சின்னம்மை (Chicken Pox)..!! (மருத்துவம்)

Read Time:13 Minute, 32 Second

பெரும்பாலும்‌ வெயில்‌ காலம்‌ வந்தாலே நாம்‌ அனைவரும்‌ எங்காவது ஊட்டி, கொடைக்கானல் போன்ற குளிர்பிரதேசங்கள் போய்வரத் துடிப்போம். அந்த அளவிற்கு வெயிலின் தாக்கம் நம்மை வாட்டி எடுக்கும். குளிர்பிரதேசங்கள் போய்வர முடியாவிட்டாலும் குறைந்தது குளிர்ந்த நீரையாவது குளிக்கவோ, குடிக்கவோ தேடுவோம். இப்போது தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் வேறு ஆரம்பித்துவிட்டது.

பெரும்பாலும்‌ வெயில்‌ காலங்களில்‌ தான்‌ மனித உடலில்‌ உள்ள நோய்‌ எதிர்ப்புச்‌ சக்தி சிறப்பாக செயல்பட ஆரம்பிக்கும். ஆனால்‌ இந்த கோடைக்காலத்திற்கென சில தொற்று நோய்களும்‌ பரவும்‌, அப்படி வெயில்‌ காலங்களில்‌ பரவக்கூடிய நோய்களில்‌ ஒன்றுதான்‌ இந்த “சின்னம்மை” நோய். இது இப்போது நம் நாட்டில் பரவ தொடங்கிவிட்டது. இது எவ்வாறு மனித உடலை பாதிக்கிறது, இதை குணப்படுத்த ஆயுர்வேதம் கூறும் வழிமுறைகள் யாவை என விரிவாக பார்ப்போம்‌.

ஆங்கிலத்தில் பெரிய அம்மையை Smallpox என்றும் சின்னம்மையை chickenpox என்றும் அழைப்பர். நாம் இங்கு அறியப்போவது சின்னம்மையை (chickenpox) பற்றி.
‘‘வேரிசெல்லா ஜாஸ்டர்‌” எனும்‌ வைரஸ்‌ கிருமி‌ மூலமாகத்தான்‌ சின்னம்மை நோய்‌ ஏற்படுகிறது. இது பொதுவாக நோயாளியின் மூக்கு, தொண்டை, மூச்சுக்குழல்,
அம்மைக்கொப்புளங்கள் ஆகிய இடங்களில் வசிக்கும்.

இது கொப்புளங்களிலிருந்து வரும்‌ நீர்‌ கசிவு மற்றவர்கள்‌ மேல்‌ நேரடியாக படுவதினாலும், மேலும்‌ நோயுற்ற ஒருவர்‌ தும்மும்போதும் இருமும்போதும் மற்றவர்களுக்குச்‌ சுலபமாக பரவுகிறது. அதிலும்‌ நோய்‌ எதிர்ப்பு சக்திக்‌ குறைவாக இருப்பவர்களிடம்‌ எளிதாக பற்றிக்‌ கொள்கிறது.சின்னம்மையின் ஆரம்பகால அறிகுறிகளாக தலைவலி, காய்ச்சல், பசியின்மை, உடல் சோர்வு, பலவீனம், வீக்கம், அரிப்பு, உடல்‌ வலி மற்றும்‌ தோலின்‌ நிறம்‌ மாற்றம்‌, வயிற்று வலி போன்றவை காணப்படும்.

தோல் தடிப்புகளின் தோற்றமானது மூன்று கட்டங்களாக மாறும். ஆரம்பத்தில் ஆங்காங்கே இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறத்தில் சிறு கொப்புளங்களாக தோற்றமளித்து, பின்னர் சிறிய திரவம் நிரப்பப்பட்ட கொப்புளங்களாக மாறி, அந்த கொப்புளங்கள்‌ வெடித்து அதிலிருந்து வெளிவரும்‌ நீர்‌ மற்ற இடங்களில்‌ பட்டு புதிய கொப்புளங்களாக உருவெடுக்கும். இறுதியாக சிரங்குகளாக மாறி ஆறி தழும்பாக மாறும்.

பொதுவாக, சின்னம்மையானது ஒரு லேசான தீவிரமற்ற மற்றும் சுய-கட்டுப்படுத்தும் தொற்றாகவே வருகிறது. ஆனால் குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்களுக்கு இது தீவிரமாக மாறக்கூடும். மேலும் சின்னம்மை காலங்களில் ஆஸ்பிரின் எடுத்துக்கொள்பவர்களுக்கு நிமோனியா, மூளையில் வீக்கங்கள், ரேயிஸ் அறிகுறிகள் மற்றும் நீர்ப்போக்குகள் போன்ற தீவிரமான சிக்கல்களை ஏற்படுத்தும். சில சமயங்களில் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தால், அது மரணத்திற்கும் கூட வழிவகுக்கும்.

இது 5 முதல் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அதிகம் பாதிக்கிறது என்றாலும், வயதானவர்களுக்கு வரும்போது நீண்ட நாள் தாக்கி பல உபாதைகளை ஏற்படுத்தும்.
இது பொதுவாக மார்பு, முதுகு மற்றும் முகத்தில் முதலில் தோன்ற ஆரம்பித்து பின்னர் உடலின் மற்ற பகுதிகளுக்கு பரவும். இதில் வாய், கண் இமைகள் அல்லது பிறப்புறுப்பு பகுதிகள் கூட பாதிப்படையும். ஒரு மனிதனுக்கு சராசரியாக 250 முதல் 500 கொப்புளங்கள் கூட வரும். பொதுவாக அனைத்து கொப்புளங்களும் ஒரு வாரத்தில் சிரங்குகளாக மாறி ஆற ஆரம்பித்துவிடும்.

ஆயுர்வேத கண்ணோட்டம்‌

ஆயுர்வேதத்தில்‌ ‘‘லகு மசூரிகா” அல்லது ‘‘மசூரிகா” என்று சின்னம்மை குறிப்பிடப்படுகிறது. ‘‘மசூரிகா” என்ற சொல்லில் மசூரி என்ற வார்த்தை “மைசூர் பருப்பை” குறிப்பதாக உள்ளது. ஏனெனில் இவ்வியாதியில் மைசூர் பருப்பை ஒத்த சிவப்பு நிற கொப்புளங்கள் உடல் முழுவதும் வருவதாலேயே இவ்வாறு அழைக்கப்படுகின்றது அதிக உப்பு, கசப்பான அல்லது புளிப்பு சார்ந்த உணவுகளை உண்ணுவதாலும்‌, பொருந்தாத உணவுகள்‌ (எடுத்துக்காட்டாக மீன்‌, பாலுடன்‌) சேர்ந்து உண்ணுவதாலும்‌, அசுத்தமான பட்டாணி அல்லது பச்சை காய்கறிகள்‌ மற்றும்‌ அதிகப்படியான உணவு உண்ணும் பழக்கம்‌ ஆகியவைகளால்‌ உடல் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து சின்னம்மை உருவாகுவதாக ஆயுர்வேதம் எடுத்துரைக்கின்றது.

சின்னம்மை ஏற்கனவே வந்திருந்தால் அவர்களுக்கு ‘‘ஷிங்கிலிஸ்” என்னும் அக்கி வர வாய்ப்பு அதிகமாக உண்டு. இது பெரும்பாலும் ஒரு நரம்பையோ அல்லது அந்த நரம்பு மேல் உள்ள தோலையோ பாதிப்புக்குள்ளாக்கி கொப்புளம், அரிப்பு, சீழ் மற்றும் அதிகப்படியான வலி மற்றும் எரிச்சலை உருவாக்கும். இது ஒருவரை ஒரு மாதத்திற்கு மேல் கஷ்டப்படுத்தலாம். சின்னம்மை 5 பேரில் ஒருத்தரை அவரின் வாழ்நாளில் ஏதோ ஒரு பகுதியில் பாதிக்கிறது. இது எந்த வயதிலும் ஏற்படலாம்.

சின்னம்மையால் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளவர்கள் யார்?

* கர்ப்பத்தின் எட்டு மற்றும் 20 வாரங்களுக்கு இடையில் அல்லது கர்ப்பத்தின் இறுதி இரண்டு வாரங்களில் பெண்களுக்கு இது ஏற்பட்டால், மோசமான வளர்ச்சி, சிறிய தலை அளவு, அறிவுசார் குறைபாடுகள் மற்றும் கண் பிரச்சனைகள் உள்ளிட்ட பிறப்பு குறைபாடுகளுடன் குழந்தைகள் பிறக்கலாம். 7 சதவீத குழந்தைகள் இறந்தே பிறக்கலாம் அல்லது பிறந்தவுடன் இறக்கலாம்.

*பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் வசிக்கும் வயதானவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

*ஒரு நபருக்கு ஏதேனும் நோய் அல்லது மருந்து காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடும் நிலையில் கவனம் தேவை.

*சின்னம்மை குழந்தைகளுக்கு ஏழு முதல் பத்து நாட்கள் நீடிக்கும். பெரியவர்களுக்கு நீண்ட காலம் நீடிக்கும்.

*பெரியவர்களுக்கு மிகவும் ஆபத்தானது – கவனம் தேவை.

நோய் உள்ளவர்கள் பாதுகாப்பிற்காக என்னென்ன செய்ய வேண்டும்‌?

*அம்மை காரணமாக உடலில்‌ வெப்பம்‌ அதிகமாக இருக்கும்‌ என்பதால்‌ குளிர்ச்சியான அறையில்‌ புண்கள்‌ ஆறி உதறும்‌ வரை இருப்பது சிறந்தது.

*அம்மை நோயாளிகளை வீட்டில் தனிமைப்படுத்துவது நல்லது. இந்த நோயாளிகள் பயன்படுத்திய பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது.

*நமது முன்னோர்கள்‌ வேப்பிலையை பரப்பி அதன்‌ மேல்‌ அம்மையால்‌ பாதிக்கப்பட்டவர்களை படுக்க வைப்பார்கள்‌ ஏனென்றால்‌ வேப்பிலை ஒரு கிருமி நாசினி என்பதால்‌ அம்மை புண்களுக்கு மிகவும்‌ நல்லதானாலும் இதில் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால் சுத்தமாக இல்லாத வேப்பிலையின்‌ மேல்‌ படுக்கும்போது அம்மைப்‌ புண்களில் மேலும் கிருமி தொற்று ஏற்பட்டு மேலும் பல உபத்திரங்களுக்கு வழிவகுக்கும்.

வீட்டு வைத்தியம்‌

சந்தனத்தை பன்னீரில்‌ குழைத்து உடைந்த கொப்புளங்கள்‌ இருக்கும்‌ இடங்களில்‌ தடவி விடுவது சருமத்தை குளிர்விக்க செய்யும்‌.

வேப்ப இலைகளை எடுத்து நன்றாக மசித்து பாதிக்கப்பட்ட இடத்தில்‌ தடவி விடலாம். கிருமி நாசினி என்னும்‌ பண்பை கொண்டுள்ளதால்‌, இது பல தோல்‌ நிலைகளுக்கு சிகிச்சை அளிப்பதில்‌ பயனுள்ளதாக இருக்கும்‌. மஞ்சளை வாய்‌ வழியாக கொடுக்கும்‌ போது உடலில் ஏற்படும்‌ அரிப்புகளை குறைக்கிறது.

அம்மை நோயை தடுப்பது எப்படி?

கோடை காலங்களில் ஒரு நாளைக்கு இரு முறை குளிப்பதும், வாரத்தில் இரு நாட்கள் தலைக்கு செக்கில் ஆடின நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பதும் அதிக சூடு இல்லாத இளஞ்சூட்டில் குளிப்பதும் நல்ல சுகாதாரத்தையும் ஆரோக்கியத்தையும் தரும்.சுய சுத்தம் பேணுவதும் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்வதும் சின்னம்மையைத் தடுக்க உதவும் சிறந்த வழிகள்.
உடலிற்கு குளிர்ச்சியை தரக்கூடிய நீர் சத்துள்ள காய்கறிகளான பூசணிக்காய், புடலங்காய், சௌ சௌ, நூக்கல், வெண்டைக்காய், வெள்ளரி போன்றவையும் தர்பூசணி, நுங்கு, கிர்ணி, இளநீர் போன்றவையும் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆயுர்வேத சிகிச்சை

சின்னம்மை வெயில் காலங்களில் வரும் ஒரு பொதுவான நோயாக இருந்தாலும் அதற்கு தக்க சிகிச்சை எடுத்துக்கொள்வது நோயை சுலபமாக குணப்படுத்தும். மேலும் அக்கி போன்ற உபத்திரவங்கள் வராமல் தடுக்கும். எனவே ஒரு தக்க ஆயுர்வேத மருத்துவரை அணுகுவது நல்லதாகும். கசாய மருந்துகளாக அம்ருதா சடங்கம்‌ கசாயம்‌, நிம்பாதி கசாயம்‌, சின்னருஹ்வாதி கசாயம்‌, குலூச்யாதி குவாதம், அமிர்தோத்தரம் கஷாயம், படோல கதுரோஹிண்யாதி கஷாயம் ஆகியவை மாத்திரைகளான பஞ்ச நிம்பதி குளிகா, வில்வாதி குளிகா, சஞ்சீவனி வடி, சுதர்சன வடி ஆகியவையுடன் சேர்த்து சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.

மேலும் சூரண (பொடி) மருந்துகளான சுதர்சன சூரணம்‌, அவிபதி சூரணம் மற்றும் இதர மருந்துகளான அம்ருதாரிஷ்டம், ராசசிந்தூரம், அப்ரக பஸ்மம் பயன்படுத்த நல்ல பலன் கிடைக்கும்.  மேல்பூச்சு மருந்துகளாக கரஞ்சபீஜாதி லேபம், கார்விராதி லேபம், ஏலாதி லேபம், மனஷிலாதி லேபம் ஆகியவை நல்ல பலன் தரும்.

பத்தியம்‌ உணவுகளாக பாசிப்பயிறு, மாதுளை, திராட்சை, கஞ்சி வகைகள்‌, கசப்பு சுவை காய்கறிகள்‌ ஆகியவை நோயின் தாக்கத்தை குறைக்க உதவும். அபத்தியமாக உடல்‌ பயிற்சி, கடுமையான வேலை, பகல்‌ உறக்கம்‌, எண்ணெய் வகைகள்‌, கடினமான உணவுகள், பொரித்த மற்றும்‌ தாளித்த உணவு வகைகள்‌, புளிப்பு பழ வகைகள்‌ ஆகியவை தவிர்ப்பது நல்லது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post சுட்டெரிக்கும் கோடை வெயிலை எளிதாக சமாளிக்க!! (மருத்துவம்)
Next post செரிமானத்தைக் கூட்டும் பானகம்!! (மருத்துவம்)