
விதைகளில் இருக்கும் மருத்துவ குணங்கள்!! (மருத்துவம்)
ஒவ்வொரு விதைகளிலும் ஒவ்வொரு மருத்துவ குணங்கள் பரவி கிடக்கிறது. விதைகளில் இருக்கும் மருத்துவ குணங்கள் பற்றி இங்கு பார்ப்போம்.
வேப்ப விதை
வேப்ப விதைகளில் மேல் ஓடுகளை எடுத்துவிட்டு பருப்புகளை அரைத்து விஷம் கடித்த இடத்தில் தடவினால் சிறு விஷம் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கும். வேப்பவிதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் வாத நோய்களை குணப்படுத்தும். வேப்ப விதையினை எரித்து அதிலிருந்து வரும் புகையை நுகந்தால் தலையில் உள்ள நீர் இறங்கும். நரம்புத் தளர்ச்சி உள்ளவர்கள் வேப்ப எண்ணெய்யை தடவி வந்தால் நரம்புகள் வலுவடையும்.
முருங்கை விதை
முருங்கையின் முற்றிய விதையை எடுத்து பொடி செய்து பாலில் கலந்து கொதிக்க வைத்து ஒரு மண்டலம் அருந்தி வந்தால் இழந்த தாதுவை மீண்டும் பெறலாம். மேலும் நரம்புத் தளர்வு, உடல் சோர்வு, ரத்த சோகை முதலியவற்றைக் குணப்படுத்தும். முருங்கை விதையை பொடி செய்து தேனில் கலந்து காலை, மாலை உண்டுவர மேற்கண்ட
பாதிப்புகளிலிருந்து விரைவில் மீளலாம்.
மாங்கொட்டை
மாம்பழத்தில் உள்ள விதையின் பருப்புகளை எடுத்து நிழலில் உலர்த்தி பொடித்து வைத்துக் கொண்டு அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கடுப்பு, வயிற்றுப் புண் நீங்கும். மேலும் மூலச் சூட்டைக் குறைக்கும். சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்.
புளியங்கொட்டை
புளி விதையின் மேல் உள்ள ஓட்டை காயவைத்து பொடி செய்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரக நோய்கள் நீங்கும். பெண்களுக்கு வெள்ளைப்படுதல் நீங்கும்.
புங்கன் விதை
புங்க விதையில் உள்ள பருப்பு தோலில் ஏற்படும் புண், கரப்பான், அலர்ஜி இவற்றைப் போக்கும். இதன் எண்ணெய் வெப்பக் கட்டியைத் தடுக்கும். கண் நோய்களைக் குணப்படுத்தும். காட்டுப் புங்கன் விதை வாதக் கோளாறுகளைக் கட்டுப்படுத்தும். கருப்பை நோய்களை போக்கும்.
வாதுமை பருப்பு
கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் குணப்படுத்தும். எப்போதும் சோம்பலாக இருப்பவர்கள் வாதுமைப் பருப்பை பாலில் கொதிக்க வைத்து தினமும் அருந்திவந்தால் தாது பலப்படும். சோம்பல் நீங்கும்.