மக்கள் மீட்பு தொடர்பில் புளொட் தலைவர் சித்தார்த்தன் ஜனாதிபதிக்கு கடிதம்..!!
புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன் அவர்கள், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களுக்கு நேற்றையதினம் கடிதமொன்றினை அனுப்பிவைத்துள்ளார். அக்கடிதத்தில், ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்களை யுத்த பூமியிலிருந்து மீட்டெடுத்தமை மாத்திரமல்லாமல், அவர்களைத் தொடர்ந்து பராமரிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார். அத்துடன் அவர்கள் தங்களுடைய சொந்த வீடுகளில் சென்று குடியேறினால் தான் உண்மையான சுதந்திர வாழ்க்கையை அவர்கள் நெடுங்காலத்திற்கு பின்பு வாழமுடியும் என்பதையும் சுட்டிக்காட்டி, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். மற்றும் மதகுருமார் பலர் அகதி முகாம்களில் இருப்பதனால் அவர்களுடைய மத அனுஸ்டானங்களின் பிரகாரம் அவ்வாறு வாழமுடியாத நிலைமையில் உள்ளதாகவும், எனவே மதகுருமார் தனியான ஓரிடத்தில் வாழக்கூடிய வகையிலான ஏற்பாடுகளைச் செய்து கொடுக்குமாறும் கேட்டுள்ளார். பொதுவாகவே மதகுருமார்கள் உரியமுறையில் பராமரிக்கப்பட வேண்டுமென்பதைச் சுட்டிக்காட்டிய புளொட் தலைவர் சித்தார்த்தன், இந்து மதகுருமார்க்கு விசேட பிரச்சினைகள் பல உள்ளதையும் குறிப்பிட்டார். குறிப்பாக அவர்கள் மற்றையவர்கள் சமைத்த உணவுகளை உண்ண முடியாத சில விசேட பிரச்சினைகள் அவர்களுக்கு உள்ளன. எனவே சகல மதங்களைச் சேர்ந்த குருமார்களையும் அவர்களுக்கென ஒரு தனி இடத்தில் தற்காலிகமாக வைத்திருப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் புளொட் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Average Rating