நீர்க்கடுப்பு… தடுக்க… தவிர்க்க! (மருத்துவம்)
கோடைகாலம் வந்துவிட்டாலே சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வாட்டும் பிரச்னை நீர்க்கடுப்பு. இது போதியளவு நீர் குடிக்காததால் ஏற்படும் பிரச்னையாகும். நீர்க்கடுப்பு ஏற்படும்போது, சிறுநீர் வெளியேறும் அளவு குறைந்து வலி ஏற்படும். சிறுநீர் அடர்த்தி அதிகமாகி, அடர் மஞ்சள் நிறத்தில் வெளியேறும். சிறுகுழந்தைகளுக்கு சிறிது சிறிதாக சிறுநீர் வெளியேறி வலி உண்டாகும். பெரியவர்களுக்கு, உப்புக் கலந்த கழிவுகள் முழுமையாக வெளியேறாமல் கிட்னியில் படிந்து கற்களாக உருவெடுக்கும்.
நீர்க்கடுப்பு சரி செய்யும் வழிமுறைகள்
தினமும் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
பழங்கள், பழச்சாறுகள் எடுத்துக் கொண்டால் நீர்க்கடுப்பு பிரச்னை குணமாகும்.
வெந்தயத்தை லேசாக வறுத்து, மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். ஒரு டம்ளர் மோரில், அரை ஸ்பூன் வெந்தயப் பொடி கலந்து குடித்து வரலாம்.
ஒரு டம்ளர் தண்ணீரில், எலுமிச்சைச்சாறு பத்து சொட்டுப்பிழிந்து, சிறிது கல் உப்பு, ஒரு ஸ்பூன் நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் குடித்து வரலாம்.
தனியாவை சிவக்க வறுத்துப் பொடித்து, ஒரு டம்ளர் நீரில் ஒரு ஸ்பூன் தனியாப் பொடி நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் குடிக்கலாம்.
சீரகம் அரை தேக்கரண்டி, சோம்பு கால் தேக்கரண்டி, பத்து சின்ன வெங்காயம், ஒரு ஸ்பூன் தனியா, இவற்றை மிக்ஸியில் அரைத்து, ஒரு டம்ளர் மோரில் கலந்து சாப்பிட்டால் நீர்க்கடுப்பு குணமாகும்.
நெல்லிக்காய் அளவு புளியை நீர்விட்டு கரைத்து வடிகட்டவும். இதனுடன் ஒரு துண்டு வெல்லம் சேர்த்துக் குடித்தால் நீர்க்கடுப்பு நிற்கும்.மண்பானையில் தண்ணீர் ஊற்றி, வெட்டிவேரைப் போட்டு ஊற வைத்து, அதை குடித்து வந்தால் நீர்க்கடுப்பு குணமாகும்.
உடல் சூட்டைத் தனித்து குளிர்ச்சியாக வைத்திருக்க, வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் தேய்த்து, தலைக்கு குளிக்க வேண்டும். ஷாம்பூவைத் தவிர்த்துவிட்டு, அரப்புத்தூள், சீயக்காய் உபயோகிக்கவும். நீர்க்காய்களான புடலை, சுரைக்காய், வெள்ளரிக்காய், பீர்க்கன், வாழைத்தண்டு போன்றவற்றையும் இளநீர், நுங்கு, தர்பூசணி, நீர்மோர் ஆகியவற்றையும் உட்கொள்ள வேண்டும்.