ஷூக்களில் வண்ணம் தீட்டி கை நிறைய சம்பாதிக்கலாம்! (மகளிர் பக்கம்)

Read Time:8 Minute, 0 Second

கொரோனா… அந்த இரண்டு வருடம்… பலரின் வாழ்வில் பலவித மாற்றங்களை ஏற்படுத்தியது என்பதை மறுக்க முடியாது. பலரின் வாழ்வை பாதித்தாலும், சிலருக்கு நன்மை பயக்கும் விதமாகவும் அமைந்துள்ளது. இந்தக் காலக்கட்டத்தில் பலர் தங்களுக்குள் ஒளிந்திருந்த திறமையை வெளியே கொண்டு வந்தனர். ஒருசிலர் தங்களின் ஆர்வத்தினை கண்டறிந்து அவர்களின் சிந்தனைகளை வளர்த்துக்கொள்ளவும் பெரும் வாய்ப்பாக இருந்தது. சாதாரணமாக நம் வீட்டுத் தோட்டத்தில் செடிகளை வளர்ப்பது முதல் அவற்றில் விளைந்த காய்கறிகள், பழங்களை விற்பது வரையில் அனைத்திலும் மக்கள் தங்களின் ஆர்வத்தினை வளர்த்துக்கொண்டனர்.

அப்படி அமைந்த கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி தன்னை ஒரு இளம் பெண் தொழிலதிபராக மாற்றியுள்ளார் ஹரியானாவை சேர்ந்த ப்ரதீபா. இவரின் வருமானம் ஆண்டுக்கு 26 லட்சம். இந்த கொரோனா காலத்தில் தன்னுடைய கிராமத்து பெண்களுக்கு கை கொடுத்து உதவியுள்ளார் என்பதில் ப்ரதீபா மட்டுமில்லாமல் அவரின் தாயார், நண்பர்கள் என அனைவரும் பெருமிதம் அடைகின்றனர்.

வண்ணம் தீட்டுவதில் ஆர்வம் உள்ள ப்ரதீபா, அடிப்படையில் ஒரு உணவியல் நிபுணர் (Dietician). ஆரோக்கியம் சார்ந்து படித்திருந்தாலும் ப்ரதீபாவிற்கு, எந்த ஒரு பொருளையும் அழகுபடுத்தி காட்ட வேண்டும் என்பதில் மிகவும் ஆர்வம் அதிகம். அவரின் எண்ணத்திற்கும், ஆர்வத்திற்கும், கொரோனா காலகட்டம் மிகப் பெரிய தோள் கொடுத்தது. முழு ஊரடங்கின் காரணமாக கல்லூரி இயங்கவில்லை. வேலைக்கும் செல்ல முடியாத சூழல். வீட்டிற்குள்ளே அடைந்து இருக்கும் அந்த நாட்களை வீணாக்க விரும்பாமல், ஓவியம் தீட்டுவதில் தன் கவனத்தை முழுமையாக செலுத்தியுள்ளார். அவரின் அந்த முயற்சிக்கு முழு பலனும் விரைவிலேயே கிடைக்கத் தொடங்கியது.

நாம் கடைகளில் வாங்கும் ஷூக்கள் ஒரு சில வகைகளில் மட்டுமே கிடைக்கும். சில சமயங்களில் நாம் விரும்பும் நிறத்திலோ, நாம் விரும்பும் அமைப்பிலோ, தரத்திலோ கிடைக்காது. அதனால் கடைகளில் இருக்கும் ஏதேனும் ஒரு வகையான ஷூவை வாங்கிக் கொண்டு வந்திடுவோம். ஒரு சிலர் அவர்கள் நினைக்கும் ஷூக்கள் கிடைக்கவில்லை என்றால் எதுவுமே வாங்காமல் ஏமாற்றம் அடைவதும் வழக்கம்.

இவர்களின் விருப்பத்தைதான் ப்ரதீபா பூர்த்தி செய்து வருகிறார். இவர் வாடிக்கையாளர்கள் கேட்கும் வண்ணத்திலும், டிசைனிலும், தரத்திலும், தோல் வகை ஷூக்களிலோ, கான்வாஸ் ஷூக்களிலோ வண்ணம் தீட்டி, அவர்களுக்கு விருப்பப்பட்ட டிசைனை வடிவமைத்து விற்பனை செய்து வருகிறார்.வளர்ந்து வரும் பலருக்கும் சமூக வலைத்தளங்கள் முக்கிய ஆதாரமாக உள்ளது. சமூக வலைத்தளங்களின் பயன்பாட்டை அறிந்த ப்ரதீபா, அதன் மூலமே தனது வண்ணங்களுக்கு உயிர் கொடுக்க நினைத்து அதில் வெற்றியும் கண்டார். ஆரம்பத்தில், தனக்கு பிடித்த முறையில் வடிவமைத்த ஷூக்களின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடத் தொடங்கினார்.

தற்போது, வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விருப்பத்திற்கேற்ப இதுவரையில் 232 கான்வாஸ் மற்றும் தோல் ஷூக்களும் வடிவமைத்து 19 நாடுகளில் விற்பனை செய்து வருகிறார். ஷூக்களுக்கு வண்ணம் தீட்டுவது, ஓவியம் வரைவது என்பது தனித்துவமான ஒன்றாக தெரிந்ததாகவும், அதற்காகவே இதை தேர்ந்தெடுத்ததாகவும் ப்ரதீபா கூறுகிறார்.

எந்த வகையான ஷூக்களில் எல்லாம் வண்ணம் தீட்ட முடியும்..? எதில் எல்லாம் ஓவியம் வரைய முடியும் எனவும் அப்படி அவர் உபயோகப்படுத்தியதில், கான்வாஸ்களுக்கும், லெதர் ஷூக்களுக்கும் எப்படி தனித்தனி பெயின்ட்களை (oil painting, acrylic paints) பயன்படுத்தியுள்ளார் என்பதையும் விளக்கியுள்ளார். தான் முதன்முதலில் செய்த பெயின்டிங் சரியான முறையில் வராததால், இதனை விட்டுவிடாமல் ஷூ பெயின்டிங் மீதுள்ள ஆர்வத்தினாலும், அதற்காக தனியாக ஆராய்ச்சியும் மேற்கொண்டுள்ளார்.

இது மட்டுமில்லாமல் பலவகையான பெயின்டிங்கையும் முயற்சி செய்துள்ளார். இவர் ஒரு ஜோடி ஷூக்களுக்கு வண்ணம் தீட்ட மூன்றிலிருந்து ஐந்து மணி நேரம் வரையிலும், சற்று சிக்கலான வடிவமைப்பு கொண்ட ஷூக்களுக்கு வண்ணம் தீட்ட ஒரு வாரம் வரையிலும் ஆகும் என்கிறார். அத்தோடு எப்படி ஒரு சாதாரண வெள்ளை நிற ஷூவை பேஸ்டல் நிறங்களில் மாற்றியது எனவும், அதற்கான முறைகளையும் கூறியுள்ளார்.

வாடிக்கையாளர் கேட்கும் டிசைன்களை வரைந்து வண்ணம் தீட்டுவது மட்டுமே முதன்மையாக கொண்டுள்ள ப்ரதீபா அவற்றை பேக் செய்து வாடிக்கையாளர்களின் முகவரிக்கு அனுப்ப தனது கிராமத்தில் உள்ள பிற பெண்களின் உதவியையும் கோரியுள்ளார். மொத்தம் எட்டு பெண்கள் ப்ரதீபாவின் கீழ் வேலை செய்கின்றனர். இதில் வரும் வருமானத்தின் மூலமே தங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்கின்றனர்.

கடந்த ஆண்டில் மட்டுமே ஷூ பெயின்டிங்கில் 26 லட்சங்கள் சம்பாதித்ததாகவும் கூறியுள்ளார் ப்ரதீபா. ஓவியம் வரைதல், வண்ணம் தீட்டுதல் மட்டுமில்லாமல் டிஜிட்டல் பெயின்டிங் மற்றும் வாடிக்கையாளர் கேட்கும் பெயரில் லோகோக்களும் உருவாக்கி தருகிறார். திறமையுள்ள பிற மக்களின் கைவண்ணத்தை காட்சிப்படுத்தும் விதமாக விரைவில் ஒரு ஸ்டார்ட்டப் கம்பெனி துவங்க உள்ளதாகவும், அதில் உலகளாவிய வாடிக்கையாளர் மற்றும் விற்பனையாளர்களையும் ஒன்றிணைக்க போவதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் ப்ரதீபா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஹெட்போன் ஆபத்து…அலெர்ட் ப்ளீஸ்! (மருத்துவம்)
Next post புர்கா!! (மகளிர் பக்கம்)