் இளந்தண்டை நெய்விட்டு வதக்கி, அரைத்துத் துவையல் செய்து தின்பது வழக்கம். பிரண்டைத் தண்டுகளின் மேல் தோலை அகற்றி, அதில் உள்ள நாரையும் அகற்றிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கி நல்லெண்ணெய் அல்லது நெய்யில் வதக்க வேண்டும். அதனுடன் காய்ந்த மிளகாய், புளி, உப்பு சேர்த்து அரைக்க வேண்டும். சுவைக்காக தேங்காய், உளுந்து சேர்த்துக்கொள்ளலாம். பிறகு, கடுகு, உளுந்தம்பருப்பு சேர்த்து தாளித்து எடுத்த துவையலை சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம்.

அடிபட்ட வீக்கம், சுளுக்கு, பிடிப்பு வலி போன்றவை குணமாகும். இதன் துவையல் உடல் சுறுசுறுப்பை அதிகரிக்கச்செய்யும், ஞாபகசக்தியைப் பெருக்கும், மூளை நரம்புகளை பலப்படுத்தும், எலும்புகளுக்கு சக்தி தரும். மேலும் ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவை நிறுத்துவதுடன் வாய்வுப் பிடிப்பைப் போக்கும். வாரத்தில் இரண்டு நாள் வீதம் சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெறுவதோடு உடல்வனப்பும் பெறும்.

வயிறு செரிமான சக்தியை இழந்த காலங்களில் பிரண்டைத் துவையலை உணவோடு சாப்பிடுவதன் மூலம் செரிமான சக்தியைத் தூண்டி செரிமானம் நடைபெறுவதோடு செரிமான உறுப்புகளுக்கு புத்துணர்ச்சியும் கிடைக்கும்.

எலும்புமுறிவிலிருந்து விரைவில் நிவாரணம் பெற

எலும்பு முறிவு ஏற்பட்டால், இதன் துவையலைச் சாப்பிடுவதன் மூலம் நல்ல பலன் பெறலாம். பிரண்டையில் உள்ள கால்சியம் சத்து முறிந்த எலும்புகளை இணைக்க பெரிதும் பயன்படுகிறது. மேலும், இளம் தண்டுடன் புளி, உப்பு சேர்த்து அரைத்து, நன்றாகக் காய்ச்சி பொறுக்கும் சூட்டில் பற்றுப் போடுவதன் (பாதிக்கப்பட்ட இடத்தில் பூசுவது) மூலம் பலன் கிடைக்கும். எலும்பு முறிவு மட்டுமல்லாமல், அடிபட்ட வீக்கம், சுளுக்கு, வலி உள்ள இடங்களிலும் இதைப் பூசிவர நிவாரணம் கிடைக்கும்.

மூலநோய் குணமாக

பிரண்டைத் தண்டை நெய்விட்டு வறுத்து அரைத்து கொட்டைப் பாக்களவு வீதம் தினம் இரு வேளையாக எட்டு நாட்கள் உட்கொண்டு வந்தால் மூலநோயில் உண்டாகும் நமச்சலும், அரிப்பும், குருதி வடிதலும் நிற்கும்.

பிரண்டை இலைத் துவையல்

பிரண்டையின் இலையிலும் துவையல் செய்யலாம். இதைச் சாப்பிட்டு வருவதால் இதய நோய்கள், ரத்தஅழுத்தம், சர்க்கரைநோய், குடல் புண், மூல நோய் போன்றவை குணமாகும்.
இலை 100 கிராம், இஞ்சி ஒரு துண்டு, பூண்டு – 3 பல், மிளகு – 5, காய்ந்த மிளகாய் – 3, கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் மஞ்சள், உப்பு ஆகியவை தேவையான அளவு எடுத்துக்கொள்ளவும். முதலில் இஞ்சி, பூண்டு, மிளகு, காய்ந்த மிளகாய், மஞ்சள் போன்றவற்றை அரைத்து வைத்துக்கொள்ளுங்கள். பிறகு பிரண்டை இலை, கறிவேப்பிலை, கொத்தமல்லி போன்றவற்றை நல்லெண்ணெய் அல்லது நெய்விட்டு வதக்கி, ஏற்கெனவே அரைத்து வைத்த கலவையுடன் சேர்த்து அரைக்கவும். உப்பு சேர்த்தால் துவையல் தயார்.

இரத்தக்குழாய்களில் கொழுப்பு படிவதால் ரத்த ஓட்டத்தின் வேகம் குறையும். இதனால் இதயத்துக்கு செல்லும் இரத்தம் குறையும் மேலும் இதய வால்வுகள் பாதிப்படையும். இந்த பாதிப்புக்கு உள்ளானோர், அடிக்கடி இந்தத் துவையலைச் சாப்பிட்டு வந்தால் ரத்த ஓட்டம் சீராகி இதயம் பலப்படும்.

பெண்களுக்கு மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் முதுகுவலி, இடுப்புவலி தீர,

பிரண்டையை நறுக்கி சாறு பிழிந்து அதனுடன் நல்லெண்ணெய் கலந்து குடித்துவந்தால் சீரற்ற மாதவிடாய் சீராகும். மாதவிடாய்க் காலங்களில் முதுகுவலி இடுப்புவலி என்று அவதிப்படும் பெண்கள் பிரண்டையை மாதவிடாய் வருவதற்கு ஒருவாரம் முன்பு எடுத்துக்கொண்டால் வலியிலிருந்து தப்பிக்கலாம். இவைத் தவிர பிரண்டைத் துவையலும் சாப்பிடலாம்.

ஆஸ்துமா நோய்க்கு பிரண்டை

ஆஸ்துமா நோயாளிகள் பிரண்டைத் தண்டு மற்றும் மிளகு இரண்டையும் சம அளவு எடுத்து துவையல் போல அரைத்து தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் மூச்சுத்திணறல் ஏற்படாமல் பாதுகாக்கும். இது ஒவ்வாமையைத் தடுக்கவும் உதவுகிறது.

பிரண்டை வற்றல்

நன்கு முற்றிய இதன் தண்டுகளை சிறு துண்டுகளாக நறுக்கி, மோரில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து ஊறவைத்து உலர்த்தி வற்றலாக்க வேண்டும். அந்த
வற்றலை எண்ணெயில் பொரித்துச் சாப்பிட்டால் பசியின்மை, நாக்குச் சுவையின்மை போன்றவை குணமாகும்.

பிரண்டை உப்பு

பிரண்டையை உலர்த்தி எடுத்து தீயில் எரித்துச் சாம்பலாக்க வேண்டும். அப்படிக் கிடைக்கும் ஒரு கிலோ சாம்பலை 3 லிட்டர் நீரில் கரைத்து, வடிகட்டி, அரை நாள் தெளியவைக்க வேண்டும். அப்படி தெளிந்த நீரை பீங்கான் பாத்திரத்தில் ஊற்றி 8 முதல் 10 நாள்கள் வெயிலில் உலரவைக்க வேண்டும். நீர் முழுவதும் வற்றி உலர்ந்த பிறகு கீழே படிந்திருக்கும் உப்பைச் சேகரித்து வைக்கவும்.

பிரண்டை உப்பின் பயன்கள்

பிரண்டை உப்பில் 1 முதல் 2 கிராம் எடுத்துக்கொண்டு அதனுடன் பால் சேர்த்துச் சாப்பிட 2 மாதத்தில் உடல்பருமன் குறைந்து, ஊளைச் சதையும் குறையும்.
2 கிராம் பிரண்டை உப்புடன், ஜாதிக்காய்த்தூள் 5 கிராம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், ஆண்மைக்கோளாறு பிரச்னை தீரும். வீரியம் பெருகும், உடல் வலிமை பெறும்.
வாய்ப்புண், வாய்நாற்றம், உதடு வெடிப்பு போன்ற பிரச்னைகளுக்கு வெண்ணெயுடன் 1 கிராம் பிரண்டை உப்பைக் கலந்து தினமும் 2 வேளை கொடுத்தால், மூன்று நாளில் குணமாகும்.
ஆண்கள் பாலில் பிரண்டை உப்பு கலந்து குடித்துவந்தால் ஆண்மை பெருக்கும். பிரண்டை நினைவுத்திறனையும் உடலுக்கு புத்துணர்ச்சியும் உடல் சுறுசுறுப்பையும் அதிகமாக்குகிறது.

முறிந்த எலும்புகள் விரைவில் சேர

முறிந்த எலும்பு விரைவில் சேர்வதற்கு இதன் வேரை உலர்த்திப் பொடித்து 2 கிராம் வீதம் உண்டு வரலாம். இதனை வெந்நீரில் குழைத்து பற்றிட்டும் வரலாம்.

பிரண்டைச் சூரணம்

இளந்தண்டை இலையுடன் உலர்த்திச் சூரணித்துச் சுக்குத்தூள், மிளகுத் தூள் சிறிது சேர்த்துச் சாப்பிட வயிற்றுநோய், அசீரணம் நீங்கும். பாலில் கலந்துச் சிறிது கற்கண்டு சேர்த்து அருந்த உடலைத் தேற்றும். உடல் வன்மை பெருகும்.பிரண்டையைச் சிறு தீயிலிட்டு வதக்கிச் சாறுபிழிந்து காதில் இரண்டொரு துளிவிட, காதுச்சீழ் மாறும். மூக்கில்விட இரத்தபீநசம் மாறும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஆண்கள் இங்கெல்லாம் தொட்டா பெண்களுக்கு உணர்ச்சி அதிகமாகிடுமாம்..!! (அவ்வப்போது கிளாமர்)
Next post கண்ணைக் கட்டிக்கொள்ளாதே-கண்ணாடிக்கு விடுதலை! (மருத்துவம்)