இலண்டனில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்; பிரிட்டிஷ் பாராளுமன்றில் பெரும் வாதப் பிரதிவாதம்
இலண்டன் நகரில் தமிழர்கள் நடத்தி வரும் ஆர்ப்பாட்டம் தொடர்பாக பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் பெரும் வாதப் பிரதிவாதங்கள் ஏற்பட்டுள்ளன. பிரிட்டிஷ் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படுத்தி வருவதாக பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் சபாநாயகரின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளனர். நேற்று முன்தினம் பாராளுமன்ற பொதுச் சபையில் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையைத் தோற்றுவித்ததாக ஏஜன்ஸி செய்திகள் தெரிவித்தன. ஆர்ப்பாட்டக்காரர்களின் சட்டவிரோதமான செயற்பாடுகளுக்கு எதிராக, பொலிஸார் எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லையென்றும் பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் மிக்காயில் மார்டினிடம் முறையிட்டுள்ளனர். இதற்குப் பதிலளித்த சபாநாயகர் மார்டின், ஆர்ப்பாட்டம் செய்வது ஒரு ஜனநாயக உரிமையானாலும் எவரும் பாராளுமன்ற சதுக்கத்தை முற்றுகையிட்டு, வீதிகளில் தடைகளை ஏற்படுத்துவார்களென்று எதிர்பார்க்கவில்லை. இது தொடர்பாக மேலதிக தகவல்களைப் பெற்றுத் தருகிறேனென்றும் சபாநாயகர் தெரிவித்துள்ளார். “புலிகள் இயக்கம் பிரிட்டனில் தடை செய்யப்பட்டுள்ளது. எனினும், ஆர்ப்பாட்டக்காரர்கள் புலிக்கொடிகளைத் தாங்கிய வண்ணம் இருந்துள்ளனர். இதன் மூலம், தடை செய்யப்பட்ட ஓர் இயக்கம் இந்த ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் இருப்பது புலனாகிறது” என்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Average Rating